Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalவிஷ்ணுபதி புண்ய காலம் !

விஷ்ணுபதி புண்ய காலம் !

மஹிமை மிக்க,வாழ்வில் வளம் சேர்க்கும், சௌபாக்ய – ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலம்.

வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை.

வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில்…

பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள்…

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள்…

27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்யுங்கள்…

பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள்…

தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்…

மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மஹாவிஷ்ணுவுக்கு உரியவை…விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம்…

அன்றைய தினத்தில் அதிகாலை 1:30 மணி முதல்
காலை 10:30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது.
முழுமையாக 9மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.

பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவர்…

ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது…

விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக் குச் சென்று பெருமாளை வழிபட வேண்டியது அவசியம்.

இந்த புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லாதேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம்.

அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்.வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மிகுதியான பலன்களைக் கொடுக்கும். மகாலக்ஷ்மி பூஜை,துளசி பூஜை, கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்கு ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்கு தகுந்தவாறு செய்யலாம்…

அதே போன்று அன்றைய தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று…

ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது, பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன…

இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலக ஆதாயமான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்பு மிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம், ஆன்மிக முன்னேற்றம், மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தர வல்லது இந்த புண்ய காலம் ஆகும்…

எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல், எல்லோரும் இந்த புண்ய காலத்தை முழுமையாகக் கடைப் பிடித்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெறுவோமாக!!!

ஓம் நமோ நாராயணா !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 8 =

Most Popular