பைரவ வடிவங்கள் என்னென்ன?
மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் செயல்படுகின்றனர். சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன. சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சி தருகிறார்கள்.
1. அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் . இவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அன்ன பறவையினை வாகனமாக கொண்டு அருள்செய்கிறார். நவகிரகங்களில் குருவின் கிரக தோஷத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.
2. ருரு பைரவர் அஷ்ட பைரவ வடிவங்களில் இரண்டாமவர் ஆவார். காசி மாநகரில் காமாட்சி கோவிலில் ரிஷபத்தினை வாகனமாகக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்
3. சண்ட பைரவர் அஷ்ட பைரவ வடிவங்களில் மூன்றாவதாகும். காசி மாநகரில் துர்க்கை கோவிலில் மயிலை வாகனமாகக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோஷத்திற்காக இவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.
4. குரோதன பைரவர் நான்காவது தோற்றமாகும். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.
5. உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ வடிவங்களில் ஐந்தாவதாகும். காசி பீம சண்டி கோவிலில் குதிரையை வாகனமாகக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்..
6. கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தங்களில் ஆறாவது தோற்றமாவார்.காசியில் லாட் பசார் கோவிலில்யானையை வாகனமாக்கிக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.
7.பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்திகளில் ஏழாவதாகும். காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் சிங்கத்தை வாகனமாக்கிக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்..
8.சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். காசி மாநகரில் திரிலோசன சங்கம கோவிலில் நாயை வாகனமாகக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் விளங்கும் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசிவிஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசியில் காலபைரவர் எட்டு இடங்களில் கோயில் கொண்டுள்ளார். இதனை பைரவ சேத்திரம் என்றும் கூறுகின்றனர்.
