ஹோரைகள் என்றால் என்ன? ஹோரைகளை எவ்வாறு கணக்கிடுவது?
தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதுவே, அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை (ஹோரை) என்று கூறப்படுகின்றது.
ஒருநாள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. சராசரி சூரிய உதய நேரமாக காலை 6 மணியை அடிப்படையாக கொண்டு தான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன. ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்று சித்தர்கள் கூறுவதில் இருந்தே அதன் சிறப்பை அறியமுடியும்.
உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய சூரியன். அவருடைய ஓரை காலை 6 மணிக்கு தொடங்கும். செவ்வாய்க்கிழமையை எடுத்துக் கொண்டால் செவ்வாயினுடைய ஓரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஓரையானது ஆரம்பிக்கும்.
ஓரை உள்ள கிரகங்கள்:
9 கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது இரண்டும் சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அந்த இரண்டு கிரகங்களுக்கு மட்டும் ஓரைகள் கிடையாது.
ஓரைகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஜோதிட சாஸ்திரப்படி நாளொன்றுக்கு இருபத்து நான்கு ஓரைகளாக அதாவது ஒரு மணி நேரத்திற்கு ஒரு ஓரை என்ற கணக்கில் பிரிக்கப்பட்டு ஏழு கிரகங்களுக்கு இந்த ஓரைகளை ஆட்சி செய்யும் உரிமை சுழற்சி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுழற்சி முறையின் படி ஒவ்வொரு நாளும் அன்று என்ன தினம் இருக்கிறதோ அதன் ஓரையே முதலில் வருவதாக அமைந்திருக்கும்.
சுப ஓரைகள்:
ஓரைகளில், திங்கள், புதன், குரு, சுக்கிரன் ஆகியவைகள் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும், இந்த ஓரைகளில் தொடங்குவது வெற்றியை கொடுக்கும். பொதுவாக புதன் – குரு – சுக்கிரன் ஆகிய ஓரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதே போல் வளர்பிறையில் சந்திரனுடைய ஓரையும் நல்ல காரியங்கள் செய்வதற்கு சிறந்ததாகும்.
