வசதியான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்?
இரவு நேரங்களில் நாம் வானத்தை பார்க்கும் போது பச்சை நிறத்தில் ஒளிரும் புதன் கிரகத்தை அவ்வளவு எளிதில் நம்மால் அடையாளம் காண முடியாது. எனவே தான் பொன் எனப்படும் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் குரு கிரகத்தை கண்டு விட்டாலும், புதன் கிரகத்தை காண முடியாது என்கிற அடிப்படையில் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்ற பழமொழி உண்டானது. நமக்கு அந்த புதன் கிரகத்தால் நன்மைகள் ஏற்பட செய்ய வேண்டியது என்ன என்பது இங்கே தெரிந்துகொள்ளலாம்.
நவக்கிரகங்களில் ஒருவரான புதன் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் அவர் இருக்கும் வீடு மற்றும் சேர்க்கை பெறும் கிரகங்கள், பார்க்கப்படும் கிரகங்களின் தன்மையை பொறுத்து நமக்கு பலன்கள் ஏற்படும். மிதுன லக்னத்திற்கு லக்னாதிபதியான புதன் மிதுனத்தில் இருந்தாலும், புதனுக்கு உச்ச ராசியான கன்னி ராசியில் இருந்தாலும், அந்த ஜாதகருக்கு சிறந்த அறிவாற்றல் இருக்கும். மிக உயரிய கல்வியை கற்றுத் தேறுவார்கள். ஜாதகருக்கு பெரும்பாலும் சொந்த வீடு இருக்கும். ஓரளவு வசதி பெற்ற குடும்பமாக இருக்கும்.
சொகுசான வாழ்க்கை வாழும் யோகம் இந்த ஜாதக அமைப்பைக் கொண்ட நபர்களுக்கு நிச்சயம் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் கன்னி ராசியிலேயே புதன் கிரகம் இருந்து, அந்த புதன் கிரகம் சுப கிரகங்களால் பார்க்கப்பட்டால் அந்த ஜாதகருக்கு சாமர்தியம், புத்திசாலித்தனம் அதிகமிருக்கும். சூழலுக்கேற்ற முடிவெடுத்து செயல் புரிவதில் வல்லவராக இருப்பார்.
எந்த ஒரு புதிய கல்வி, கலை சார்ந்த விடயங்களிலும் வெகு சீக்கிரத்தில் கற்று திறம்பட செயலாற்றுவார்கள். படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். தனது சொந்த உழைப்பின் மூலம் மிகுதியான செல்வத்தை ஈட்டுவார். கணிதம், ஜோதிடம், எழுத்துத்துறை, ஓவியம், சிற்பம், புத்தகம் வெளியிடுதல், தகவல் தொடர்பு போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார். ஒரு சிலர் வியாபாரத்திலும் சிறப்பாக செயல்பட்டு மிகுந்த பொருளீட்டி ஆடம்பரமான வாழ்க்கையை மிக நன்றாக அனுபவித்து வாழ்வார்கள்.
ஜாதகத்தில் புதன் பாதகமான நிலையில் இருப்பவர்களும், புதன் திசையால் பாதக பலன்களை அனுபவிப்பவர்களும், உங்களின் பிறந்த நட்சத்திர தினத்தில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அல்லது திருவெண்காடு கோயில்களுக்கு சென்று வழிபட வேண்டும். புதன் கிழமைகள் தோறும் காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாளை வழிபடுவதும் புதன் பகவானால் நன்மைகள் ஏற்பட வழிவகை செய்யும் சிறந்த பரிகாரமாகும்.
