மனதின் அழுக்கு!
ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி சிவபுராணம் படித்துக் கொண்டே இருப்பார். இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான் ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான் தாத்தா எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படித்து கொண்டு இருக்கீங்களே இதை எத்தனை நாளா படிக்கிறீங்க என்றான்.
பெரியவர் சொன்னார் ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் அப்படி என்றால் இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்குமே அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க என்றான். தாத்தா சிரித்தபடி கூறினார் எனக்கு ஒரு உதவி செய் அதை நீ செஞ்சு முடித்த பிறகு நான் பதில் சொல்றேன் என்றார் இளைஞன் கேட்டான் என்ன உதவி தாத்தா பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார் அதில் அடுப்புக் கரி இருந்தது அதை ஒரு மூலையில் கொட்டினார்.
பல நாட்களாகக் கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது பெரியவர் சொன்னார் தம்பி அதோ அங்கே இருக்குற தண்ணீர் பைப்புல இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன் என்றார். இளைஞனுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால் எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான் அவன் வந்து சேருவதற்கு முன்பே எல்லா நீரும் மூங்கில் கூடையின் ஓட்டைகள் வழியே தரையில் ஒழுகிப் போனது பெரியவர் சொன்னார் இன்னும் ஒரே ஒரு முறை இளைஞன் மீண்டும் முயன்றான்.
ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும் மீண்டும் கீழே கொட்டிப் போனது பெரியவர் கேட்டார் இந்த தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் தண்ணீர் நிரப்பி பாரேன் என்றார். இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான்
இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம் அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது தண்ணீர் பிடித்தான் வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.
தாத்தா இந்தாங்க உங்க கூடை இதில் தண்ணீர் நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்துறீங்க என்றான் அவர் புன்னகையோடு சொன்னார். இதில் தண்ணீர் நிற்காதுன்னு எனக்கும் தெரியும் நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது என்றார். இளைஞன் சொன்னான் ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது இப்போ பார் என்றார் தண்ணீர் பட்டு பட்டுக் கரிக்கட்டைகளின் கறுப்பு நிறம் கலைந்து கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது.
பெரியவர் சொன்னார் தம்பி நீ கேட்ட கேள்விக்கு பதில் இது தான் எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை ஆனாலும் ஒவ்வொரு முறையும் நீரில் நனைய கூடை சுத்தமாயிடிச்சு. அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு சிவ புராணம் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது
ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும் கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும் என்றார்.
அந்த வார்த்தைகளின் உண்மை அந்த இளைஞனின் மனதில் ஆழ்ந்து யோசிக்க செய்தது. இறைநாமம் சொல்ல, சொல்ல,
“நம் மன அழுக்குகள் அகலும்”…!!
பக்தி காவியங்கள் படிக்க, படிக்க…..,
“இறை சிந்தனை பெருகும்”….!!
“மனசஞ்சலம் விலகும்”…..!!
