உயிரானது மனித உடலை விட்டு நீங்கும் போது கண், நாசி (அ) உரோமக் கால்கள் வழியே நீங்குகிறது. ஞானிகளுக்குக் கபாலம் வெடித்து நீங்கும். பாவிகளுக்கு அபான வழியாக நீங்கும்.
மறுபிறவி:
காமக் குரோதர்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் உயிர் நீங்கும் போது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும். சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவி அடைகிறான். மாயையோடு கூடிய தேகம் எல்லாப் பிராணிகளுக்கும் உரியதாகும். சமஸ்த லோகங்களுக்கும் உரிய சம்ஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்.
1. அனைத்துத் தானங்களிலும் சிறந்தது பருத்தி தானம். அதுவே மகாதானம் ஆகும். பூணூலுக்கும், மானங்காக்கும் ஆடைக்கும் பருத்தியே பயனுடையது. ஆதலால் அதுவே சிறப்புடைத்து. மேலும் பருத்தி தானம் செய்தால், வாழ்நாள் முடியும்போது சிவலோக வாசம் பிராப்தியாகும். மேலும், இத்தானத்தால் மாமுனிவர்களும், பிரம்ம, ருத்திர, இந்திராதி தேவர்களும் திருப்தி அடைவர். இத்தானம் செய்தவன் மீண்டும் பிறந்து யாவரும் புகழ நெடுங்காலம் வாழ்ந்து சொர்க்கமடைவான்.
2. திலதானம், கோதானம், புவி தானம், சொர்ணதானம், தானிய தானம், ஆகியவை பாபங்கள் அனைத்தையும் விலக்கிவிடும். இவற்றை உத்தம பிராமணர்களுக்கே தானமாக அளிக்க வேண்டும்.
(தானங்கள் செய்வதற்குச் சிறந்த காலம் ஜீவன் மரிக்கும் காலமே. கிரகண புண்ணிய காலத்திலும் கொடுக்கலாம்)
3. ஒருவன் மரிக்கும்போது திலம், இரும்பு, லவணம், பருத்தி, தானியம், பொன், பூமி, பசு ஆகியவற்றைத் தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும். எள், இரும்பு தானத்தால் யமன் மகிழ்ச்சி அடைவான். லவண தானம் யமபயம் நீக்கும். தானிய தானம் கூற்றுவன். அவன் தூதர்களுக்கு மகிழ்ச்சி தரும். சொர்ண தானம், கோதானம் பாவத்தை அழிக்கும். மரணமடைபவன் பகவானைத் தியானித்து, அவன் நாமம் உச்சரித்தால் அவன் நிரதிசய வீடாகிய வைகுந்தம் அடைவான்.
யமன் ஆயுதங்களாகிய கூடாரம், முசலம், சூரிகை, தண்டம் யாவும் இரும்பால் ஆனவையே. எனவே இரும்புதானம் யமனை மகிழ்விக்கும். அந்தக் கிரகத்தில் யமதூதர்கள் கால் வைக்க அஞ்சுவர். சர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஜம்பூதங்கள், தானப் பொருள்கள், இந்திராதி தேவர்கள் யாவும் பகவான் விஷ்ணுவே. கொடுப்பவனும், எடுப்பவனும் அந்த பகவானே. ஒருவன் புத்தியைப் பாவபுண்ணியங்களில் நாடச் செய்வதும் அந்த விஷ்ணுவே.
தொடரும்…
விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
