சிருஷ்டி தொடங்கி நடைபெற்று வரும்போது எல்லோரும் அவரவர் தொழிலைச் செய்யத் தொடங்கினர்.
ஆற்றல் மிக்க யமதர்மராஜன் ஜைமினி நகரில் அரியாசனத்தில் அமர்ந்து ஜீவர்களின் பாவபுண்ணியங்கள் பற்றி ஆராயத் தொடங்கினான். ஆனால், சேதனர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை அவனால் அறிந்து கொள்ள இயலவில்லை. யமன் நான்முகனை அடைந்து பாவ புண்ணியங்களை அறிந்து கொண்டு, அதற்குத் தக நடக்கவும் தனக்கு அருள் புரியுமாறு வேண்டினான்.
அதைக் கேட்ட பிரம்மன் ஒரு தர்ப்பைப் புல்லைக் கொண்டு நீண்ட கண்கள், அழகு, அகக்கண் கொண்டு புண்ணிய பாவங்களை அறிந்து இயமனுக்கு உதவ பன்னிருவரைத் தோற்றுவித்தார். அவர்களே பன்னிரண்டு சிரவணர்கள். இயமன் அவர்களுடன் தென்புலம் அடைந்து சேதனர்களின் பாவபுண்ணியங்களை அறிந்து அதற்கேற்ப காத்தும், தண்டனை அளித்தும் வரலானான். உலகில் ஒரு ஜீவனின் இறுதிக்காலம் முடிந்தவுடன் அங்குஷ்ட அளவில் வாயு வடிவிலான ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர். தர்மவான்கள் கர்ம மார்க்கமாகவே வைவஸ்வத நகரம் என்னும் யமபுரிக்கு அழைத்துச் செல்லப்படுவர். சான்றோர்க்குப் பொன், பொருள் வழங்கியோர் விமானங்களில் ஏறிச் செல்வர். பெரியோர்கள் விரும்பியவற்றை விரும்பியவாறே அளித்தவர்கள் குதிரை மீதேறிச் செல்வர். வீடுபேற்றை விரும்பி வேத சாஸ்திர புராணங்களை அறிந்த பக்தர்கள் தேவ விமானம் ஏறி தேவருலகம் செல்வர்.
இவற்றில் சேராத பாவிகள் கால்களால் நடந்தே செல்வர். அவ்வழியில் கூர்மையான இலைகள் கொண்ட செடி, கொடிகளும், வறுத்துக் கொட்டிய மணல்களும் நிறைந்திருக்கும். அவ்வழியில் போகும் போது மிகவும் வருத்தம் ஏற்படும். ஜீவன் வாழும்போது சிரவணரைப் பூசித்து இருந்தால் அவர்கள் அந்த ஜீவனின் பாவங்களைப் பொருட்படுத்தாமல், புண்ணியங்களை மட்டுமே யமனிடம் சொல்வார்கள். சிரவணரைப் பூசிப்பவர்களுக்குப் பாவம் செய்ய மனமே இடம் தராது. பன்னிரண்டு கலசங்களில் நீர் நிரப்பி, அன்னம் தயாரித்து அக்கலசங்களைச் சிரவணர்களாகவே எண்ணி அந்தணர்க்குத் தானம் செய்ய வேண்டும். அந்த ஜீவன்களுக்குச் சிரவணர்கள் யமலோகத்தில் எல்லா நன்மைகளையும் செய்வர்.
தொடரும்…
விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!
