ஆதி திருவரங்கம் ரங்கநாதர் கோவிலின் வரலாற்று கதை!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இங்கு அருள்மிகு ரங்கநாத பெருமாள் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் வரலாற்று கதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஆலயத்தின் சிறப்பு:
இவ்வாலயத்தில் அருள்பாளிக்கும் மூலவர் ரங்கநாத பெருமாள் மற்றும் தாயார் ரங்கநாயகித் தாயார் ஆகும். இவ்வாலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் அமைந்துள்ளது. தீர்த்தம் பெண்ணையாறு ஆகும்.
வரலாற்று கதை:
இந்த ஆதிதிருவரங்கம் திருத்தலத்தில் ஆலயத்தின் தானியக்களஞ்சியம் பிரமாண்ட தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இந்த நெற்களஞ்சியம், மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. கீழ்ப்பாகம் நெல்தானியமும், நடுபாகம் கம்பும், மேல்பாகம் கேழ்வரகு தானியங்களும் சேமித்து வைக்கப்பட்டன. வறட்சி காலங்களில் சேமித்து வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அன்னதானம் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. நெற்களஞ்சியத்தின் மேற்பாகத்தில், அன்னலட்சுமி தாயார் சிலை சிறப்பாக அமையப்பெற்றுள்ளது.
மன்னர்கள் காலத்தில், கோவில்களை நிர்மாணித்துப் பராமரிக்க, ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மானியமாக கொடுத்தனர். அந்த மானிய நிலங்களில் விவசாயம் செய்து அதில் வரும் விளைச்சலில் ஒரு பங்கை கோவிலுக்கு வரியாக செலுத்தவேண்டும்.
அப்படி கிடைக்கும் அதிகப்படியான தானியங்களை சேமித்து வைக்க கோவில்களில் பெரிய களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன. இன்று நம் பாரம்பரிய விவசாய வரலாற்றை சொல்லும் அடையாளச் சின்னங்களாக நிற்கிறது தானிய களஞ்சியங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கோவில் தானிய களஞ்சியம் இன்று மக்களுக்குக் காட்சிப் பொருளாக நிற்கிறது.
ஆதிதிருவரங்கம் கோவிலின் ராஜகோபுரத்திற்கு அருகிலே அமைந்துள்ளது இந்தக் களஞ்சியம். இதன் வரலாற்றை கோவில் மண்டபத்தில் அமர்ந்தவாறு சொன்னார், அந்தக் கிராமத்தின் 91 வயதானவரான ஜெயராமன், “வட ஆற்காடு, தென் ஆற்காடு என மொத்தம் 12 காடுகள் இந்த பகுதியில் ஆதிகாலத்தில் இருந்தது. இதில் ஆதி திருவரங்கம் தென் ஆற்காடு முடியும் இடத்திலும், வட ஆற்காடு துவங்கும் இடத்திலும் இருக்கிறது. ‘காடு’ என்று சொல்லப்பட்ட ஊர்களை இப்போது நாடு என்று சொல்கின்றனர்.
இதில், ‘நடுநாடு’ என்பது இந்த பகுதி. இந்த நாட்டை செழிப்பாக வைத்திருந்தது வட பெண்ணையாறுதான் (கோவிலின் வடக்கே பெண்ணையாறு செல்வதால், இதனை வட பெண்ணையாறு என்கிறார்). திருக்கோவிலூரில் இருந்து ஆதி திருவரங்கம் வரையில் கோவிலுக்கு சொந்தமாக ஆதிகாலத்தில் 400 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தது. இது காலப்போக்கில் குறைந்து 100 ஏக்கராக சுருங்கிவிட்டது.
மன்னர்கள் காலத்தில் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட மானிய நிலங்களில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் விளைச்சலில் ‘ஆறில் ஒரு பங்கு’ தானியத்தைக் கோவிலுக்கு வரியாக கொடுக்க வேண்டும்.
அப்படி கிடைக்கும் தானியங்களை சேமித்து வைப்பதற்காக மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த களஞ்சியம். வரி மூலமாக கிடைக்கும் நெல், வரகு, கேழ்வரகு, கம்பு மாதிரியான தானியங்களை கனத்தம் கட்டி (களஞ்சியத்தின் சேமிக்கும் பகுதியில் தடுப்பு ஏற்படுத்துவது) வைத்திருந்தனர். களஞ்சியத்தினை மூன்று அறைகளாக பிரித்து அமைத்திருக்கின்றனர். இந்த களஞ்சியத்தில் சேமிக்கும் தானியத்தைக் கொண்டு கோவில்களில் வேலை செய்பவர்களுக்கு தானியங்களை சம்பளமாக கொடுத்துள்ளனர்.
யோக சயனத்தில் காட்சியளிக்கும் பெருமாள்:
இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. முதல்யுகம் மற்றும் முதலாவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது. இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்கதர்களுக்கு வழங்குகிறது. அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம். இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர். போகம் என்றால் மகிழ்ச்சி எனப் பொருள்.
அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது. அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியிள்ளார். அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீதி வைத்துள்ளார். அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார். அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன.
அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது. வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறுள்ளது.
இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தளமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.
கோவில் விழாக்கள்:
சித்திரை பத்து நாள் வசந்தோற்சவம் வைகாசி வைகாசி விசாகம் ஆனி சந்தன தைலத்தால் எண்ணெய் காப்பு- ஆனித்திருமஞ்சனம், ஆடி பெண்ணெ நதிக்கரையில் ஆடிப்பெருக்கு, ஆவணி கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி நவராத்திரி மண்டபத்தில் நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகை கார்த்திகை தீபம், மார்கழி திருப்பாவை, தெருபஜனைகள், பரமபதவாசல் திறப்பு முதலியவை இவ்வாலயத்தில் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
