திருப்பதி லட்டு பிரசாதம் வரலாறு!
திருப்பதி கோயிலில் லட்டு வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளை கடந்து தொடர்கிறது. திருப்பதியில் கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.
1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியிலிருந்து ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைக்கப்படுகிறது. திருப்பதியில் முதலில் பிரசாதமாக அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. இவை அனைத்தும் விரைவில் கெட்டுப்போக கூடியவை என்பதற்காக கடந்த 1803ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு உதிரியாக பூந்தி வழங்கப்பட்டு வந்தது.
முன்னர், முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே முழு லட்டு வழங்கும் நடைமுறை இருந்தது.
1940-ம் ஆண்டிலிருந்துதான் பக்தர்கள் அனைவருக்கும் பூந்திக்குப் பதிலாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை லட்டுதான் பிரசாதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் லட்டு ஒன்று எட்டு அனாவிற்கு விற்கப்பட்டது. தற்போது பக்தர் களுக்கு சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டும், கூடுதல் லட்டு ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு அளவும் குறைந்துவிட்டது. ஆனாலும், சுவையும் மணமும் மாறாமல் திருமலையான் அருள் போலவே பக்தர்களைச் சொக்கவைக்கிறது.
இந்த திருப்பதி லட்டுக்கு ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைக்கு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது. தற்போது, 307 வயதைக் கடந்து, 308 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள திருப்பதி லட்டு பிரசாத விற்பனை மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட தேவஸ்தானம் கணக்கிட்டிருக்கிறது.
புவிசார் குறியீடு
திருப்பதி லட்டை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்கும்விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டுக்கு 2008 ஆண்டு புவிசார் குறியீட்டுக்கு பதிவுசெய்தது. 2009 ஆண்டு திருப்பதி லட்டு புவியியல் அறிகுறிகள் போன்ற உணவு வகையின் கீழ் ஜி.ஐ. சட்டம் 1999 படி பதிவு செய்யப்பட்டது. இதனால் மற்றவர்கள் அதே பெயரில் இனிப்பு தயார் செய்யவும், இதன் பெயரைப் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.
உலகத்தையே தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்த திருப்பதி லட்டுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைப் பெறும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள உற்பத்தி இட அடையாளக் குறியீட்டுப் பதிவகத்திடம் விண்ணப்பித்த திருப்பதி தேவஸ்தானம், எங்கள் ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது.
உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை என்று பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால், திருப்பதி லட்டு என்ற பெயரில் எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே அளவில் சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. இதன் தயாரிப்பு முறையையும் வெளியில் பிரபலப்படுத்த முடியாது. ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தம்
