அருணகிரி நாதர் நாவில் ப்ரணவ மந்திரத்தை எழுதிய கந்தன்
அருணகிரி நாரதரின் வாழ்க்கை வரலாறு:
அருணகிரி நாதர் வட தேசத்திலிருந்து வந்த திருவண்ணாமலை அருகில் முல்லந்திரம் மற்றும் பிற கிராமங்களில் குடியமர்ந்த கௌட பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து வந்தார். இளம் பருவத்திலேயே தமிழ், சமஸ்கிருத மொழிகளை கற்றுத் தேர்ந்திருக்கிறார். அவருக்கு கல்வி நன்கு போதிக்கப்பட்டது. நன்றாக வளர்க்கப்பட்டார்.
பின்னர் திருமணமாகி மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உடன் வாழ்ந்து வந்தார். இந்த நேரத்தில் விபச்சாரிகள் மோக வலையில் சிக்கினார். சிற்றின்ப சேற்றில் மூழ்கினார். தனது செல்வங்களை எல்லாம் அவர்களுக்காக செலவிட்டார். இதன் விளைவாக எல்லாவற்றையும் இழந்து, பெரு வியாதிக்கு ஆளானார். ஒரு கால கட்டத்தில் தான் செய்த தவறுகளை எண்ணி தானே வெட்கப்பட்டார்.
தீவிர முருக பக்தனான அருணகிரி நாதர்:
வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிந்தார். அப்போது ஒரு முதியவர் அவரைப் பார்த்து முருகனை வழிபடுவதிலும், தியானிப்பதிலும், அவரிடம் பிரார்த்தனை செய்வதிலும் நேரத்தை செலவிடுமாறு அறிவுரை கூறினார். அதன்படி திருவண்ணாமலை கோயில் கோபுரத்தின் அடியில் அமர்ந்து தியானித்தார். ஆனாலும் மனம் அமைதி பெறவில்லை. இறுதியில் தான் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடவும், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்தார்.
கோவில் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்றார். முருகனை பிரார்தித்தார். கோபுரத்திலிருந்து கீழே குதித்தார். அவர் பூமிக்கு அருகில் வரும் போது முருகப்பெருமான் தனது கரங்களால் தாங்கிப் பிடித்துக் கொண்டார். பின்னர் தனது வேலால் அருணகிரி நாதரின் நாவில் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை எழுதினார். ஒரு ஜெப மாலையையும் தந்து, தனது புகழை பாடுமாறு அருளானைப் பிறப்பித்தார்.
அருணகிரி நாதர் இயற்றிய கந்தர் அனுபூதி:
பாடுவதற்கு ஏதுவாக ‘முத்தைத்தரு’ என்ற முதலடியையும் எடுத்துக் கொடுத்தார். பாவியான அருணகிரிநாதர் நொடிப்பொழுதில் இறைஞானம் பெற்ற பரமஞானியாக மாற்றம் பெற்றார். அன்றிலிருந்து எப்போதும் முருகப்பெருமானின் புகழைப் பாடும் பணியை மேற்கொண்டார். முருகன் குறித்த பல பக்தி நூல்களை படைத்தார். அதில் ஒன்று தான் சக்தி வாய்ந்த கந்தர் அநுபூதி பாடல்.
