Saturday, October 28, 2023
HomePurana Kathaigalசிவபுராணம் பாகம் 6 - சுயம்வரத்தில் தாட்சாயிணி காதல் வெல்லுமா?

சிவபுராணம் பாகம் 6 – சுயம்வரத்தில் தாட்சாயிணி காதல் வெல்லுமா?

பிரஜாபதியான தட்சன் கூறிய கூற்றுகளை கேட்ட தாட்சாயிணி என்ன செய்வதென்று அறியாமல் நின்றார். தான் ஏற்கனவே தன்னுடைய பதியை தேர்வு செய்துவிட்டதை தன் தந்தையிடம் கூறவும் முடியாமல், தந்தையின் ஆணையை மீறவும் முடியாமல் நிகழ்வது நிகழட்டும் என்று சிவனிடம் பெற்ற வரத்தினை எண்ணி மனதை அமைதியாக்கி தந்தையின் முன்பு தாட்சாயிணி தேவி தன்னுடைய புன்முருவலை பு+த்தார்.

இந்நிலையில் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார், தாரகாசுரனிடம் நீர் எவ்வகையில் முயற்சி செய்தாலும் சதியை உன்னால் கொல்ல இயலாது என்றும் தன் சீடனை அமைதியுடன் செயலாற்றும்படியும் கூறினார். ஆனால், தாரகாசுரன் குருவின் ஆணையை மீறி சதியின் சுயம்வரத்தில் தேவர்கள் போல் வேடம் தரித்து சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது சதியை கொன்று விடுமாறு தன் வீரர்களை அனுப்பினார்.

இம்முறையில் எவ்வித பிழையும் இன்றி சொன்னதை நிறைவேற்றி வருமாறு தன் வீரர்களை எச்சரித்தான் தாரகாசுரன். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாருக்கு தாரகன் கூற்றில் இருந்து ஒன்று புலப்படலாயிற்று.

அசுர குருவான சுக்கிராச்சாரியார் தேவர்களிடம் போரில் ஈடுபடும் பல அசுரர்கள் மாண்டு விடுகின்றனர். வேந்தர்களின் அர்த்தமற்ற வீம்பு மற்றும் பிடிவாதத்தால் அசுர இனத்தில் பல வீரர்களை இழந்துள்ளதை எண்ணி வருந்தி கொண்டு இருந்தார். இவ்விதம் நடக்கும் இறப்புகளை தவிர்க்க சிவபெருமானிடம் இருந்து இறந்தவர்களை உயிர்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என எண்ணினார்.

சஞ்சீவினி மந்திரத்தை அறியும் பொருட்டு சுக்கிராச்சாரியார் சிவனை நோக்கி தவம் செய்ய முடிவு செய்து ஒரு அடர்ந்த வனத்தை தேர்வு செய்து தவம் புரிய அரம்பித்தார். இவ்வேளையில் தட்சப் பிரஜாபதி அரண்மனையில் சுயம்வரம் விழாவிற்கு மூவுலகத்தில் உள்ள தேவர்களும், ரிஷிகளின் வாரிசுகளும் வருகை புரிந்து சுயம்வர மேடையில் தாட்சாயிணியின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் மணமகள் அறையில் தாட்சாயிணி என்ன நிகழுமோ என்று எதுவும் அறியாமல் தன் வாழ்க்கையின் போக்கினை நோக்கி கவலை தேய்ந்த முகத்துடன் காணப்பட்டார். தோழிகள் மற்றும் தன் உடன் பிறந்த சகோதரிகள் முடிந்த மாட்டில் ஆதரவு கூறியும் கலை இழந்த முகத்துடன் தாட்சாயிணி காணப்பட்டார்.

தாரகாசுரனால் அனுப்பப்பட்ட மாறு வேடத்தில் வந்த அசுரர்கள் அரண்மனையின் நுழைவு வாயிலில் நுழைந்து வந்த போது அவர்களின் சுயரூபம் புலனாயிற்று. பின் அந்த அசுரர்களை அரண்மனையின் மெய்காப்பாளர்களால் பிடித்து வெளியேற்றப்பட்டனர். இதைக்கண்ட தட்சன் தன் மகளுக்கு விருப்பமான மணமகன் வந்திருப்பான் என்று முடிவு செய்து நுழைவு வாயிலை மூட தன் பாதுகாவலருக்கு உத்தரவிட்டான். அரசனின் ஆணையை ஏற்று அரண்மணையை சுற்றி உள்ள அனைத்து நுழைவு வாயில்கள் மூடப்பட்டன.

அரண்மனையின் அரியணை பகுதியை அடைந்த பிரஜாபதியான தட்சனை கண்ட அனைவரும் எழுந்து வணங்கினர். அனைவரின் வணக்கத்தையும் ஏற்றுக்கொண்டு அவரவர் இருக்கையில் அமரச் சொன்னார் தட்சப் பிரஜாபதி.

பிரஜாபதியான தட்சனின் சுயம்வர விழாவிற்கு என்னுடைய அழைப்பை ஏற்று வருகைத் தந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்று கூறி தன் மகளான தாட்சாயிணியை சுயம்வர மேடைக்கு வருமாறு அழைத்தார். தன் பெற்ற மகள்களில் அதிக அன்பு கொண்ட செல்லமாக சதி என்று அழைக்கும் தாட்சாயிணியை திருமணக்கோலத்தில் காண மிகுந்த ஆவல் கொண்டனர்.

தன் தோழிகளுடன் கையில் மாலையுடன் திருமணக்கோலத்தில் தன் தந்தையின் ஆணையை ஏற்று தன் மனதில் கொண்ட மையலை மறைத்து சபையில் கூடிய அனைவரின் முன்னிலையில் மகிழ்வில்லாத புன்முருவலுடன் தாட்சாயிணி தேவி வந்தார்.

தந்தையான தட்சப் பிரஜாபதி தன் மகளின் திருமணக்கோலத்தை கண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். பின் சபையின் முன்னிலையில் தன் மகளான தாட்சாயிணி தேவியை அறிமுகம் செய்தார். சபையில் கூடியுள்ள அனைத்து இளவரசர்களின் திறமைகளையும் அவர்கள் ஆளும் பகுதிகளின் வளங்களை பற்றியும் தன் மகளான தாட்சாயிணியிடம் கூறினார்.

தந்தையின் கூற்றை கேட்டுக் கொண்டு இருந்த தாட்சாயிணிக்கு தன் கணவனை தேர்ந்தெடுக்கும் நேரம் இதுதான் என்னவோ என மனம் குளம்பிய நிலையில் முகம் வாட்டத்துடன் காணப்பட்டார். அங்கு வந்த அனைவரின் விவரங்களையும் கூறி முடித்தவுடன் தன் மகளான தாட்சாயிணிடம் மகளே உனக்கு பிடித்த கணவனை இங்கு வந்துள்ள இளவரசர்களில் தேர்வு செய்து கொள்வாயாக என கூறினார் தட்சப் பிரஜாபதி.

தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து சபையின் மையத்தில் இருந்த மேடையில் ஏறி அங்கு வந்த இளவரசர்களை பார்த்துக் கொண்டு இருந்தார். கண்கள் பார்வையிட்டதே தவிர தன் மனதில் சிவன் பற்றிய எண்ணங்களும் புத்தியில் சிவனை பற்றிய சிந்தனைகளும் அலை பாய்ந்தன.

சிவனிடம் இருந்த ஒரு சில நினைவுகளால் மனதில் பற்றற்ற நிலையில் இருந்தார் தாட்சாயிணி. இக்கணம் சிவன் கண் முன் தோன்றினால் அவரிடன் செல்ல மனம் துடித்தது. சிவன் தன்னை மணப்பதாக கூறி வரம் அளித்தார். ஆனால், அவர் இன்னும் வரவில்லையே என எண்ணும் தருவாயில், இவர்களின் பிரிவை இதுவரை அமைதியுடன் கண்டு வந்த இயற்கை இனியும் பொறுக்க முடியாமல் அன்னையின் மனக்குறையை எம்பெருமானான சிவபெருமானிடம் கூறிய தோ அக்கணத்தில் வெண்ணிற புகை அரண் மனை முழுக்க பரவிற்று. அந்த வெண்ணிற புகையின் மையத்தில் சூலாயுதத்துடன் பிறை கூடிய சிவபெருமான் உதயமானார்.

ஓம் நமசிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி….
சிவபுராணம் நாளை தொடரும்….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 16 =

Most Popular