திருக்கண்ணீஸ்வரர் கோயில் வரலாறு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூரில் அருள்பாளிக்கும் கண்ணீஸ்வரர் ஆலயத்தின் வரலாறு பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
ஆலயத்தின் சிறப்பு:
இவ்வாலயத்தின் மூலவர், உற்சவர் கண்ணீஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.
ஆலய அமைப்பு:
இவ்வாலயத்தில் பூர்ணகலா, புஷ்கலாவுடன் அய்யனார் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார் அது இங்கு சிறப்பாகும் . சபரிமலை பக்தர்கள் இந்த சன்னிதியில் இருமுடி கட்டி புறப்படுகின்றனர். ஆஞ்சநேயரும் புடைப்பு சிற்பமாக தெற்கு பார்த்து உள்ளார். வியாபாரம் செழிக்கவும், குடும்ப பிரச்னை தீரவும் பக்தர்கள் இவருக்கு சனிக்கிழமைகளில் பூஜை செய்கின்றனர்.
ஆலய வரலாறு:
முன்னொரு காலத்தில் வீரபாகு பாண்டியனுக்கும், விக்கிரம சோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்தது. விக்கிரமசோழன், பாண்டியன் மீது பலமுறை போர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. எனவே பாண்டியனைக் கொல்ல பலமுறை சதி செய்தான். தொடர்ந்து சதி செய்ததால் ஏற்பட்ட பாவத்தால், விக்கிரம சோழன் பார்வை இழந்தான். தவறை உணர்ந்து, தனக்கு மீண்டும் பார்வை கிடைக்க தேவதானம் என்ற ஊரிலுள்ள சிவனை வழிபட்டான்.
திருக்கண்ணீஸ்வரர்:
அங்கு அவனுக்கு ஒரு கண் பார்வை மட்டும் கிடைத்தது. மற்றொரு கண்ணுக்கு பார்வை கிடைக்க அருள்புரிய வேண்டும் என்று சோழன் வேண்டினான். சிவன் அவன் கனவில் தோன்றி, “தனக்கு ஒரு கோயில் கட்டினால், பார்வை கிடைக்கும்,” என்று கூறி மறைந்தார். அதன்படி சேத்தூரில் அவன் கோயில் கட்டி பார்வை பெற்றான், கண் தந்த சிவனுக்கு ‘திருக்கண்ணீஸ்வரர்’ என்று பெயரிட்டான். இன்றும் கண் பார்வை பிரச்னை உள்ளவர்கள், திருக்கண்ணீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
துர்க்கைக்கு அபிஷேகம்:
செவ்வாய் தோஷத்தால், திருமணம் தாமதமானால், இங்குள்ள முருகனுக்கும், துர்க்கைக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பிரார்த்தனை:
செவ்வாய் தோஷம் நீங்க முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர் இங்கு வரும் பக்தர்கள்.
ஆலய திருவிழாக்கள்:
ஆண்டுதோறும் ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரையில் நடராஜருக்கு அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரத்தில் சுவாமி, அம்பாள் தபசு காட்சி போன்ற விஷேஷங்கள் இங்கு சிறப்பாக நடைபெறும்.
