ருத்திரனைத் திருப்தி செய்ய மூன்று முக்கிய விரதங்கள் உள்ளன. அவை கபாலிக விரதம், பாப்ரவ்யவிரதம், சுத்த சைவ விரதம் என்பன. கபாலிக விரதம் பற்றி இனிக் காண்போம். பிரம்மா, சிவன் இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஆனால், பிரம்மா சிவனைத் தோற்றுவித்த பிறகு ருத்திரனைத் தோள்களில் தூக்கிக் கொண்டு ஐந்தாவது தலையில் உள்ள வாயால் ருத்ரனைத் துதி செய்ய அதில் கபாலி என்ற பெயர் இருந்தது. தன்னை அவமதிப்பதற்காகவே பிரம்மா, கபாலி என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்ற கோபம் கொண்ட ருத்திரன் பிரம்மாவின் ஒரு தலையை இடது கைபெருவிரலால் அகற்றினான். பிரம்மா நான்முகன் (சதுர்முகன்) ஆனான்.
அகற்றப்பட்ட அத்தலை சிவனின் கையிலேயே ஒட்டிக் கொண்டது. பலவகை முயற்சிகளுக்குப் பிறகு ருத்திரன் பிரம்மாவிடமே வந்து தன்கையை விட்டு அத்தலை அகல உபாயம் கேட்டார். பிரம்மா ருத்திரனை கபாலிக விரதம் அனுஷ்டிக்குமாறு கூறினார். (இதனால் சிவன் பிரம்ம ஹத்ய தோஷம் பெற்றார்.)
மந்தர மலைக்கு ருத்திரன் சென்று அத்தலையை மூன்று பகுதியாக்கினார். தலைமுடியை முப்புரியாக்கித் தன் உடலில் பூணூலாகத் தரித்துக் கொண்டார். பல புனிதத் தலங்களுக்குச் சென்று புனித நீராடித் தியானம் செய்யலானார். இறுதியில் அவர் அப்பூணூலையும், மற்ற உடைகளையும் அகற்றி நிர்வாணமானார் (அ) நக்னமானார். இந்நிலையில் ருத்திரன் காசியை (வாரணாசியை) அடைந்தார். அங்கு கங்கை நீரில் மூழ்கி எழ அவர் கையிலிருந்த கபாலம் விடுபட்டது. அத்தகைய பெருமை பெற்றது வாரணாசி நகரம். அப்போது பிரம்மா தோõன்றி ருத்திரன் ஆற்றிய விரதம் இனி நக்ன கபாலி விரதம் எனப்படும் என்றார். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கோரியவை கிடைக்கும். பிரம்மஹத்ய தோஷமும் நீங்கும்.
தொடரும்…
ஓம் நமோ வராஹாய!
