அடுத்து வராகம், பிருதிவிக்கு விஷ்ணுவைப் பூசிப்பதற்கான சடங்குகள் பற்றி கூறிற்று. கார்த்திகை மாதம் துவாதசி திதி இதற்கான நந்நிமித்தம், மங்களகரமானதும் கூட. சந்திரக்கிரகண நாட்களும் சிறந்தவையேயாகும். ஆனால், இத்தகைய விரத காலங்களில் தண்டுலதானம் (அ) சிறிதளவு அரிசி அளிக்க மறந்துவிடக்கூடாது. மறந்தால் உனது நிலை சுவேதன், வினிதஷ்வன் நிலை போல் சங்கடமானதாகி விடும் என்று அவ்விருவர் வரலாற்றினைக் கூறலுற்றார். இளவ்ரிதவர்ஷத்தின் மன்னன் சுவேதன். அவன் பல யாகங்கள் செய்து பொன், ஆபரணங்கள், குதிரைகள், யானைகள் என்று பற்பல தானங்கள் செய்தான். வசிஷ்டர் அவனிடம் அவற்றுடன் அரிசி தானமும் செய்யுமாறு கூறியும், அவன் அந்த அறிவுரையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவன் மரணமடைந்தவுடன் சொர்க்கத்தை அடைந்தான். அவன் விண்ணுலகில் எங்கும் உலவி வந்தான்; அப்சரஸுகளுடன் களித்தான். அவனுக்குப் பலவகையான உணவுகள் கிடைத்தன அரிசியைத் தவிர. அரிசி சோற்றுக்காக அவன் ஏங்கினான். அவன் உலகுக்குத் திரும்பிவந்து அவனுடைய ஈமச்சடங்குகள் நடந்த இடத்தில், அவனுடைய சாம்பல் இன்னும் இருந்தது. எனவே தன் ஏக்கம் தீர அவன் அந்தச் சாம்பலை நக்கினான். அவனுடைய பரிதாப நிலையை, ஒருநாள் அங்கு வந்த வசிஷ்டர் கண்டு அவனிடம் அரிசிதானம் அளிக்காததன் பலன் அது என்று கூறி, நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைப் பெறுவோம் என்று சொல்லியதுடன் வினிதஷ்வன் சரிதத்தைக் கூறினார்.
வினிதஷ்வ மன்னனின் புரோகிதர்கள் அவனிடம் எள், நீர், கருப்பஞ்சாறு, பசு போன்ற உருவமைப்பட்ட வெல்லப்பாகு ஆகியவற்றைத் தானம் கொடுக்குமாறு கூறினார். பதிலாக மேற்படி பொருள்களை ஒரு பானையில் வைத்துத் தானம் கொடுக்கலாம். இதில் பானை பசுவுக்கு சமமாகும். இவற்றுடன் மற்ற உணவுப்பொருள்கள், தங்கம், நகைகள், பாத அணி, குடைகளும் தானம் செய்யலாம். வினிதஷ்வன் அறிவுரைப்படி நடக்காததால் சொர்க்கத்தில் பசியினால் வாடினான். கன்று ஈனும் நிலையில் உள்ள பசுவை நீராட்டி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அலங்கரித்து, ஒரு சற்பாத்திரம் அறிந்து தானம் அளித்தால் ஏற்படும் பலனையும், மகிமையையும் வராகம், பிருதிவிக்குக் கூறிற்று. ஏழையான -ஆனால் நெறி தவறாத அந்தணற்குத் தானம் அளிக்க வேண்டும்.
இத்தகைய சடங்குகளால் சுவேதாவின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு முக்தி கிடைத்தது. இதுவரையில் சொல்லப்பட்டவை எல்லாம் வராக புராணத்தின் பகுதியான வராக சம்ஹிதையில் கூறப்பட்டுள்ளவை.
இவையாவும் பிரம்மனால் போதிக்கப்பட்டு, பின்னர் பிரம்மாவால் பரப்பப்பட்டவை. பிரம்மாவிடமிருந்து முறையே புலஸ்தியர், பரசுராமர், உக்கிரர், மனு ஆகியோருக்குப் பரவியது. சூத முனிவர், சனகாதி முனிவர்கள் இதை மேலும் பரப்புவர். கார்த்திகை மாத துவாதசி அன்று இதைப் படித்தால் வசதிகளும் பரத்திலும் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேறும்.
தொடரும்…
ஓம் நமோ வராஹாய!
