விநாயகர் அகவல் பிறந்த கதை!
ஔவையார் பாடிய சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு என்ற விநாயகர் அகவலை சீர்காழி கோவிந்தராஜன் பாடியது நம் நினைவுக்கு வரும். தித்திக்கும் தேவகானம் அது. விநாயகருக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை அவரே ஔவை பாட்டியிடம் நேரில் தோன்வி அவரை பாடச் சொல்லி தலையாட்டி கேட்ட பாடல் தான் இது.
திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் சுந்தரமூர்த்தி நாயனார் தனது குடும்ப வாழ்க்கையை வெறுத்து, கயிலாயம் செல்ல நினைத்து எம்பெருமான் சிவபெருமானை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை அழைத்துச் செல்வதற்கு ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.
சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நண்பர்களாயிற்றே, ஆதலால், அவரை பிரிய மனமில்லாமல் சேரமான் பெருமாளும் சிவனின் பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம என்ற மந்திரத்தை சொல்லவே அவரது குதிரையும் கயிலாயம் நோக்கி பறந்தது. இதை அறிந்த மன்னரது படைத் தலைவர்கள் மன்னரை பிரிய மனமில்லாமல் அவர்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.
இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். அப்போது ஔவையார் விநாயகருக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட அவர்கள் நீயும் கயிலாயம் வாயேன் பாட்டி என்று அழைக்கவே, பூஜையை முடித்துவிட்டு வருகிறேன் என்று பாட்டி பதிலளித்தாள். அப்போது ஔவை பாட்டி முன் தோன்றிய விநாயகர், நீயும் கயிலாயம் செல்ல வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு பாட்டியோ, நீ இருக்கும் இடமும், உன்னை பூஜிக்கும் இடமும் எனக்கு கயிலாயம் போலத்தான் என்றாள்.
குழந்தைகளுக்காக பாடல் பாடிய நீ, தெய்வக் குழந்தையான என்னைப் பற்றியும் ஒரு பாடல் பாட வேண்டும் என்று விநாயகப் பெருமான் கேட்கவே, சீதக்களப என்று ஆரம்பிக்கும் அகவல் பாடலை பாடினார் ஔவை. பாட்டி பாடுவதை தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்த விநாயகர் பாடல் பாடி முடிந்ததும், தனது தும்பிக்கையால் ஔவை பாட்டியை தூக்கி சுந்தரரும், சேரமான் பெருமாளும் கயிலாயம் வருவதற்குள்ளாக கயிலாயத்திற்கு கொண்டு சேர்த்து விட்டார்.
கயிலாயத்தில் ஔவையை கண்ட சேரமான் பெருமாள், சுந்தரர் இருவரும் பாட்டியிடம் நடந்தவற்றைக் கேட்டனர். அதற்கு பாட்டியோ விநாயகர் முழு முதல் கடவுள். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல் நிலை தான் இருப்பார்கள் என்றாள் பாட்டி. இப்படித்தான் விநாயகர் அகவல் பிறந்தது.
