பீஷ்மரோ கண்ணனைப் பார்த்துக் கூறினார் ‘ என்ன கண்ணா, இன்னமும் உன் திருவிளையாடல் ஓயவில்லையா? உன்னை சாரதியாக்கிக் கொண்டு மகாபாரத யுத்தத்தை நடத்தி முடித்து விட்டாய். எவை எல்லாம் நடக்க வேண்டுமோ அவை அனைத்தையும் சப்தம் இன்றி திறமையாக செய்து காட்டி விட்டாய். நீயே தெய்வம் என்பதை நிரூபித்தப் பின்னரும் அதை அறிந்து கொள்ளாத பாண்டவ சகோதரர்களை இந்த சாமான்யனிடம் ஏன் அழைத்து வந்தாய்? உன்னால் முடியாத காரியமும் உள்ளதா? ஆனாலும் நீ எதோ ஒரு காரணத்துக்காக என்னிடம் இவர்களை அழைத்து வந்துள்ளாய். அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி நீயும் எனக்கு மோட்ஷத்துக்கு வழிகாட்ட வந்துள்ளதற்கு நான் உனக்கு நன்றி கூறியே ஆக வேண்டும்’ என்று கூறிய பின் யுதிஷ்டரைப் பார்த்துக் கூறலானார்.
‘யுதிஷ்டிரா இந்த பிரபஞ்சத்தில் பராசக்தியினால் படைக்கப்பட்ட மகா விஷ்ணுவே கடவுட்களுக்கு எல்லாம் கடவுளாக விளங்குகிறார். அவருக்கு ஆயிரம் நாமகரணங்கள் உண்டு . அந்த நாமத்தை எவன் உச்சரித்து அவரை வணங்குவானோ அவனுக்கே மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். ஆத்மாவில் ஏற்படும் துக்கங்கள் அனைத்தும் விலகி ஓடும். இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் முதலும் முடிவுமாக உள்ள அவரே. அவரே அனைத்து துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து நிலையான மனதுடன் பூஜிப்பானோ அவன் அனைத்து விசனங்களில் இருந்தும் விடுபடுவான். இந்த உலகுக்கு ஒளி கொடுக்கும் சூரியனைப் போல அவரை பூஜிப்பவர்களின் மனதிற்கும் இதயத்திற்கும் அமைதி எனும் ஒளியைக் கொடுப்பார். புனிதம் என்றாலே விஷ்ணு என்று அர்த்தம் தரும் வகையில் உள்ள புனிதமானக் கடவுள் அவர். ஆகவே முதன்மைக் கடவுளான விஷ்ணுவை ஆயிரம் நாமங்களைக் கொண்டு பூஜிப்பதின் மூலமே மன பயத்தில் இருந்தும் இதய பயத்தில் இருந்தும் விடுதலைக் கிடைக்கும்’
இப்படிக் கூறியபின் பீஷ்மர் விஷ்ணு சஹாஸ்ரனாமாவளியில் வரும் ஆயிரம் நாமாக்களையும் மற்றும் அவற்றின் அர்த்தங்களையும், அவற்றின் பலன்களையும் யுதிஷ்டருக்குக் போதித்தார். அப்படி பீஷ்மர் வாய் வழியே உபதேசித்த விஷ்ணு சஹாஸ்ரனாமத்தையே மகாபாரதத்தை வெகு காலத்துக்குப் பின்னர் படைத்த வேத வியாசர் எழுத்து வடிவில் தந்தார் என்பது நம்பிக்கை.
இந்த உலகைக் காக்க விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுக்க வைத்த பராசக்தி விஷ்ணு அவதாரத்தின் மகிமையை அவருடைய ஒரு அவதாரத்தின் மூலமே வெளிப்படுத்த வேண்டும் என விரும்பி அதை மகாபாரத யுத்த முடிவில் விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் மூலம் உலகிற்கு வெளிக் கொண்டு வந்தாள் என்பதினால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை இன்னும் கூடுகிறது. இதன் மூலம் ஹரியும் சிவனும் ஒருவரே என்ற தத்துவம் மேலும் வலுப்பெறுகிறது.
வேத வியாசரும் ஆதி சங்கரரும்
இந்த சஹஸ்ரநாமத்தின் பெருமை பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் மூலம் உலகிற்குப் மேலும் பரவியது என்பதும் உண்மை ஆகும். ஏன் என்றால் அந்த பராசக்தியான அம்பிகைதான் அவருக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் முக்கியத்துவத்தை அறிய வைத்தாள். பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரருக்கும் இந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இந்த கதையை படியுங்கள். ஒருமுறை பகவத் பாதாள் ஸ்ரீ ஆதிசங்கரர் காஷ்மீரத்தில் தங்கி இருந்தபோது (காஷ்மீரத்தில் பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரரின் ஆலயம் கூட உள்ளது) அவர் லலிதாம்பிகையின் சஹஸ்ரனாமாவளிக்கு ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என விரும்பினார். லலிதா சஹஸ்ரநாமம் என்பது ஹயக்ரீவர், மகாவிஷ்ணு மற்றும் அகஸ்திய முனிவர்களுக்கு இடையே ஏற்பட்ட சம்பாஷணை மூலம் படைக்கப்பட்டது என்று பிருமாண்ட புராணம் மூலம் அறியப்படுகிறது.
பண்டாசுரனை அழிப்பதற்காக அவதரித்த லலிதாம்பிகை அவனை வதம் செய்தப் பின் ஆனந்தமாக ஸ்ரீபுரம் எனும் தனது இருப்பிடத்தில் அமர்ந்திருந்தபோது அங்கு அவளால் படைக்கப்பட்டு இருந்த வசினி என்னும் தேவதையின் தலைமையில் இருந்த வாக்தேவிகள் ஸ்ரீ சக்கிரத்தில் அமர்ந்திருந்த லலிதாம்பிகையின் புகழை மந்திரங்களின் வாயிலாகப் பாடுகின்றனர். லலிதாம்பிகையின் வாயில் இருந்து வெளிவந்த வாசினிகள் என்ற தேவதைகள் துதித்த நாமாவளியே லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று எனக் கூறுகிறார்கள். அந்த நாமாவளியை வாக்தேவதைகள் லலிதாம்பிகையின் பெருமையை ஆயிரம் பெயர்களைக் கூறி அவளை ஆராதிக்கும் விதத்தில் அமைத்து இருந்ததினால் அதை ரகஸ்ய நாமாவளி என்றும் அதை உச்சரித்து தேவியை வழிபடுவது பல பலன்களை தரும் என்பார்கள். உண்மையில் பார்வதியே அந்த இடத்தில் சாந்தநாயகியான லலிதாம்பிகை என்ற ரூபத்தில் இருந்தாள். அந்த இடத்தில் அகஸ்திய முனிவரும் வந்து லலிதா நவரத்னமாலா எனும் பாடலை தானே இயற்றிப் பாடினாராம்.
ஆகவேதான் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அந்த நாமாவளிக்கு அர்த்தம் தரும் ஒரு பாஷ்யம் எழுத வேண்டும் என காஷ்மீரத்தில் அப்போது தற்காலிகமாகத் தங்கி இருந்த ஸ்ரீ ஆதிசங்கரர் விரும்பினார். அவர் தமது சீடரை அழைத்து அங்கிருந்த புத்தகசாலையில் ( லைப்ரரி) சென்று தேவி நாமாவளியை எடுத்து வருமாறுக் கூறினார். சீடர் அங்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்தார். சீடர் எடுத்து வந்த புத்தகம் விஷ்ணுவின் ஆயிரம் நாமாவளியைக் கொண்ட புத்தகமாக இருந்தது. ஆகவே தவறாக எடுத்து வந்துவிட்ட அந்த புத்தகத்தை வைத்து விட்டு லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வருமாறு ஸ்வாமிகள் தமது சிஷ்யரிடம் கூற அவர் சிஷ்யரும் மூன்று முறை உள்ளே சென்று புத்தகத்தைக் கொண்டு வந்தாலும் மூன்று முறையும் அவர் கொண்டு வந்த புத்தகம் விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்ததாம். மீண்டும் மீண்டும் தான் கேட்டதைத் தவிர வேறு புத்தகத்தையே ஏன் எடுத்து வருகிறாய் என சிஷ்யரிடம் ஸ்ரீ பாகவத் பாதாள் கேட்டதும் அந்த சிஷ்யர் கூறினாராம் ‘ ஸ்வாமி என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் சென்று நீங்கள் கூறிய புத்தகத்தை எடுக்க முயன்றபோது அங்கிருந்த ஒரு சிறுமி, இதுதான் நீ தேடும் அந்த புத்தகம் என ஒரு புத்தகத்தைத் தந்தாள். நானும் அவள் கூறியதை நம்பி அவள் கொடுத்த புத்தகத்தை எடுத்து வர வேண்டியதாயிற்று’ என்றதும் ஸ்ரீ பாகவத் பாதாளுக்கு புரிந்தது இதை செய்வது அந்த அம்பிகைதான். அவளால் இந்த பிரபஞ்சத்தின் நம்மைக்காக அவளால் படைக்கப்பட்ட விஷ்ணுவின் நாமத்திற்கு முதலில் பாஷ்யம் எழுத வேண்டும் என்பதினால்தான் இப்படி செய்கிறாள். அந்த உண்மையை உணர்ந்து கொண்டவர் முதலில் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதிய பின்னரே லலிதா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினர். இதில் இருந்தே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.
