Tuesday, October 17, 2023
HomePurana Kathaigalநீ எதை செய்கிறாயோ, அது தான் திரும்ப வரும் - குட்டிக் கதை!

நீ எதை செய்கிறாயோ, அது தான் திரும்ப வரும் – குட்டிக் கதை!

நீ எதை செய்கிறாயோ, அது தான் திரும்ப வரும் – குட்டிக் கதை!

ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் ஒன்று இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு 9 கிமீ தூரத்தில் இருக்கும் டவுன் வரை
நடந்து சென்றே தினந்தோறும் ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்.

முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார். கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்.
இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்.

பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை. கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்.
காரணம் கந்தசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்த ஒன்று.
ஒரு நாள் கந்தசாமி 10 கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார். சிறிது நேரத்தில், 10 கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க அவருக்காக மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது.

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை. கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே. இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே. அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்.

நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார். நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார். ‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி. அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது. வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார், பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார்.

‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி.
அய்யா என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார். இத்தனை வருடங்களாக கந்தசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும். அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது. இது தான் உலகநியதி. நாம் எதைத் தருகிறோமோ, அதுதான் நமக்குத் திரும்ப வரும் நல்லதை தந்தால் நல்லது வரும்,
தீமையை தந்தால் தீமை வரும், வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம், ஆனால் நிச்சயம் வரும்.

எனவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 7 =

Most Popular