காப்பு
அண்டங்கள் ஏழினோ டேழும் அப் பாலுமாய்
ஆன எம் ஞான தேவா!
அறுகுடன் தும்பையும் ஆத்தியும் கொன்றையும்
அணிசெய்யும் அழகு மார்பா
எண்டிசை நடுங்கவே இறைவனார் தேரின் அச்(சு)
இற்றிடச் செய்த வீரா
இலகு புகழ் முனிசொல்ல உலகுபுகழ் பாரதம்
எழுதிடும் கவிதை நேசா!
தண்டையொடு கிண்கிணி சதங்கையும் கொஞ்சவே
சந்தடை கொள்ளும் பாதா!
சரவணன் அறுமுகன் மணமகன் ஆகவே
தண்ணளி புரிந்த ஈசா
தெண்டிரை சூழுலகில் தேவிராஜேஸ்வரியின்
தெய்வமாக் கருணை பாட
சித்தமிசை குடி கொண்ட தத்துவ விநாயகா
திருவருள் தந்து நீகா!
சிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம்
திகழ வருகதிரின் உதயம்
தேசு மிகு மாணிக்கம், திரு ஏறு கமலம் அச்
செங்கமலம் அஞ்சு பவழம்
மந்தாரம் மழை நாளில் வரும் இந்தர கோபம் அவ்
வண்டூ ரும் மலையில் நறவம்
மான்மதம், செங்குருதி போன்மலரும் மாதுளம்
மாதுளம் சிதறும் முத்தம்
செந்தீயின் வண்ணம் என வேசொல்லு(ம்) மேனியும்
செப்பரிய அழகு வடிவும்
சிங்கா தனத்திலும் சிவனார் மனத்திலும்
சீர் கொண்டிலங்கும் எனினும்
எந்தாய்நின் பேர் சொல்லும் ஏழையேன் அறிவிலும்
என்றென்றும் திகழ அருள்வாய்!
இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி
இமயமலை வாழும் உமையே!
மலைமகள் சரணம்…..
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
