வாழ்வில் நலம் சேர்க்கும் அபிராமி அந்தாதி பாடல்கள்!
அபிராமபட்டர் அவர்களால் இயற்றப்பட்ட அபூர்வமான மிகவும் சிறப்பு வாய்ந்த அபிராமி அன்னையின் அருள் பெற்று வியாபாரம், தொழில் போன்றவை சிறப்படைவதற்குரிய மந்திரங்கள்…
“ஆத்தாளை எங்கள் அபிராம
வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்
தாளைப் புவி அடங்கக்
காத்தாளை ஐங்கரணை பாசாங்
குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு
வார்க்(கு) ஒரு தீங்கில்லையே”
விளக்கம்:
இந்த உலகங்கள் அனைத்தையும் படைத்துக் காப்பவனான அன்னை அபிராமி இந்த உலகத்தின் தாயாக விளங்குகிறாள். மாதுளம்பூ போன்ற நிறத்தைக் கொண்டவள் அவள். தன்னுடைய திருக்கரங்களிலே மலர் அம்புகளையும், அங்குசத்தையும், பாசத்தையும், கரும்பு வில்லையும் கொண்டு திகழ்பவள். மூன்று கண்களுடன் விளங்கும் ஒப்பற்ற தாயானவள் அவள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அம்பிகையை வணங்குபவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
1.“தனம் தரும் கல்வி தரும் ஒரு
நாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும்
தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லவை எல்லாம்
தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபி
ராமி கடைக் கண்களே”
விளக்கம்:
மேகத்தின் கருமையான நிறத்தைக் கொண்டு விளங்கும் கூந்தலைக் கொண்ட அபிராமி வல்லியின் கடைக்கண்கள் உயர்ந்த கல்வியைக் கொடுப்பதுடன், சிறப்பான செல்வத்தையும் தரும். சோர்வே இல்லாத நல்ல மனதைத் தரும். தெய்வீகத் தன்மை பொருந்திய பேரழகைத் தரும். வஞ்சனை சிறிதும் இல்லாத நல்ல சுற்றத்தைக் கொடுக்கும். இவை மட்டுமல்ல, அனைத்து நன்மைகளையும் தரும்.
எனவே, இத்தகையச் சிறப்புகளைத் தரும் அன்னை அபிராமியை நாமும் வணங்கி வேண்டி வியாபாரம், தொழில் இவைகள் சிறக்க அபிராமபட்டர் இயற்றிய மந்திரத்தை உச்சரிப்போம்.
பொருள் சேர்த்து புகழ்பெறுவதற்கு:
2.“பொருளே பொருள் முடிக்கும் போக
மேஅரும் போகம் செய்யும்
மருளே மருளில் வருந்தெரு
னேஎன் மனத்து வஞ்சத்(து)
இருளேதும் இன்றி ஒளிவெளி
யாகி இருக்கும் உன்றன்
அருளே (து) அறிகின்றிலேன்
அம்புய தனத்(து) அம்பிகையே”
விளக்கம்:
எல்லாப் பொருள்களாகவும் அதாவது பொன், மணி வெள்ளி போன்ற சிறந்த உலோகப் பொருட்களாக மட்டுமன்றி, நெல் போன்ற தானியமாகவும் திகழ்பவள் அபிராமி. இத்தகையச் சிறப்புப் பெற்ற அபிராமியை வழிபடுவதால் வியாபாரம் பெருகும். தொழில் சிறக்கும்.
எல்லாச் செல்வங்களும் இனிதே பெற:
3.“நயனங்கள் மூன்றுடை நாதனும்
வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம
வல்லி அடியிணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர்
ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்து தமனியக்
காவினில் தங்குவரே.”
இந்தச் சிறப்பான மந்திரம் தொழில் சிறக்க உதவுவதால், அன்னையை வணங்கி இதனைப் பக்தி உணர்வுடன் உச்சரிக்க வேண்டும்.
எல்லா நலன்களையும் பெற:
4.“நன்றே பெருகினும் தீதே
விளைகினும் நான் அறிவே (து)
ஒன்றேயு மில்லை உனக்கே
பரம் எனக்(கு) உள்ள எல்லாம்
அன்றே உளதென்(று) அளித்துவிட்
டேன்அழி யாதகுணக்
குன்றே அருட்கடலே இம
வான் பெற்ற கோமளமே”
எல்லாவிதமான நன்மைகளையும் நாம் பெறுவதற்கு அன்னையின் அருள் கறைவறப் பெற வேண்டும். “எல்லாம் நீயே” என்று சரணடைந்து விட்டால் எந்தவிதமான துன்பமும் நம்மை அண்டாது. எனவே, வியாபாரமாயினும் சரி, தொழிலாயினும் சரி, அவைகள் சிறந்து விளங்க அன்னையிடம் சரணடைந்து வேண்டி நிற்போம். இந்த மந்திரத்தை உச்சரித்து தினமும் வணங்கி வந்தால் எல்லா நலன்களும் பெறலாம்.
