பெருமாளின் மந்திரம் 3 மந்திரங்களின் பலனை தரும்!
இறைவனை விட அவருடைய திருநாமத்திற்கு அதிக சக்தி உண்டு என்பார்கள்.
மகாபாரதத்தில் திரெளபதியின் மானம் காத்தது கோவிந்தா என்னும் நாமம்.
முதலையிடம் சிக்கிய கஜேந்திரனின் துன்பம் தீர்த்தது ஆதிமூலம் என்னும் திருநாமம்.
கலியுகத்திலும் இத்தகைய திருநாமத்தின் மூலம் இறைவனின் அருளை பெறவும், அவனின் திருவடியை அடையவும் முடியும். பொதுவாக நாராயணனின் அருளை பெற எட்டெழுத்து மந்திரமான
“ஓம் நமோ நாராயணா”
என்று சொல்வது வழக்கம். இது அனைவரும் அறிந்தது. அனைவரும் வழக்கமாக சொல்லக் கூடியது. வைகுண்ட பதவி தரும் மந்திரம் என ஸ்ரீ ராமானுஜர் வழிகாட்டியது ஓம் நமோ நாராயணா என்னும் எட்டெழுத்து மந்திரம். கோ (பசு) தானம் செய்ததற்கு இணையான பலனை தரக் கூடியது “கோவிந்தா” என்னும் நாமம்.
கோவிந்தன் என்னும் பெயருக்கு இந்த்ரியங்களை அடக்கி ஆள்பவன் என்றும் பொருள் உண்டு. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உடனடியாக அருள் செய்யக் கூடிய மந்திரம், “ஆதிமூலம்” என்னும் நாமம். மா என்றால் தமிழில் லட்சுமி தேவியை குறிக்கும். தவன் என்றால் கணவன். மாதவன் என்ற சொல்லுக்கு லட்சுமி தேவியின் கணவன் என்பது பொருள். இதனால் மாதவா என்னும் நாமத்தை சொல்லும் போது நாராயணனின் அருளை மட்டுமல்ல அவனின் மார்பில் நிரந்தர வாசம் செய்யும் லட்சுமி தேவியின் அருளையும் சேர்த்து பெற முடியும்.
இதே போல் நாராயணனின் திருநாமங்களில் ஒன்றான ஸ்ரீதரன் என்ற சொல்லுக்கும் லட்சுமியின் கணவன் என்று தான் அர்த்தம். ஸ்ரீ என்ற எழுத்து லட்சுமி தேவியையே குறிக்கும். இப்படி நாராயணனின் திருநாமங்களின் மகிமையையும், அவை தரும் பலன்களையும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் 26 எழுத்துக்கள் கொண்ட ஒரே ஒரு மந்திரத்தை சொன்னாலே போதும் நாராயணனுக்கு உரிய 3 மந்திரங்களை சொன்ன பலனை பெற முடியும் என்பது பலரும் அறியாத விஷயம்.
இந்த மந்திரத்தை சொன்னால் பெருமாளின் திருவருளை எளிதில் பெற்று விடலாம்.
ஆனால் இந்த விஷயம் தெரியாமலேயே நம்மில் பலரும் வழக்கமாகவே அந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். 3 மந்திரங்களை சொன்ன பலனை தரக் கூடிய மந்திரம் வேறு ஒன்றமில்லை, விஷ்ணு காயத்ரி மந்திரம் தான். விஷ்ணு காயத்ரியில் நாராயண மந்திரம், வாசுதேவ மந்திரம், விஷ்ணு மந்திரம் என மூன்று மந்திரங்கள் உள்ளன. இதில் நாராயண மந்திரம் என்பது ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரம்.
வாசுதேவ மந்திரம் என்பது 12 எழுத்துக்களைக் கொண்ட, ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரம். விஷ்ணு மந்திரம் என்பது ஓம் விஷ்ணுவே நம என்ற ஆறெழுத்து மந்திரம். இந்த மூன்று மந்திரங்களின் கூட்டுத்தொகை 26. 8+12+6=26. இந்த 26 எழுத்துக்களைக் கொண்டது தான் விஷ்ணு காயத்ரி மந்திரம்.
நாராயணாய வித்மஹே வாஸு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்
என்பது இந்த மந்திரம். இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. மனசுத்தத்துடன் இந்த மந்திரத்தை சொன்னால் பெருமாளின் பூரண அருள் கிடைக்கும்.
