முதல் நாமா – *ஸ்ரீ மாதா* *श्री माता*
தேவீ வாக்தேவீகளைப் படைத்தாள். அதனாலேயே அவள் அவர்களுக்கு மாதாவாகிறாள். அதனாலேயே தேவீ அவர்களை கோடிக்கணக்கான நாமாக்களிலிருந்து மிகச் சிறந்ததான ஆயிரம் நாமாக்களை எடுத்து ஸஹஸ்ரநாமம் உருவாக்கப் பணித்தபோது அவர்கள் முதல் நாமாவாக ஸ்ரீஅன்னையே என்று ஆரம்பித்தார்கள்.
தான் பெற்ற சிசு தனக்கு எத்தனை விதமான இன்னல்களைக் கொடுத்தாலும் ஒரு தாய் அதனை ஈன்ற காலத்திலிருந்து எவ்வளவு போஷித்துக் காக்கிறாள். அந்தக் கருணையாக, தாயுள்ளமாக அன்னை பராசக்தியான லலிதா த்ரிபுரசுந்தரி விளங்குகிறாள்.
மிகவும் சிறப்பானவர்களை ஸ்ரீ என்னும் அடைமொழி இட்டு அழைப்பது வழக்கம். அதே போன்று வாக்தேவிகள் லலிதாம்பிகாவை ஸ்ரீ மாதா என்று அழைக்கிறார்கள்.
மகத்தானவர்களையும் மகத்தான வஸ்துக்களையும் குறிப்பிடும்போது ‘ஶ்ரீ’ என்ற அடைமொழி இடுகிறோம். அவள் மந்த்ரமான வித்யை ஸ்ரீவித்யை, அவள் இருப்பிடமான புரம் ஸ்ரீபுரம், அவள் அமர்ந்திருக்கும் சக்ரம் ஸ்ரீசக்ரம், அப்படியே அவளையும் ஸ்ரீ எனும் அடைமொழி இட்டு ஶ்ரீமாதா என்று அழைக்கிறோம்.
நாம் எடுக்கும் ஒவ்வொரு ஜன்மாவிலும் நமக்குத் தாய் இருந்தாலும், நம்முடைய எல்லா துக்கங்களையும் போக்கக் கூடியவளான ஜகன்மாதா ‘மாதா’ ஆகிறாள். எல்லாவித தாயார்களையும் விட ஶ்ரேஷ்டமானவள் (சிறந்தவள்). இன்னாருடைய தாயார் என்றில்லாமல் எல்லாருடைய தாயாராயும் (ஜனனியாகவும்) இருப்பவள். ஆதலால் ஶ்ரீமாதா. அகில உலகின் தாயாக அன்னை ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரசுந்தரி இருக்கிறாள்.
ஓம் ஸ்ரீ மாத்ரே நம :
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
