ஒன்றும் அறியாத உன் பிள்ளை தானம்மா
உன்னை அறிந்து கொண்டேன்
உள்ளம்கொள்ளை கொள்ளும் உந்தன் புன்னகையில்
என்னை இழந்து விட்டேன்
அண்டங்கள் யாவையும் அன்போடு ஆள்கின்ற
ஆதிமூலம் நீயே
மூன்று தொழில்களும் முறையாய் நடத்திடும்
மும்மூர்த்தியும் நீயே
எங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள்
என்னிலு மிருப்பவளே
கண்ணில் ஒளிகாட்டிக் கருணை முகம்காட்டி
என்னை இழுப்பவளே
தங்கக் காதணியைத் தந்தங் கொருநாள்
நிலவை அமைத்தவளே
மஹிஷா சுரனை மண்ணோடு மண்ணாக்கி
மாய்த்துச் சிரித்தவளே
கடலும் இனிப்பாகும் கரும்பும் உவர்ப்பாகும்
எல்லாம் உந்தன் ஜாலமே
பகலும் இரவாகும் இரவும் பகலாகும்
பணியும் உன்னை ஞாலமே
உன்னால் முடியாத தொன்றுண்டோ உலகில்
உந்தனடி சரணம்
எந்தன் குரல் கேட்டு கருணை கொஞ்சம் வைத்து
அம்மா நீயும் வரணும்!
