Sunday, October 15, 2023
HomeAalayangal50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவைர முனீஸ்வரர் கோவில்

50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவைர முனீஸ்வரர் கோவில்

0 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவைர முனீஸ்வரர் கோவிலுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திசவிளக்கு கிராமம். இங்குள்ள கொல்லங்கரடு மலையில், ஸ்ரீவைர முனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

இயற்கை எழில் சூழ்ந்த கொல்லங்கரடு மலையில் கிழக்கு நோக்கி சமயபுரத்தம்மன், ஸ்ரீவைர முனீஸ்வரர், விநாயகர், முருகர் ஆகிய தெய்வங்களும், மேற்கில் அசுரரும், வடக்கில் காமதேனு, வைர குருமணி உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இதில் வைர குருமணி தனது வலது காலை தலையின் மேல் வைத்து யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்கிறார். மற்ற கோவில்களில் முனியப்பன் பல்வேறு ஆயுதங்களுடன் கம்பீரமாக காட்சி தருவார். ஆனால் இந்தக் கோவிலில் மட்டும் குழந்தை வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீவைர முனீஸ்வரர்.

வாரந்தோறும் திங்கள், வெள்ளி மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இந்த பூஜையில் சேலம் மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொள்வார்கள். பிற்பகல் 1 மணியளவில் பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், மாதுளை உள்ளிட்ட பழங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும். அதன்பிறகு சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்படும். இதனைதொடர்ந்து மாலை 6 மணியளவில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் மற்றும் பழங்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

தீராத நோயால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமியின் எலுமிச்சை, திருநீறு ஆகியவற்றை பய பக்தியுடன் பெற்றுச்செல்கிறார்கள். வீட்டிற்கு சென்றவுடன் அவற்றை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்தால் அந்த நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் 5 பவுர்ணமிக்கு கோவிலுக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை வாங்கி குடிக்கிறார்கள். மேலும் எலுமிச்சை மற்றும் சந்தனத்தை பிரசாதமாக வாங்கிச்செல்கிறார்கள். இதனை 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இந்தக் கோவிலின் ஆண்டு விழா வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடிப்பெருக்கு அன்று சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக அன்று அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சித்தர் கோவிலுக்கு நடந்து செல்வார்கள். பின்னர் அதிகாலை 5 மணியளவில் பக்தர்கள் அருவி மற்றும் கிணறுகளில் குளித்துவிட்டு பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி ஏந்தி, அலகு குத்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஸ்ரீவைர முனீஸ்வரர் கோவிலுக்கு செல்வார்கள்.

அன்னதானம்

பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அன்னதானம், குளிர்பானம் மற்றும் மோர் ஆகியவை வழங்குவார்கள். மேலும் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவை நடைபெறும். ஊர்வலத்தில் வாணவேடிக்கை நடைபெறும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு செல்லும் பால் மற்றும் தீர்த்தக்குடத்தில் உள்ள புனித நீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இதனை தொடர்ந்து அசுரர் தெய்வத்திற்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படும். மற்ற தெய்வங்களுக்கு பொங்கல் படைக்கப்படும். ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று தெளிப்பார்கள். இதன் மூலம் ஐஸ்வர்யம் கிடைப்பதாக பக்தர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =

Most Popular