Thursday, October 19, 2023
HomeAalayangalஅஷ்டலட்சுமிகள் அருள்புரியும் அஷ்டலட்சுமி கோவில்

அஷ்டலட்சுமிகள் அருள்புரியும் அஷ்டலட்சுமி கோவில்

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில் அஷ்டலட்சுமிகளின் வடிவங்கள் எட்டும் சிற்ப நூல் விதிப்படி நிறுவப்பட்டிருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி ஆலயம் உள்ளது. அக்கோவிலில் அஷ்டலட்சுமிகளின் வடிவங்கள் எட்டும் சிற்ப நூல் விதிப்படி நிறுவப்பட்டிருக்கிறது.
இக்கோவிலின் தரைத்தளத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்ரீ மகாலட்சுமியின் பிரதான சன்னதிகள் அமைந்துள்ளன. கிழக்கே திருமுக மண்டலம். அப்படியே பிரகாரத்தில் சுற்றினால் தென் பகுதியில் ஸ்ரீ ஆதிலட்சுமி, மேற்கில் ஸ்ரீ தானிய லட்சுமி, வடக்கில் ஸ்ரீ தைரியலட்சுமி, மீண்டும் ‘ஸ்ரீ மகா லட்சுமியின்’ பிரதான சன்னதி உள்ளது.

பின்பு இரண்டாவது தளத்திற்கு ஏறினால் முதலில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ கஜலட்சுமியை தரிசனம் செய்யலாம். அதன்பிறகு பிரகாரத்தில் சுற்றினால் தென்பகுதியில் ஸ்ரீ சந்தானலட்சுமி, மேற்கில் ஸ்ரீவிஜயலட்சுமி, வடக்கில் ஸ்ரீ வித்யா லட்சுமிகளையும் வழிபாடு செய்யலாம். அதன்பிறகு ‘ஸ்ரீ கஜலட்சுமி’ சன்னதியிலிருந்து மூன்றாவது தளத்திற்கு மேலேறி சென்றால், பிரதான நிலையில் ஸ்ரீ தனலட்சுமி அருள் காட்சி தருவாள். இவ்வாறாக அஷ்டலட்சுமிகளையும், பிரதான சன்னதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமி மூர்த்தங்களையும் தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

இந்த அஷ்ட லட்சுமி ஆலயத்தில் அமைந்துள்ள அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது கருவறைகளுடன் கூடிய சிறு சிறு கோவில்கள் உள்ளன. அவை தரைத்தளத்தில் நான்கும், இரண்டாம் தளத்தில் நான்கும், மூன்றாவது தளத்தில் ஒன்றுமாக நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் முதல் நிலைக் கோஷ்டங்களில் அஷ்ட லட்சுமிகளின் எட்டு வடிவங்களும் அதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாகவே இரண்டாம் நிலையில் ‘தென்கிழக்கு’ மூலையில் ஸ்ரீ லட்சுமி கல்யாணத் திருக்கோலமும், ‘தென்மேற்கு’ மூலையில் ஸ்ரீவைகுண்டக் காட்சியும், ‘வடமேற்கு’ மூலையில் ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீமத்வாசாரியார் போன்ற மகா ஞானிகளின் திருவுருவங்களையும், வடகிழக்கில் ‘தேவாசுரர்கள் அமிர்தம் பெற திருப்பாற் கடலையும் கடையும் எழிற் காட்சியும்’ அதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு நம் கண்ணையும், கருத்தையும் கவர்ந்து கொள்கின்றன.

மூன்றாவது நிலையில் ஒரு புறம் ‘ஸ்ரீ மகா விஷ்ணுவின்’ தசாவதாரக் கோலங்களும், ஒரு புறம் சைவ சம்ப்ரதாயத்தின்படி ஸ்ரீ ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தவம் ஓதும் பிம்பத்தையும், ஒருபுறம் வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி தூப்புல் ஸ்ரீநிகமாந்த மகா தேசிகரின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம். பிரதான கோவிலின் முன்புறமாக இருபுறமும் சங்கநிதி, பதுமநிதி என இரண்டு பொக்கிஷங்களுக்கும் இரண்டு கோவில்கள் உள்ளன.

மாவிளக்கு ஏற்றிய ஸ்ரீ மகாலட்சுமி

புரட்டாசி மாதம் விஷ்ணு வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். குறிப்பாக புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகள் மிகமிகச் சிறந்தவை. அதிலும் மூன்றாம் சனிக்கிழமை உத்தமோத்தமமானது ஆகும். இந்த காரணத்தால்தான் புரட்டாசி மூன்றாம் சனி அன்று பெருமாள் கோவில்கள் நிரம்பி வழிகின்றன. திருமலை திருப்பதிக்கு சென்றால் சுவாமியை தரிசிக்கவே முடியாதபடி பெரும் மக்கள் கூட்டம் அலைமோதும் இந்த மாத நாட்களில் மாவிளக்கேற்றி விசேஷமாக நாம் பகவான் விஷ்ணுவையும், தாயார் ஸ்ரீ லட்சுமி தேவியையும் வணங்கி வழிபட்டால் நமது கஷ்டங்கள் எல்லாம் விலகி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் ஏற்படும் என்பது ஐதீகம். இதற்கு மகாலட்சுமியே ஒரு இடத்தில் முன்னுதாரணமாக மாவிளக்கேற்றி மாதவனை வழிபட்டிருக்கிறாள்.

சென்னை, பெசன்ட்நகர் ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவிலில் தான் ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் வரும், 3ஆவது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு நடைபெறுகிறது. இவ்வாலயத்தில் புரட்டாசிச் சனியன்று காலையில் வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடந்து முடிந்த பிறகு சுமார் 9 மணிக்கு மேல் இங்கு உற்சவ மூர்த்தியாக உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் முன்பு அன்னக்கூட உற்சவம் நடைபெறும். அதன்பிறகு இங்குள்ள அஷ்ட லட்சுமிகளின் சன்னதிகளில் ஒரு சன்னதிக்கு ஒரு மாவிளக்கு என்ற விதத்தில் எட்டு சன்னதிகளிலும் எட்டு மாவிளக்குகள் ஏற்றப்படுகின்றன.

இவற்றை ஸ்ரீ மகாலட்சுமியே ஏற்றுவதாக ஐதீகம் பிறகு அவை அனைத்தும் ஒவ்வொன்றாக உற்சவர் ஸ்ரீ நிவாசப் பெருமாள் முன்பு கொண்டு செல்லப்பட்டு அந்த எட்டு மாவிளக்கின் தீபச் சுடர்களாலும் பெருமானின் முன்பு உள்ள ஒரு பெரிய அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.

மாலை சுமார் 5 மணியளவில் சகஸ்ரநாம அகண்ட பாராயணமும், பூஜைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களைப் பாடி பகவானை சேவித்தலும் வரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மகாலட்சுமியே மாவிளக்கேற்றி மாதவனை வழிபடும் இந்த ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

Most Popular