Thursday, October 19, 2023
HomeAalayangalதிருமணம், புத்திர பாக்கியம் அருளும் ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவில்

திருமணம், புத்திர பாக்கியம் அருளும் ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவில்

திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்கவும், நவகிரக தோஷங்கள் தீரவும் அருள்மிகு ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவிலில் பிரார்த்தனை செய்கிறார்கள்.

மூலவர் : ஆதித்ய ஹிருதய பெருமாள்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : தில்லைமரம்

தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம்
ஊர் : உதயமார்த்தாண்டபுரம்
மாவட்டம் : திருவாரூர்

தல சிறப்பு :

ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம்

பொது தகவல் :

கோயிலின் கிழக்குப் பக்கம் ஆதித்ய ஹிருதய பெருமாள் , இடபக்கம் ஸ்ரீதேவி, வலப்பக்கம் பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். கோயிலின் இடப்பக்கம் நேர்த்திக்கடன் செய்யும் வகையில் அகல் விளக்கு ஏற்ற வசதியாக கட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன் பக்கம் பாஸ்கர தீர்த குளம் எப்போதும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.

பெருமாள்: வலப்பக்கம் ஸ்ரீதேவியுடனும், இடபக்கம் பூதேவியுடன் 9 அடி உயரத்தில் ஆதித்ய பெருமாள் சிரிப்புடன் காட்சித்தருகிறார். பீடம் நான்கு அடியில் வட்ட வடிவில், இடது கையில் சங்கு, வலக்கையில் வரம் அருளியும், கையில் கட்டைவிரலை மடித்து மோதிர விரல் மீது வைத்துள்ளார். தலையில் கிரிடத்துடன், நெற்றிப்பட்டம், தொல் காதும், குண்டலம் அணிந்துள்ளதுடன் இரு கால்களிலும் கண்டிலம் அணிந்துள்ளார்.

ஸ்ரீதேவி, பூதேவி: தலைகிரிடம், நீள்நெற்றி, கழுத்தில் ஆரம் முப்பறிநூல் லட்சுமி அடையாளம், கையில் தாமரை மொட்டுடன் சிரித்த முகத்துடன் காட்சித்தருகின்றனர்.

பிரார்த்தனை :

கண் மருத்துவத் துறையில் புகழ் பெறவும், கணக்குப்பாடத்தில் சிறப்படையவும், கம்ப்யூட்டர் துறையில் வளர்ச்சியடையவும், திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்கவும், நவகிரக தோஷங்கள் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

கண்பார்வை கோளாறு குணமடைய:

கண்கண்ட ருத்திரராம் கண்கண்ட திருமாலாம்
கண்கண்ட பிரம்மருமாம் கண்கண்ட சக்தியுமாம்
கண்கண்ட ஒலியொளியாம் கண்கண்ட வேதமுமாம்
பண்கொண்டு விண்ணுண்டக் கதிரவரின் கார் போற்றி என்று வழிபாட்டு பாடலலை பாடியும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன் :

அத்திப்பழங்களை தேனில் ஊறவைத்து, முந்திரி, திராட்சை, கற்கண்டு ஆகியவற்றை ஆதித்ய ஹிருதய பெருமாளுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் நட்சத்திர வடிவில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை :

கலியுகம் முடிவதை குறிக்கும் சாதனங்கள் பல உள்ளது. கலியுகத்தின் கடைசி மூன்று நாட்களில் சூரியன் கிழக்கே அல்லாது மேற்கே உதிப்பதாகும். என சித்தர்களின் யுக நிதிய கிரகங்களில் விளக்கப்படுகிறது. கலியுகத்தின் இறுதி நாட்களான அந்த மூன்று தினங்களில் திகழும் மேற்கு திசை சூரிய உதய திசை மாற்றத்தை உதய மாருதி, உதய நாழி, சகோரம், சிம்புள், சரபம், யாளி, தூப்பல் ஆகிய ஏழு முக்கியமான சூரிய லோகத்து தெய்வீகப்பறவைகளே முதன்முதலில் தீர்க்க தரிசனமாய் அறிந்து மனிதர்களுக்கும் உணர்விக்கும். பட்சி சாஸ்திர வாக்கு மெய்வாக்கியமாய் பொழியும் மூல முதல் தலமாகியது. பின்னாளில் உதயமார்த்தாண்டபுரம் என மருவியதாக கூறப்படுகிறது.

மிகவும் பழமை வாய்ந்த சூரிய சக்தி வழிபாட்டு தலமாகும். மேலும் நல்ல சீதோஷ்ண நிலை இருப்பதால் பல்வேறுப்பகுதியில் இருந்து பறவைகள் இனப் பெருக்கத்திற்கு வந்து செல்வதாலும், அகஸ்திய மகரிஷி ராமபிரானுக்கு உபதேசித்த ஆதித்ய ஹிருதயம் என்னும் அற்புத துதியை படைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட தலம் என்ற சிறப்பிற்குரியது.

சூரிய பகவானிடம் வேத பாடம் கற்கையில் ஆஞ்சநேயர், சூரியன் உதயமாகும் உதயகிரி மலையில் ஒருபாதத்தை வைத்தும், சூரியன் உதயமானதும், அஸ்தகிரி மலையில் மற்றொரு பாதத்தை வைத்தும் சூரிய சக்கரத்தின் படுவேகத்திற்கு இணையாய் ஓடிக்கற்றார். இதனால் இங்கு ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம். முட்ட சித்தர் வாழ்ந்தருளிய அவரின் சிறப்பு மிக்க ஆயுத எழுத்தான (ஃ) பெருமை கூறி தோன்றி தவழ்ந்தற்கான சிறப்பும் கூறப்படுகிறது. கோயில் எதிரில் பாஸ்கர தீர்த்தம் என சிறப்பிக்கப்படும் அழகிய திருக்குளம் எப்போதும் வற்றாமல் உள்ளது. சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலத்தில் பாஸ்கர தீர்த்தம் முதன்மையானது. மேலும் கடுமையான பிதுர் தோஷங்களையும், குறிப்பாக தந்தை வழியில் தர்ப்பணம், திவசம், முறைப்படி ஆற்றாததால் விளையும் பிதுர் தோஷங்களை களைய வல்ல பிதுர் முக்தி பூமியாகும். இககோயில் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முற்பட்டதாக இருக்கலாம் என அப்பகுதியினர் கருதுகின்றனர். மேலும் சிவ-விஷ்னு தலமாக இருந்தது என்றும் கருதுகின்றனர். 9 ஆடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஆதித்ய ஹிரு தய பெருமாள் விக்கரகங்கள் கருவறையில் பல தலைமுறையாக இருந்து வந்துள்ளது.

தல வரலாறு :

அகஸ்திய மாமுனிவர் அரிய சூரிய சக்தி மந்திரங்களை ஓதி வழிபட்டு ஆதித்ய ஹிருதயம் துதியை இயற்றுவதற்கு பிள்ளையார் சுழி இட்ட புண்ணிய பூமி என சித்தர்களால் போற்றப்பட்டதும், ஆதித்ய ஹிரு தயம் என்னும் மந்திரத்தை அகத்திய மாமுனிவரால் இலங்கை ராணுவ யுத்தத்திற்கு ராமபிரான் செல்வதற்கு முன் இப்பெருமாள் முன்னிலையில் ஸ்ரீராம பெருமானுக்கு உபதேசம் செய்யப்பட்டதும் இந்த மண்ணில்தான் என்று கூறப்படுகிறது.

சிறப்பம்சம் :

அதிசயத்தின் அடிப்படையில்: ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம்.

திறக்கும் நேரம் :

காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணிவரை திறந்திருக்கும்.

திருவிழா :

ராம நவமி, சித்திரை அட்சய திருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உள்ளிட்ட ராமருக்குரிய அனைத்து திருவிழாவும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

முகவரி :

அருள்மிகு ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவில்
உதயமார்த்தாண்டபுரம்,
திருத்துறைப்பூண்டி தாலுகா,
திருவாரூர் மாவட்டம்.614 706

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =

Most Popular