Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgal450 ஆண்டுகளுக்கு முன்பு

450 ஆண்டுகளுக்கு முன்பு

ஒரு சௌராஷ்டிரர்..
தனிநபராய் காவிரி ஆற்றில் நின்று
வருண ஜபம் செய்து…
அடாத மழையினை வரவழைத்து சாதனை படைத்தவரின் சரித்திரத்தைப் பார்ப்போம்..

1551 ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையில் ராமச்சந்திரா புரத்தில் வேங்கடய்யர் பத்மாவதி தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் தத்தாத்ரேயர்..

தந்தை வழி நின்று வேத பாராயணங்களை பாலகனாக இருந்தபோதே கசடறக் கற்றவர்..

இந்த மகான் வாழ்ந்த சமகாலத்தில் தஞ்சையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகாலம் மழை பொழியாத காரணத்தால் கடும் வறட்சியைச் சந்தித்தது தஞ்சை பூமி.

தஞ்சையை ஆண்ட அரசர் அச்சுதப்ப நாயக்கர் கவலையுடன் அரசவையைக் கூட்டி மழை வருவதற்கான யாகங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறார்..

மிகப் பெரும் வேத விற்பன்னர்களை எல்லாம் வரவழைத்து, யாகங்கள் தொடங்கப் பட்டு ஏழுநாட்கள் ஆன பிறகும் மழை வருவதற்கான அறிகுறிகளே இல்லாத நிலையில்

திருவரங்கப் பெருமாளின் சன்னதியில்.. 20 வயது இளைஞர் ஒருவர் தினம்தோறும் பாடல்களைப் பாடி சுகந்த தூப கைங்கர்யம் செய்து வரும் தத்தாத்ரேயர் என்கிறவரை இந்த யாக குண்டத்திற்கு முன் வரவழைத்து பாடச் செய்தால் நம் நோக்கம் நிறைவேறும் என்று.. தலைமை புரோகிதர்களின் எதிர்ப்புக்கிடையில் ஒருவர் மன்னரிடம் முறையிடுகிறார்..

உடனே ஆக வேண்டியதைச் செய்யச் சொல்கிறார் மன்னர்..

புரோகிதர் குழு தத்தாத்ரேயரை அனுகி விபரத்தைச் சொல்லி யாகம் நடத்தும் இடத்திற்கு அழைக்க, வேண்டாம் நான் அரங்கனை நினைத்து காவிரி ஆற்றில் நின்று வருண ஜபம் செய்கிறேன்.. எனக்கு ஒரு கும்பம் (குடம்) நீர் ஏற்பாடு செய்யுங்கள்.. நம்பிக்கையுடன் அரங்கனை நோக்கி. தலையில கும்பத்தை வைத்துக் கொண்டு, காவிரி ஆற்றில்.. நின்ற நிலையில்.. மேகராகக் குறிஞ்சியில்..(ராகம்) சௌராஸ்ட்ர மொழியில் அரங்கனை மனதில் நிறுத்தி.. வருணனை நோக்கி தன் தாய்மொழியான சௌராஸ்ட்ர மொழியில் மனம் உருகிப் பாட..

காலை வேளையில் தொடங்கிய தத்தாத்ரேயரின் இந்தத் தவத்தை புரோகிதர்கள் உள்ளிட்ட மக்கள் திரண்டு வந்து பார்க்கின்றனர்..ஒரே நாளில்..

ஆம் அந்த அதிசயம் நிகழ்ந்தது.. மாலைப் பொழுது வந்ததும் மேகக் கூட்டம் திரள.. மகிழ்ச்சி தாங்காமல் மக்கள் ஆரவரித்தனர்..

மழை பெய்யத் தொடங்கியதும் கரைக்கு வருகிறார் தத்தாத்ரேயர்.. மழை தொடர்கிறது.. மாமழையாக மாறி மூன்று நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் தஞ்சையைச் சுற்றி உள்ள ஏரி குளம் கிணறு என அனைத்துமே நிரம்பிய நிலையில்

இனியும் மழை தொடர்ந்தால் நாட்டிற்கே கேடாக முடியம் என்று எண்ணிய மக்கள் மீண்டும் தத்தாத்ரேயரை வணங்கி மழைபோதும் என்று கேட்டுக் கொள்கின்றனர்..

தத்தாத்ரேயர் மீண்டும் பாடலைப் பாடி மழைப்பொழிவினை நிறைவு செய்கிறார்..

தஞ்சை மன்னர் தத்தாத்ரேயர் அவர்களை அழைத்து அரச மரியாதையைச் செய்து, தங்கக்காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை தாம்பழத் தட்டு நிரம்ப வழங்குகிறார்..

அனைத்தையும் புன்னகையுடன் மறுதலித்து விட்டு கிளம்புகிற நேரத்தில் அச்சுதப்ப நாயக்க மன்னரே அருகில் வந்து தம் கழுத்தில் இருந்த ரத்தினமாலையினை எடுத்து தத்தாத்ரேயர் கழுத்தில் அணிவிக்கிறார்.. மறுக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் மன்னர்..

நேராக திருவரங்கக் கோயிலுக்கு வந்த தத்தாத்ரேயர் மன்னர் அணிவித்த ரத்னமாலையை அரங்கனுக்கு அணிவிக்க அர்ச்சகரிடம் வழங்குகிறார்..

இதையறிந்த மன்னர் ஒருநாள் திருவரங்கக் கோயிலுக்கு வருகிறார்.. என்னிடமிருந்து எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளாத தத்தாத்ரேயர் அவர்களுக்கு முதல் மரியாதையாக,அதிகாலையில் வழங்கப்படும் பிரம்ம துளசி தீர்த்தத்தை வழங்க வேண்டும் என்றும், தத்தாத்ரேயர் காலத்திற்குப் பிறகு அதி காலை வேளையில் அரங்கனின் விசுவரூப தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் சௌராஸ்ட்ரர் இருந்தால்.
அவர்களுக்குத்தான் முதல் தீர்த்தம் வழங்கப்பட வேண்டும் என்று பட்டயம் எழுதி மன்னர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கியதாக வரலாறு சொல்கிறது..

இதில் பரமக்குடிக்கு ஒரு பெருமை உண்டு..
தத்தாத்ரேயர் சிறு வயதில் தன் தாயாருடன் புளியமரத்தெரு குடில் ஒன்றில் சில வருடங்கள் தங்கியிருந்து அதர்வண வேதத்தை பரமக்குடி வேதாந்த மடத்தின் ஆச்சாரியர் இலட்சுமண அய்யரிடம் பயின்றார் என்பதே…

தகவல்கள்.. ஸ்ரீ ரங்ககுல அய்யர் எழுதிய..
ஸ்ரீ நித்ய சூரி சுகந்த தூப தீரத்தார்ய ஸ்வாமி வரலாறு நூல்.. ஆன்மிக அறிவு சங்கமம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + seven =

Most Popular