மூக பஞ்ச சதீ முழுமையையும் பாராயணம் செய்ய ஞானம் கிட்டும் என்பது மகாபெரியவர் வாக்கு. ஆனால், இதன் ஒவ்வொரு பகுதியையும் பாராயணம் செய்ய சில சிறப்புப் பலன்களைப் பெறமுடியும் என்று பெரியோர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டு சொல்லியிருக்கிறார்கள்.
ஆர்ய சதகம் அன்னையின் நாம மகிமைகளைச் சொல்வது. அன்னை காமாட்சியின் நாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே அவள் ஓடிவந்து நம்மைக் காப்பாள். சிறப்புகள் வாய்ந்த ஆர்ய சதகத்தைப் பாராயணம் செய்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக, ஆர்ய சதகம் முழுமையையும் பாராயணம் செய்ய வாக்குவன்மை ஸித்திக்கும். ஆர்ய சதகத்தின் ‘வித்யே விதாத்ரு’ என்று தொடங்கும் ஒரு ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து சொல்லி வர, மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
திருமண வாழ்வில் பிரச்னை இருப்பவர்கள், ஒரு பௌர்ணமி அன்று தொடங்கி அடுத்த பௌர்ணமிக்குள் 5 முறை ஆர்ய சதகத்தை பாராயணம் செய்தால், தம்பதிகளுக்குள் மன ஒற்றுமை ஏற்பட்டு இல்லறம் இனிக்கும் என்கின்றனர் பெரியவர்கள்.
அதேபோல திருமணம் கைகூடாத வரன்கள், ‘ஸ்மர மதன வரணலோலா’ என்று தொடங்கும் ஆர்ய சதகத்தின் 91 வது ஸ்லோகத்தைச் சொல்லிவர விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
‘பாதாரவிந்த சதகம் ‘ அன்னையின் திருப்பாதங்களின் எழிலையும், அவற்றின் மகிமைகளையும், அவற்றில் சரணடைவதன் மூலம் கிட்டும் நற்பயன்களையும் போற்றுகிறது. மனக் கவலைகள் தீர்ப்பவள் காமாட்சி. பாதாரவிந்த சதகத்தின் ‘கதா தூரீகர்த்தும்’ என்று தொடங்கும் 22 வது ஸ்லோகத்தைப் பாராயணம் செய்துவர மனக் கவலைகள் தீரும்.
இன்று பெரும்பாலானவர்கள் நவகிரகப் பெயர்ச்சி குறித்தே கவலை கொள்கின்றனர். அன்னையின் பாதாரவிந்தங்களைச் சரணடைந்தபின் எந்த வினையும் அணுகாது. அவளின் தாமரைப் பாதங்களைச் சரணடைய சகலமும் வெற்றியாகும் என்னும் பொருள் தரும் ‘ததாநோ பாஸ்வத்வாம்’ என்று தொடங்கும் இந்தச் சதகத்தின் 59 வது பாடலை மனப்பாடம் செய்து தினந்தோறும் சொல்லிவர, நவகிரகங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும், நன்மைகள் கூடும் என்பது ஐதீகம்.
அதே போல நோய்கள் நீங்கி நிவாரணம் பெறவும் ஒரு ஸ்லோகம் சொல்லப்படுகிறது. மந்தஸ்மித சதகம் என்னும் அன்னையின் புன்னகைச் சிறப்பினைப் பாடும் பாடல்களில் ‘இந்தானே பவ’ என்று தொடங்கும் 94- வது பாடலை மனப்பாடம் செய்து பாடிவர நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இத்தனை மகிமைகளை உடைய ‘மூக பஞ்ச சதீ’ யை வாழ்வில் ஒருமுறையாவது முழுமையாய் பாராயணம் செய்வது நன்மை பயக்கும்.
