மனக்குறையை நீக்கும் ஆனந்த கால பைரவர்!
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள ஷேத்திரபாலபுரத்தில் பைரவருக்கென்று தனி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பெயர் ஆனந்த கால பைரவர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புகளை நாம் இந்த பதிவில் நாம் காணலாம்.
பைரவரின் சிறப்பம்சங்கள்:
வீரச்செயல்களை செய்யும் காலத்தில் சிவபெருமான், பைரவர் வடிவம் எடுப்பதாக புராணங்கள் கூறுகின்றன. பைரவர் நீலநிற மேனி, சிலம்பொலிக்கும் திருவடி, மாலை அணிந்த திருமார்பு, சூலம், மழு, பாசம், உடுக்கை ஏந்திய திருக் கரங்கள், மூன்று கண்கள், இரண்டு கோரைப்பற்கள், செஞ்சடை, கோபச்சிரிப்பு, பாம்பைப் பூணூலாகக் கொண்டும், சந்திரனை சிரசில் வைத்தும் உக்கிரவடிவத்துடன் காட்சியளிப்பார். காவல் தெய்வமான இவரின் சன்னிதியில் நாய் வாகனமாக இருப்பதை காணலாம்.
ஆனந்த கால பைரவர் என்று பெயர் எப்படி வந்தது?
இங்குள்ள ஆனந்த கால பைரவராக வீற்றிருக்கும் பைரவர் முற்றிலும் மாறுபட்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு அவருக்கு நாய் வாகனம் இல்லை. கரத்தில் சூலத்தை ஏந்தி, சிரித்த முகத்துடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் ஆனந்தமாகக் காட்சி தருகிறார்.
பைரவருக்கு ஷேத்திரபாலர் என்ற பெயரும் உண்டு. அவருடைய பெயரால் இவ்வூர் ஷேத்திரபாலபுரம் என்று அழைக்கப்படுகிறது. பைரவருக்கு, தொலைந்து போன ஆனந்தம் இத்தலத்தில் கிடைக்கப்பெற்றதால் ‘ஆனந்த கால பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் காசியில் உள்ள காலபைரவருக்கு மேலானவர் என்று கூறுகிறார்கள்.
தல வரலாறு:
ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதே போன்று பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் சிவனை விடத் தானே சிறந்தவர் என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. அதனால் தேவர்களும், முனிவர்களும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய பரமேஸ்வரன் பைரவரைத் தோற்றுவித்தார். பைரவர் பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டார்.
இதனால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. அதில் இருந்து விடுபட என்ன செய்வது என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்குச் சிவன், ‘நீ பூலோகம் சென்று பிச்சை எடுத்து எம்மை வழிபடு. உரிய காலத்தில் உன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகும்’ என்று கூறினார். இதை அருகில் இருந்து கவனித்த மகாவிஷ்ணு தென்னாட்டில் காவிரி பாயும் திருத்தலத்தில் உமது பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று குறிப்பால் உணர்த்தினார்.
பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததால் ஆனந்தம் தொலைந்த மனதுடன் பூமிக்கு வந்த பைரவர், உலகம் முழுவதும் பிச்சை எடுத்த வண்ணம் சுற்றித் திரிந்தார். காசி, காஞ்சீபுரம், சீர்காழி, சிதம்பரம், திருவெண்காடு, மயிலாடுதுறை, திருவையாறு உள்ளிட்ட பல தலங்களுக்குச் சென்று பரமனை வணங்கினார்.
திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தில் வந்து ஸ்வேத விநாயகரை வணங்கினார். அவரது அருளால் பல ஆண்டுகளாக பைரவரை தொல்லைப்படுத்தி வந்த பிரம்மஹத்தி அவரை விட்டு விலகியது. தொலைந்து போன ஆனந்தம் திரும்ப கிடைக்கப்பெற்ற பைரவர், அத்தலத்து ஸ்வேத விநாயகரை வணங்கினார். அப்போது வானில் ஒரு அசரீரி கேட்டது. பைரவரை அத்தலத்தில் குறிப்பிட்ட காலம் தவம் செய்யும் படியும், பின்னர் அவர் கரத்தில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி எறியும் படியும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் ஆனந்த கால பைரவர் என்ற நாமத்தை ஏற்று தனிக்கோவில் கொண்டு அருள்புரியும்படியும் கூறியது. அசரீரி கூறியபடி திருவலஞ்சுழியில் குறிப்பிட்ட காலம் தவம் செய்த பைரவர், தன் சூலாயுதத்தைக் கிழக்கு நோக்கிச் செலுத்தினார். அது சென்று விழுந்த இடமே இன்றைய ஷேத்திரபாலபுரம் ஆகும்.
மனக்குறைகளை போக்கும் பைரவர்:
தொலைந்து போன ஆனந்தம் திரும்பக் கிடைக்கப்பெற்றதால் பைரவர் மகிழ்ச்சி அடைந்தார். அவரை அந்த திருத்தலத்தில் ஸ்வேத விநாயகரும், இந்திரனும் பிரதிஷ்டை செய்தனர். அன்று முதல் ஆனந்த கால பைரவர் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை வழங்கி, மனக்குறையை அகற்றி அருள்புரிந்து வருகிறார்.
பைரவருக்கு விஷேச பூஜை செய்யும் நாள்:
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விசேஷ தினமாகும். தினந்தோறும் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, ஒருகால பூஜை நடக்கிறது. சித்ரா பவுர்ணமியில் காவடி உற்சவமும், கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்காப்பு வைபவமும் நடைபெறும். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இந்தத் தலத்தில் உள்ள காலபைரவரை வணங்கினால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும்.
ஆலய அமைவிடம்:
ஷேத்திரபாலபுரம் ஆனந்த காலபைரவர் கோவில் நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது.
