Sunday, October 15, 2023
HomePurana Kathaigalகால பைரவர் அவதரித்த கதை பற்றி தெரியுமா?

கால பைரவர் அவதரித்த கதை பற்றி தெரியுமா?

கால பைரவர் அவதரித்த கதை பற்றி தெரியுமா?

ஒரு முறை பிரும்ம லோகத்தில் அமர்ந்திருந்த தெய்வங்கள் பல விஷயங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு தேவதை தெய்வங்களில் மிகவும் உத்தவமானவர் யார் எனக்கேட்க அங்கு அமர்ந்திருந்த பிரும்மா இறுமாப்பு கொண்டு சற்றும் தாமதிக்காமல் இதில் என்ன சந்தேகம் என்னைவிட உத்தவமானவர் எவர் இருக்க முடியும்? என்றார்.

கோபமடைந்த மஹா விஷ்ணு:

அதைக் கேட்ட மகாவிஷ்ணு கோபம் அடைந்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விவாதம் முடிவிற்கு வராமல் அவர்கள் நான்கு வேதங்களையும் அழைத்து அவற்றின் கருத்தைக் கேட்டனர்.

சிவ பெருமானே உயர்ந்தவர்:

அந்த வேத அதிபதிகளும் சற்றும் தயங்காமல் எவர் தன்னை வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு உடனே சென்று அருள்பாளிக்கின்றரோ, எவர் மிக சக்தி வாய்ந்தவர் என மக்களால் கருதப்படுகின்றாரோ, எவர் உலகனைத்தையும் ஆட்டுவித்தபடி அமர்ந்திருக்கின்றாரோ அவரே உத்தமமானவர் என்பதினால், அந்த அனைத்தையும் பெற்றுள்ள சிவபெருமானே அனைவரையும் விட உத்தமமானவர்’ எனக் கூறினர்.

அதைக்கேட்ட பிரும்மா இன்னும் அதிக ஆத்திரம் அடைந்து சிவபெருமானுடைய உருவத்தைக் குறித்து கண்டபடி பேசலானார். ‘யார் அந்த சிவன், உடலெங்கும் சாம்பல் பூசிக் கொண்டு, சடைமுடியுடன், மயான சாமியர்கள் போல தூசி படிந்த உடலுடன் இருந்து கொண்டு. கழுத்து நிறைய மாலைகளுக்குப் பதில் பாம்புகளை தொங்க விட்டுக்கொண்டு ஒரு மாட்டின் மீது அமர்ந்து கொண்டு சுற்றித் திரிகின்றாரே அவரா என்னை விட மேன்மையானவர்?’ என மேலும் மேலும் ஏசிக் கொண்டே இருக்கையில் கைலாயத்தில் இருந்த சிவன் காதுகளில் அவை அனைத்தும் விழுந்தன.

கொதித்துப் போனார் சிவனார். விஷ்ணு மற்றும் பிற கடவுள்களும் தேவதைகளும் பிரும்மா உரத்த குரலில் சிவனைப் பற்றி ஏசிக்கொண்டிருந்ததைக் கேட்டு பிரமித்து நிற்கையில், அவர்கள் முன் ஒரு பெரும் சப்தத்துடன் கூடிய ஒளி வெள்ளம் தோன்றியது. அதன் இடையே ஒரு மனிதன் தோன்ற பிரும்மா அவரைப் பார்த்துக் கத்தினார்’ ஏய், நீ யார், இங்கு எங்கே வந்தாய்?’. அந்த மனிதன் உடனடியாக ஒரு குழந்தை உருவில் மாறி அழத்துவங்கியது.

அதைக்கண்ட பிரும்மா இன்னமும் இறுமாப்புடன்’ ஏ குழந்தாய், நீ என் தலையில் இருந்து முளைத்திருக்கின்றாய், இப்போது என்னை நீ சரணடைந்து அழுவதினால் உனக்கு ருத்திரா எனப்பெயர் தருகின்றேன். நீ சென்று உலகைப் படைக்கத் துவங்கு, அழுவதை நிறுத்தி விட்டு என்னிடம் ஓடிவா. நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன் என்றார்.

அவ்வளவுதான் அந்த குழந்தை உடனடியாக ஒரு பயங்கரமான உருவம் கொண்டவராக மாறி அவர் எதிரில் நிற்க மீண்டும் பிரும்மா கூறினார், ‘ஏ மனிதா, இப்படிப்பட்ட பயங்கரமான முகத்துடன் வந்து நிற்கும் உன்னை காலத்தைக் காக்கும் மனிதனாக நியமித்து உன் பெயரை காலபைரவர் என மாற்றுகின்றேன். நீ மக்களுடைய பாபங்களை ஏற்றுக் கொண்டு, தீயவர்களை அழிப்பாய். இறந்தவர்கள் மோட்சம் அடையச் செல்லும் காசி நகரத்திற்கு நீ சென்று காசிராஜனாக இருந்து கொண்டிருந்து சித்திரகுப்தன் கூட கணக்கெடுக்க முடியாமல் உள்ள பாபங்களைக் போக்கிடுவாய்’ என ஆசிர்வதித்தார்.

பிரம்மாவின் தலையைத் துண்டித்த சிவன்:

அதுவரை அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்த பயங்கர உருவில் இருந்த சிவனார் துள்ளி எழுந்தார், பிரும்மாவின் ஐந்து தலைகளில் தன்னை ஏசிய ஒரு தலையை நகத்தினால் கீறி துண்டித்து எடுத்து தன் கைகளில் ஏந்தினார்.

பைரவர் அவதாரம்:

தன் சுய உருவைக் காட்டி, ‘ ஓபிரும்மனே உன்னுடைய எந்த தலை என்னை நிந்தித்து பாபத்தைப் பெற்றதோ அந்த தலையை பைரவர் அழித்து விட்டார்’ எனக் கூற அப்பொழுதுதான் பிரும்மா மற்றும் அனைவருக்கும் புரிந்தது வந்துள்ளவர் சிவபெருமானே. அவரே தன் ஒரு ரூபமாக பைரவரை தோற்றுவித்துள்ளார்.

தம்முன் நின்ற சிவபெருமானை அனைவரும் வணங்கினர். அடுத்து தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவரிடம் சிவபெருமான் கூறினார் ‘நீ பிரும்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை துண்டித்ததினால் ஏற்பட்டுள்ள பாபத்தைத் தொலைக்க, அந்த தலையை பைரவர் உருவில் ஏந்தியவண்ணம் உலகெங்கும் சுற்றிக் கொண்டு பிட்சை பெற்றுக் கொண்டவண்ணம் காசியை அடைந்து அந்த பாபத்தைத் தொலைக்க வேண்டும்’ எனக் கூறினார்.

அவர் அப்படிக் கூறிய மறுகணமே மற்றொரு பயங்கர முகத்தைக் கொண்ட இரத்தம் கக்கிக் கொண்டு இருந்த பெண் அங்கு தோன்றினாள் . அவளிடம் சிவபெருமான் கூறினார் ‘ நீ பைரவர் பின்னால் அவரை பயமுறுத்திக் கொண்டே துரத்திச் சென்றவண்ணம் இருக்க வேண்டும். அவர் காசியை அடைந்ததும் அவரை பயமுறுத்துவதை நிறுத்திவிட்டு சென்று விட வேண்டும் . உன்னால் காசியில் பிரவேசிக்க முடியாது’ என்றார்.

காசிக்கு சென்றால் கபால மோட்சம் எனக் கூறுவது இதுதானா:

பைரவரும் கபால ஓட்டையும், பிரும்மாவின் தலையையும் எடுத்துக் கொண்டு மூவுலகமும் சுற்றிய வண்ணம் பிட்சை எடுத்தார் . கடைசியாக அவர் காசியில் நுழைந்ததும் அவர் கையில் இருந்த கபாலம் கீழே விழுந்து உடைய, அவரைத் துரத்திக் கொண்டு சென்ற பெண்ணும் மறைந்து போனாள். இந்த நிகழ்சிதான் காசிக்குச் சென்றால் கபால மோட்சம் கிடைக்கும் என்ற பழமொழி தோன்றக் காரணமாக அமைந்தது. அதன்படிதான் இறந்தவர்களின் சுற்றத்தினர் காசிக்குச் சென்று சிரார்தம் செய்து இறந்தவருக்கு மோட்சம் கிடைக்க காசியை பாதுகாக்கும் காவலராக தன்னை நியமித்துக் கொண்டு உள்ள பைரவரின் அருளைப் பெற்று வருகின்றனர்.

கால பைரவர் வழிபாடு பலன்கள்:

கால பைரவரை முறையாக வணங்குவதின் மூலம் தீராத விவகாரங்கள் முடிவிற்கு வரும், வெளியூர்களுக்குப் போகும் முன் அவரிடம் வேண்டிக் கொண்டு சென்றால் தடங்கல் அற்ற பயணம் கிடைக்கும். தொல்லைகள் விலகும், எதிரிகள்நாசம் அடைவர். சண்டை சச்சரவுகள் குறைகின்றன, திருடர்கள் பயந்து ஓடுவர், தீய ஆத்மாக்களின் ஆக்ரமிப்புக்கள் விலகும், பேய், பிசாசுகளின் தொந்தரவு இருக்காது, வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என பலவிதங்களில் நம்பப்படுகின்றது.

சிவபெருமானின் அவதாரம் அவர். தான் குடிகொண்டு உள்ள ஆலயங்களைக் காப்பவர் என்ற பெருமைகளையும் பெற்றவர் அவர். யாகம் ஹோமங்கள், திருமணம் மற்றும் அனைத்து சுப காரியங்களிலும் பைரவர் பூஜையும் இடம் பெறுகின்றது. உணவு அருந்தும் முன் ஓதப்படும் மந்திரங்களில் காலபைரவர் கண்டிப்பாக இடம் பெறுகின்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 18 =

Most Popular