வெற்றியைத் தருவார் ஆஞ்சநேயர்!

49

அனுமனுக்கு மூன்று மாலை; வெற்றியைத் தருவார் ஆஞ்சநேயர்!

அஞ்சனை மைந்தன் என்றும் ராமபக்தன் என்றும் கொண்டாடப்படுகிற அனுமனுக்கு மூன்று மாலைகள் அணிவித்து வேண்டிக்கொள்வது ரொம்பவே விசேஷம். தொடர்ந்து அனுமனை தரிசித்து வந்தால், எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். தடைகள் அனைத்தும் அகலும்.

குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் குடியேறும் என்பது ஐதீகம். மாசி மாதம் எல்லா தெய்வங்களையும் வணங்குவதற்கு உரிய விசேஷமான மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்தும் மும்மடங்கு பலன்களைக் கொடுப்பவை.

அனுமன் வழிபாடு எப்போதுமே வலிமையை தரக்கூடியது. நம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் எதிர்ப்புகளையும் கூட பலமிழக்கச் செய்துவிடுவார் ஆஞ்சநேயப் பெருமான். புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், அனுமன் வழிபாடு செய்வது சிறப்புக்கு உரியது.

அஞ்சனையின் மைந்தனான ஆஞ்சநேயப் பெருமானுக்கு தன்னுடைய திருநாமத்தைச் சொல்லி வேண்டிக் கொள்வது கூட அத்தனை சந்தோஷமாக இருக்காதாம். ‘ஸ்ரீராமஜெயம்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தால், மகிழ்ந்து நமக்கு அருளுவாராம் அனுமன். அதேபோல், ஸ்ரீராமஜெயம் எழுதி, அதை மாலையாக்கி அனுமனுக்கு சார்த்தினால், குளிர்ந்து நமக்கு அருளிச் செய்வார் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

தொழிலில் தொடர்ந்து நஷ்டம் என்று வருந்துபவர்கள், வாழ்வில் எதற்கெடுத்தாலும் தடையாகவே இருக்கிறது என்று கலங்குபவர்கள், தொடர்ந்து ஆஞ்சநேயப் பெருமானை வணங்கி வந்தால், அவரின் செந்தூரப் பிரசாதத்தை நெற்றியில் இட்டு வந்தால், விரைவில் காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும்.

தொழிலில் லாபம் கிடைக்கப் பெறுவோம் என்கிறார் நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்ரீநிவாச பட்டாச்சார்யர். எளிமையான வழிபாடுகளில் அனுமன் வழிபாடும் ஒன்று. ‘அனுமன் சாலீசா’ பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம். அல்லது அதனை ஒலிக்க விட்டுக் கேட்டபடி அனுமனை வழிபாடு செய்யலாம்.

அனுமனுக்கு மூன்று மாலைகள் விசேஷம். துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். வடை மாலை அணிவித்து அலங்கரித்து நம் கோரிக்கைகளை அவரிடம் வைத்து முறையிட்டுப் பிரார்த்திக்கலாம். மேலும் வெண்ணெய்க் காப்பு சார்த்தி வேண்டுவதும் எண்ணற்ற பலன்களைத் தரும். தம்பதி இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

அனுமனும் செந்தூரமும்:

அனுமன், சீதா தேவி தன் நெற்றியில் செந்தூரம் இடுவதைக் கண்டு அதற்கான காரணத்தைக் கூறுமாறு சீதையிடம் கேட்டார். அனுமனின் களங்கமில்லா மனதை அறிந்த சீதை “தன் நெற்றியில் செந்தூரம் இட்டுக்கொள்வதால் தன் கணவரும், அனைவருக்கும் பிரபுவான ஸ்ரீராமரின் ஆயுள் நீளும்” எனக் கூறினார். இதைக் கேட்ட அனுமனும் உடனே அயோத்தியின் கடைவீதிக்குச் சென்று ஒரு கடைக்காரரிடம் செந்தூரம் தருமாறு கேட்டார்.

அந்தக் கடைக்காரரும் ஒரு டப்பாச் செந்தூரத்தைக் கொடுத்தார். இது பத்தாது என்றெண்ணிய அனுமன் அந்தக் கடைக்குள் புகுந்து செந்தூர மூட்டைக்குள் கையை விட்டு, தன் முகம் மற்றும் இதரப் பகுதிகளில் பூசிக்கொண்டார்.மேலும் அச்செந்தூர மூட்டையைத் தரையில் கொட்டி, அதில் புரண்டு தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்டார்.

அக்கோலத்துடனேயே அனுமன் அயோத்தியின் அரண்மனைக்குச் சென்றார். செந்தூரத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு அரண்மனைக்கு வந்த அனுமனைக் கண்ட ஸ்ரீராமர் சிரித்துக்கொண்டே அதற்கான காரணத்தைக் கேட்டார். “நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொள்வதால் தங்களின் ஆயுள் நீடிக்கும்” என்று சீதா தேவிக் கூறியதாகவும், சிறிய அளவில் இடும் செந்தூரத்திற்கே தங்கள் ஆயுள் நீண்டால், உங்கள் மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கு நான் என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொள்வதால் மேலும் உங்களுக்கு பலகாலம் ஆயுள் நீடிக்கும் அல்லவா என்றார் அனுமன். அனுமனின் இந்த பிரதிப் பயன் கருதாப் பக்தியை அங்கிருந்தோர் அனைவரும் போற்றினர்.