ஒரு காலத்துலே பண்ணிரெண்டு மஹரிஷிகள் சேர்ந்து, ஒரு பண்ணிரெண்டு வருச காலம் தவம் செய்ய தீர்மானிச்சாங்களாம்.
அப்போ அதுக்கு ஏத்த இடம் எதுன்னு பிரம்மாவிடம் போய் கேட்டதும், அவர் ஒரு தர்பைப் புல்லை எடுத்து வட்டமா சுத்தி அதை பூலோகத்தில் உருட்டி விட்டாராம்..
உருண்டு போன அந்த வளையம் போய் நின்ன இடம்தான் இந்தக் நைமி சரண்ய காடு!
சக்கரம் போல உருண்டோடிச்சதனால இந்த இடத்துக்கு நைமிசாரண்யம்ன்னு பெயர்கூட இப்படி வந்ததுதான்.
நேமி ன்னா சக்கரம். அது போய் நின்ன இடம் ஆரண்யம்.
நேமி ஆரண்யம் ,இப்ப நைமிசாரண்யமா மருவி இருக்கு!
நமக்கு நைமிசாரண்யம்ன்னா வடக்கத்திகாரர்களுக்கு இந்த இடம் நீம்சார்!
சக்கரம் நின்ன இடத்துலே கூடி இருந்து தவம் செய்யறாங்க ரிஷிமுனிவர்கள்.
பனிரெண்டு வருச தவம் பூர்த்தியாகும் சமயம் தீ வளர்த்து யாகம் செஞ்சு, தவத்தின் பயனை பெருமாளுக்கு அர்ப்பணிக்கிறாங்க.
தன்னலமாகக் கடவுளை வேண்டும் பழக்கம் எல்லாம் இல்லாத காலம் அது!
எனக்கு இது கொடு, அது கொடுன்னு இல்லாம எல்லாமே உலகமக்கள் நன்மையை வேண்டி மட்டுமே!
நாராயணனே வேள்வியில் இருந்து வந்து படையலை ஏத்துக்கிட்டார். அப்போ இந்தக் காட்டில் தோன்றியவர் இங்கேயே இருக்கார்னு ஐதீகம்.
இவரைத்தான் நம்ம திருமங்கை ஆழ்வார் பத்துப் பாசுரங்களில் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.
இந்த சக்கரதீர்த்தத்துக்குள் செல்வதற்கென்றே தனியா ஒரு நுழைவு வாசல். சக்ரதீர்த் த்வார்!
சின்ன வாசலாத்தான் தெரியும். கடந்து உள்ளே போனால் பெரிய மண்டபத்தில் மரக்கட்டில் / மரபெஞ்சுகளாப் போட்டு வச்சுருக்காங்க. அநேகமா ஒவ்வொரு பெஞ்சுக்கும் ஒரு பண்டிட் இருக்கார்
பக்தர்களுக்கு வேண்டிய எல்லா பூஜை புனஸ்காரங்களையும் நடத்திக் கொடுக்கறாங்க. வளாகம் ரொம்பவே பெருசு. வெளியே இருந்து பார்த்தால் பிரமாண்டம் தெரியாதவகையில் பரந்து கிடக்கு!
இந்த வளாகத்தின் நடுவில் பெரிய குளம்! நடுவில் வட்டமா ஒரு அமைப்பு. சக்ரம்! இதுக்குள்ளேயும் தண்ணீர்தான்.
சக்ரதீர்த்(தம்) ! மொத்தக்குளத்துக்குள் வட்ட அமைப்பை இறக்கி வச்சது போல் இருக்கு.
வெளியே வட்டத்தைச் சுற்றி இருக்கும் தீர்த்தத்தில் பக்தர்கள் இறங்கி தண்ணீரில் சும்மா நின்றாலே தானாக நீர் சுழலில் முன்னே இழுத்து செல்லும் அதிசயம் நடைபெறுகிறது.
குளத்திற்குள் உள்ள வட்டத்துக்குள் நட்ட நடுவில்
ஆழம் காணமுடியாத ஒரு நீர் ஊற்று இருக்குதுன்னும் இதுதான் பூமிப் பந்தின் நடு சென்டர்ன்னும் சொல்லபடுகிறது..
வெள்ளையர் ஆண்ட காலத்தில், இந்த நடுப்பகுதி எவ்ளோ ஆழமுன்னு அளக்கறதுக்காக ஒரு வெள்ளைகார தொரை நீளமான கம்பியை அதுக்குள்ளே இறக்குனதாகவும், அது பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கே தவிர தரையைத் தொடவே இல்லைன்னும், அதுவரை அனுப்புன கம்பியின் நீளமே மூவாயிரத்து முன்னூறு அடின்னும், இனி முடியாதுன்னு முயற்சியைக் கைவிட்டதாயும் சொல்லபடுகிறது..
உத்தர பிரதேசம் நைமிசாரண்யத்தில்
பிரம்மாவால் உருவாக்கப்பட்ட சக்கர தீர்த்தம்
