மன்னிப்பின் மகத்துவம் பற்றி தெரியுமா?
யார் மீதும் கோபப்படும் போதும் சரி, எரிச்சலடையும் போதும் சரி உங்களது மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. எப்போதெல்லாம் எரிச்சலும், கோபமும் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம், மூளையில் உருவான வடிவம் வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை உங்களது இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பிறகு கோபத்தோடு, எரிச்சலோடுமே நீங்கள் வாழ வேண்டி வந்துவிடும். யாருக்கெல்லாம் மன்னிக்கும் பழக்கம் இருக்கிறதோ அவர்கள் எல்லாம் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்று பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்று கூட சொல்லப்படுகிறது. மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம். இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்’ என்கிறது பகவத் கீதை. ஆனால், மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது? மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.
மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் பிள்ளைகளுக்கும் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும். அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.
குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும். பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.
மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.
மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிப்பவன் மாமனிதன்…
மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்…
மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்….
மன்னித்து மகான் ஆகுங்கள்…
