ஹரிகேசநாதர் பெரியநாயகி ஆலய வழிபாடு!

56

ஹரிகேசநாதர் பெரியநாயகி ஆலய வழிபாடு!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அரிகேசவநல்லுரில் அமைந்துள்ளது. இங்கு அருள்மிகு பெரியநாயகி என்கிற பிருகந்நாயகி உடனுறை ஹரிகேசநாதர் பக்தர்க்கு அருள் புரிகின்றார்.

ஆலயத்தின் சிறப்பு:
நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னன் இத்திருக்கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. அரிகேசவன் என்ற பெயரும் அந்த மன்னருக்கு உண்டு. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தின் வேறு பெயர்கள், அரிகேசவமடையார், அரிகேச்வரமுடைய நாயன்மார் மேலும் முல்லிநாட்டு ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப் பட்டதாம் மங்கலம் என்றாலே அங்கு வேதங்கள் ஓதப்பட்ட இடமாகும்.

பல்வேறு கல்வெட்டுக்கள், பழம் பெருமைகளை கொண்ட இத்திருக்கோயில், கும்பாபிஷேக விழாவை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் காணவில்லை. இறுதியாக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ரேவதி நட்சத்திரத்தில் நடைபெற்றது.

ஆலய அமைப்பு:

ஆரம்பத்தில் பெரியதோர் மண்டபம், பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் உறைவிடம். தாண்டினோமானால் இன்னும் விலாசமாக தேரோடும் வீதியையும் சேர்த்து மூன்று உட்பிரகாரங்கள் உள்ளன. மொத்தம் இரண்டு கருவறைகள், ஒன்றில் துவார பாலகர்களுடன் அருள்மிகு அரியநாதர் காட்சிதருகின்றார். மற்றதில் அருள்மிகு குபேரநாதர் லிங்க ரூபமாய் விளங்குகின்றார்.இதையே ஆதி அரியனாதராகவும் வர்ணிப்பார்கள்.

உள்ளே சென்றால் அருள்மிகு விநாயகர், ஜுரதேவர், சப்தகன்னியர், வள்ளி தெய்வயானையுடன் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி, சனி பகவான், சண்டிகேஸ்வரர்,மற்றும் காசி விசாலாக்ஷி சமேத காசி விஸ்வநாதச்வாமி சன்னதிகள் அழகுற அமையபெற்றதை காண்கின்றோம்.

தஷினாமூர்த்தி:

இத்தலத்து தென்முககடவுளை பார்க்கும்போது தக்ஷினாமுர்த்தி அருகே உள்ள பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்று என்பதை நினைவில் வைப்போம். மற்ற நான்கு குரு ஸ்தலங்கள் : திருப்புடை மருதூர், அத்தாளநல்லூர்,தென்திருப்புவனம், இடைகால் ஆகும். தக்ஷினாமுர்த்தி தனது இடது கரத்தால் சிஷ்யனை அருள் பாலித்துக்கொண்டும், வலது கை சின்முத்திரையுடனும் அழகாக அருள்புரிகின்றார்.
வெளிப்புறம் பார்த்தால் குபேரன், ஜேஷ்டா தேவி, பைரவர், முக்குருணீ விநாயகர், காசி விசாலாக்க்ஷி சமேத விஸ்வநாதர், வள்ளி தெய்வயானை சமேத முருகன், மற்றும் நவக்கிரகங்கள் எழிலுடன் இருகின்றார்கள்.

அம்பாள் சன்னதி:
அம்பாள், ஆலயத்தின் முன்றாம் பிரகாரத்தில் தனிக்கோயில் நாயகியாய் வீற்றிருக்கின்றாள். தீர்த்தக்குளமும் மிகவும் சீர் செய்யும் நிலையில் உள்ளதை காணலாம். மணிவாசகபெருமானின் விழாகொண்டாடும் மண்டபமும் அருகே அதே நிலையில் இருப்பதை காணலாம். ஆலய தல விருட்சமான நெல்லி மரம் சுவாமி சன்னதி பின்புறம் உள்ளது.

பரிகார பூஜைகள்:

ஜேஷ்டாதேவி இங்கே மாந்தி என்ற செவ்வாய் தோஷத்திற்கு அற்புதமான பரிஹார சன்னதி ஆகும், சமீபத்தில் நுற்றுக்கணக்கான குடும்பங்கள் இங்கு வந்து பரிஹார பூஜைகள் செய்து பலனடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.