Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalவிநாயகரை எப்படி வழிபட வேண்டும்?

விநாயகரை எப்படி வழிபட வேண்டும்?

விநாயகரை எப்படி வழிபட வேண்டும்?

இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றி ஓரத்திலும், இடது கையால் இடது நெற்றி ஓரத்திலும் (இரு கைகளாலும் ஒரே தடவையாக) 3 முறை குட்டி அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்பிக் கரணம் செய்தல் வேண்டும். (இவ்வாறு கூறூவாருமுளர் – வலது கையால் இடது நெற்றியிலும், இடது கையால் வலது நெற்றியிலும் குட்டுதல் வேண்டும்) குறுக்காக கைகள் வைத்து காதுகளைப் பிடிக்கும் போது வலது-கை வெளிப்பக்கமாக அமைதல் வேண்டும். இடது கை நெஞ்சோடு இருத்தல் வேண்டும். கைகளால் நெற்றியில் குட்டும் போதும் தோப்பிகரணம் செய்யும் போதும் “ஒம் கணேசாய நம” என்ற மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும்.

தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்:

அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.

அருகம்புல் மாலை ஏன்?

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான்.

விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

பெருச்சாளி (மூஷிஹம்) எப்படி விநாயகரின் வாகனமானது:

மாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் இந்திடன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவ-சக்தியின் வேண்டுதலினால் விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது.

அவன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வரவே, விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் பெருச்சாளியாக (மூஷிஹம்) உருமாறி விநாயகரைத் தாக்க வந்தான். விநாயகர் அதனை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =

Most Popular