சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?

188

கோவில் பிரசாத சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?

சர்க்கரை பொங்கல் என்றாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். அதுவும் கோவில்களில் பிரசாரமாக நெய்வேத்தியம் செய்து விநியோகிக்கப்படும் சர்க்கரை பொங்கல் என்றாலே அனைவருக்கும் அது மிகவும் பிடித்தமான ஒன்றாகத்தான் இருக்கக்கூடும். இதே கோவில் சுவையில் அட்டகாசமான ஒரு சர்க்கரை பொங்கலை நம் வீட்டிலேயே செய்வோம் வாருங்கள்…

கோவில் சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

1. பொங்கல் பச்சரிசி – 1 கப்,
2. பாகு வெல்லம் – 1 கப்,
3. பாசி பருப்பு – ¼ கப்,
4. நெய் – 100 கிராம்,
5. ஏலக்காய் தூள் – சிறிதளவு,
6. முந்திரிப் பருப்பு – தேவையான அளவு,
7. உலர்ந்த திராட்சை – தேவையான அளவு,
8. பச்சை கற்பூரம் – சிறதளவு,
9. தண்ணீர் – 3 கப்.

செய்முறை விளக்கம்:

1. முதலில் பொங்கல் பச்சரிசி மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடத்திற்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
2. அதன் பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
3. அதன் பின்னர் ஊற வைத்த பொங்கல் பச்சரிசி மற்றும் பாசி பருப்பை ஒன்றிற்கு மூன்று என்ற அளவில் தண்ணீர் ஊற்றி குக்கரில் சேர்த்து குழைவாக வேக வைத்து கொள்ள வேண்டும்.
4. இப்போது வேறு ஒரு பாத்திரத்தில் 1 கப் பாகு வெல்லத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைய விடவும். வெல்லம் நன்கு கரைந்ததும் வடிகட்டி வேக வைத்து பச்சரிசியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. வெந்த பச்சரிசி பாசி பருப்பு சாதத்துடன் வெல்லம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. பின்னர் வறுத்த முந்திரி திராட்சையை சர்க்கரை பொங்கலுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.
7. வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து கொஞ்சம் நெய் இறக்கி பரிமாறினால் சுவையான கோவில் சர்க்கரை பொங்கல் தயார்.