Tuesday, October 31, 2023
HomeAanmeega Thagavalgalசீரடி சாய்பாபா பற்றிய தகவல்கள்!

சீரடி சாய்பாபா பற்றிய தகவல்கள்!

சீரடி சாய்பாபா பற்றிய தகவல்கள்!

சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

ஸ்தல வரலாறு:

மதங்களைக் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் பூஜிக்கப்படும் மகான் சீரடி சாய்பாபா. பாபா யார்? அவரது பெற்றோர் யார்? அவரது பூர்வீகம் எதுப என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், கேள்வியின் நாயகனாகவே வாழ்ந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தினார் பாபா. இன்று, பக்தர்கள் பலரது கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.

சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ரகாதா தாலுகாவில் உள்ள சிறிய ஊர்தான் சீரடி. இங்குள்ள சாய்பாபாவின் நினைவிடத்திலேயே அவருக்கான கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது 16-வது சீரடி வந்து சேர்ந்த பாபா, அதன் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை.

அங்குள்ள `கண்டோபா’ என்ற மசூதியில் தான் தங்கியிருந்தார். பாபா நிகழ்த்திய முதல் அற்புதம், நானா சாஹேப் என்பவருக்கு குழந்தை பாக்கியம் அருளியதுதான். அதன் பிறகுதான் அவரது புகழ் வேகமாக பரவ ஆரம்பித்தது. இன்று உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.

அதிசய வேம்பு:

பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது. இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

3 முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள். தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள். கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அற்புத கல்:

பாபா வாழ்ந்த காலத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்துள்ளது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது.

பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் பாபாவே தங்களது குறைகளை நீக்கி விடுவார் என்று நம்புகிறார்கள். கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது. நாழிக் கிணறு என்று அழைக்கப்படும்.

இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதிசய நந்தா தீபம்:

இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது. பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.

ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம். கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சத்ய நாராயண பூஜை:

இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயண பூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் திருமணம் ஆன தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தால் அதுவும் சுமூகமாக தீரும் என்பது நம்பிக்கை.

திருவிழா:

குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. குருபூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.

பாபா கேட்ட வெந்நீர்:

சீரடி சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுகிறது.

எங்களுக்கு பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு, எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்… என்கிறார். தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − two =

Most Popular