Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalநவராத்திரி ஸ்பெஷல் !

நவராத்திரி ஸ்பெஷல் !

இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் சக்தி வழிபாட்டிற்கு மகத்துவம் அதிகம் என்றால், அது மிகையில்லை.
இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் ஆதி சக்தியாக விளங்கும், ஸ்ரீ லலிதா தேவியின் ஆராதனை மகோற்சவக் காலம்தான் நவராத்திரி பண்டிகை.
அந்தந்த குலத்திற்கேற்ப, அவரவர் சம்பிரதாயப்படி இந்த நவராத்திரி பூஜையை செய்கிறார்கள்.
முதல் நாள், பொம்மைகளைப் படியில் எடுத்து வைக்கும் பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:
வித்யா: ஸமஸ்தாஸ்தவ தேவி பேதா, ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஜகத்ஸு
இதற்கு அர்த்தம், ‘கலைகள் அனைத்தும் உன் வெளித்தோற்றமே.
உலக மாதர்கள் அனைவரும் உன் வடிவங்களே. அன்னையே உன்னை ஆராதிக்கிறேன்’ என்பதாகும்.
கொலு வைக்கும் இடத்தில் கோலம் போடும் பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
பூஜாம் க்ருஹாண ஸுமுகி, நமஸ்தே சங்கர ப்ரியே , ஸர்வார்த்த மயம் வாரி ஸர்வதேவ ஸமந்விதம்
(புருஷார்த்தமான தர்ம, அதர்ம, காம, மோக்ஷ எனப்படும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய சௌபாக்கியங்கள் எனக்கு சம்பவிக்குமாறு சங்கரியே நீ அருள்வாய்)
புஷ்பம் சார்த்தும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
பத்ம ஸங்கஜ புஷ்பாதி ஸதபத்ரைர் விசித்ரிதாம், புஷ்பமாலாம் ப்ரயச்யாமி க்ருஹாணத்வம் ஸுரேஸ்வரி
(பலவித மலர்களாலும், ஆயிரம் இதழ்கள் கொண்டான் தாமரை மலர்களாலும் உன்னை ஆராதிக்கிறேன். என் வேண்டுதலை நிறைவேற்றி காத்தருள்வாய்)
பண்டிகை முடிந்து, பொம்மைகளை படியிலிருந்து எடுத்து, சுற்றி, உள்ளே வைக்கும் பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
ஏஹி துர்கே மஹாபாகே ரக்ஷார்த்தம் மமசர்வதா, ஆவாஹயாமயஹம் தேவீ ஸர்வ காமார்த்த ஸித்தயே
(துர்கா, உன்னை அடைய வேண்டி, அதற்கான ப்ரயத்தனங்களை நிறைவேற்றி, எனக்கு மோக்ஷத்தைக் காட்டி ரக்ஷிக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்)
மேற்கண்ட ஸ்லோகங்களைக் கூறி அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த ஒன்பது நாட்களிலும், அம்பாளுக்கு உகந்ததாகக் கூறப்படும் வஸ்துக்கள் என்னவென்று பார்ப்போம். ஒன்பது நாட்களும் சமர்ப்பிக்க வேண்டியவை.
முதல் நாள், தேவிக்கு கூந்தல் அலங்கார திரவியங்கள்.
இரண்டாம் நாள், மங்கல சூத்திரங்கள், வஸ்திரங்கள், நறுமணத் தைலங்கள்.
மூன்றாம் நாள், கண்ணாடி, சிந்தூரம்.
நான்காம் நாள், மதுபர்க்கம், திலகம், கண் மை.
ஐந்தாம் நாள், அங்கங்களில் பூசிக்கொள்ளும் வாசனைத் திரவியங்கள்.
ஆறாம் நாள், வில்வங்களால் அலங்காரம்.
ஏழாம் நாள், கோஷங்களுடன் ஆடிப்பாடி மகிழ்வித்தல்.
எட்டாம் நாள், உபவாசம் இருந்து, அவரவர் சக்திக்கு ஏற்றவாறு, அம்பாளை ஆராதனை செய்தல்.
ஒன்பதாம் நாள், சண்டி தேவியை ஆத்மார்த்தமாக ஆராதித்து, பூஜையை முடித்த பின்னர், பூசணிக்காய், குங்குமம் கலந்து, வாசலில் உடைக்க வேண்டும்.
பத்தாம் நாள், அவசியமாக, புனர்பூஜை செய்ய வேண்டும்.
கொலு என்பது சம்பிரதாயமாக சிரத்தையுடன் கொண்டாட வேண்டிய பண்டிகை.
இந்த நன்னாட்களில், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியைப் போற்றி, பூஜைகளை முறைப்படி செய்தால், எல்லாம் வல்ல சர்வேஸ்வரி, நமக்கு சகல க்ஷேமத்தையும் தவறாமல் கொடுப்பாள் என்பதில் ஐயமில்லை.
நவராத்திரி நல்வாழ்த்துகள் !
தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − eleven =

Most Popular