Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalபக்தைக்காக வீட்டு வேலை செய்த பாண்டுரங்கன் - பக்த ஜக்குபாய் கதை

பக்தைக்காக வீட்டு வேலை செய்த பாண்டுரங்கன் – பக்த ஜக்குபாய் கதை

பண்டரிபுரம் அருகில் உள்ள கிராமம் சிஞ்சிருணிபுரம். இங்கு கங்காதரராவ்கமலாபாய் தம்பதியர் வசித்தனர். வழி வழியாக பாண்டுரங்கனை வழிபட்ட குடும்பம் இது. கமலாபாயின் கனவில் ஒருநாள் பாண்டுரங்கன் தோன்றினார். கமலா! உன் ஏக்கம் தீரப்போகிறது. பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று வருந்தினாயே! பார் புகழும் தெய்வக்குழந்தையை மகளாகப் பெறும் பாக்கியத்தை அடைவாய்! என்று வாழ்த்தி மறைந்தார்.

பாண்டுரங்கன் கொடுத்த வாக்கை கணவரிடம் தெரிவித்து மகிழ்ந்தார் கமலாபாய். மறுநாள் அவர்கள் பண்டரிபுரம் புறப்பட்டனர். சந்திரபாகா நதியில் நீராடி பாண்டுரங்கனைத் தரிசித்து மகிழ்ந்தனர். அதன்பின், ஒரு நல்ல நாளில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் கமலா.

குழந்தைக்கு ஜக்குபாய் என்று திருநாமம் இட்டனர். குழந்தை ஜக்குபாய் ஒருநாள், மணல் வீடு கட்டி தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். பாண்டுரங்கன் ஒரு முதியவராக வந்து அம்மணல்வீட்டை காலால் சிதைத்துக் கலைத்தார்.

குழந்தாய்! பகவானின் திருநாமத்தை ஜெபித்தபடி வந்து கொண்டிருந்தேன். கவனக்குறைவால் என் கால்கள் உன் மணல் வீட்டை மிதித்து விட்டன, என்றார் அவர்.

நீங்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, கையில் இருக்கும் தம்புராவை எனக்கு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்களை விடமாட்டேன், என்றாள் ஜக்குபாய்.

அவரும் தம்புராவைக் கொடுத்து, அதை மீட்டும் முறையையும் சொல்லிக் கொடுத்தார். ஓம் நமோநாராயணாய என்ற அஷ்டாக்ஷர மந்திரத்தையும் உபதேசித்து விட்டு மறைந்தார்.

ஜக்குபாய் அதை இடை விடாது ஜெபித்து வந்தாள். காலம் உருண்டோடியது. திருமண வயதை அடைந்தாள். ஆனாலும், பகவான் மீது கொண்ட பக்தி சிறிதும் குறையவில்லை.

மித்ருராவ் என்ற வாலிபன் அக்கிராமத்திற்கு வேலைக்கு வந்தான். ஜக்குபாயை திருமணம் செய்ய ஆசைப்பட்டான். முறைப்படி பெண் கேட்டான். மித்ருராவைத் தன் மருமகனாக ஆக்கிக் கொள்ள ஜக்குபாயின் தந்தை சம்மதித்தார். நல்ல நாளில் திருமணம் சிறப்பாக நடந்தது. புகுந்தவீட்டுக்குக் கிளம்பினாலும், ஜக்குபாயின் மனம் மட்டும் எப்போதும் பாண்டுரங்கனையே நினைத்துக் கொண்டிருந்தது.

மித்ருராவின் அம்மா,தன் மருமகளை ஒரு வேலைக்காரியைப் போல நடத்தினாள். காலையில் எழுந்தால், நடு ஜாமம் வரை செக்கு மாடு போல வீட்டு வேலையைச் செய்து கொண்டிருந்தாள். ஆனாலும் கூட, அவளுக்கு வசையும், அடியும் கிடைத்து வந்தன.

அவளுடைய ஆழ்ந்த பக்தியை பொருட்படுத்தாமல் பைத்தியம் பிடித்ததாகச் சொல்லி, ஒரு அறையில் வைத்து பூட்டவும் செய்தாள். குழந்தையாக இருந்த போது, வந்த அதே முதியவர் கோலத்தில் பாண்டுரங்கன் அவள் முன் தோன்றினார். ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். மித்ருராவ், மாமியார் இருவரின் அனுமதியோடு வீட்டுக்குள் வந்து கதவைத் திறந்தார்.

தங்கமே! பக்தி மார்க்கத்தோடு பெண்களுக்கு பதி சேவையும் முக்கியமானது. இல்லறத்தில் இருந்து கொண்டே பாண்டுரங்கனை வணங்கு! நிச்சயம் அவர் அருள் உனக்கு உண்டு! என்று ஆசியும் அறிவுரையும் அளித்தார்.

இதன் பின் சாந்த ஜக்குபாய் என்று பெயர் அவளுக்கு உண்டானது. தம்பதியர் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்புடன் இல்லறம் நடத்தி வந்தனர்.

ஒருநாள் பண்டரிபுரம் சென்று கொண்டிருந்த பாகவத கோஷ்டி சிஞ்சிருணிபுரம் வந்தது. ஜக்குபாய் அவர்களைக் கண்டு ஆனந்தம் கொண்டாள். அவர்களுடன் தானும் பண்டரிபுரம் செல்லும் எண்ணத்தில் கணவரின் அனுமதி கேட்டாள். மித்ருராவ் அனுமதி மறுத்ததோடு, அவளைக் கட்டிப் போட்டு அறைக் கதவைத் தாழிட்டான்.

அவள் முன் பாண்டுரங்கனே மாய ஜக்குபாயாகத் தோன்றினார். கயிற்றைக் அவிழ்த்து அவளை விடுவித்தார். ஜக்குபாய்! இப்போது பாகவதகோஷ்டியுடன் பண்டரிபுரம் கிளம்பிச் செல்! அதுவரை நான் இங்கேயே இருக்கிறேன் என்று அனுப்பிவைத்தார்.

பாகவத கோஷ்டியுடன் ஜக்குபாய் பண்டரிபுரம் கிளம்பினாள். மனைவி மீது இரக்கம் கொண்ட மித்ருராவ், மாய ஜக்குபாயை அவிழ்த்து விட்டான். அவளோ, மாயாஜாலம் புரிந்து வீட்டு வேலைகளை ஒரு நொடியில் முடித்து விட்டாள். அன்றோடு, மாமியார் மருமகள் பிரச்னை வீட்டில் இல்லாமல் போனது.

இதனிடையே பண்டரிபுரம் சென்ற ஜக்குபாய் அங்கேயே தங்கி பாண்டுரங்கனுக்குத் தொண்டு செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒருநாள், நந்த வனத்தில் மலர் பறிக்கச் சென்ற அவளை பாம்பு தீண்டியது. பண்டரிபுரம் வந்திருந்த சிலருக்கு, ஜக்குபாய் மித்ருராவின் மனைவி என்ற அடையாளம் தெரிந்தது. அவர்கள் மித்ருராவிடம் சென்று, அவள் பாம்பு தீண்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

என் மனைவி வீட்டில் இருக்கிறாள். நீங்களோ, பொய்க்கதை சொல்கிறீர்களே என்று அவர்களிடம் கோபித்துக் கொண்டான்.

இதற்கிடையில், ஜக்குபாயை உயிர் பிழைக்கச் செய்த பண்டரிநாதன் அவளை ஊருக்கு அழைத்துவந்தார். ஊர் நெருங்கியதும் மறைந்துவிட்டார்.

அப்போது, மாய ஜக்குபாய் தண்ணீர் எடுக்க குளத்திற்கு வந்து கொண்டிருந்தாள். நிஜ சக்குபாய்க்கு இக்காட்சியைக் கண்டதும் தான் வீட்டு ஞாபகமே வந்தது. பாண்டுரங்கா! இத்தனை நாளும் நீயா எனக்காக வேலை செய்தாய்! என்று சொல்லி மயக்கம் அடைந்தாள். அங்கே சங்கு சக்ரதாரியாய் பாண்டுரங்கன் அவளுக்கு காட்சி அளித்தார்.

மித்ருராவ்வுக்கு நடந்த விபரம் அனைத்தும் தெரிய வந்தது. அதன்பின், மித்ருராவ் ஜக்குபாய் தம்பதியர் பாண்டுரங்கனின் பரமபக்தர்களாக வாழ்ந்து பரமனின் பாதம் அடைந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − twelve =

Most Popular