ஹர ஹர மஹாதேவா
சம்போ மஹாதேவா
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் மிகவும் முக்கியமானதும், சிறப்பானதும் பிரதோஷம் விரதம்.
எத்தனை பிரதோஷம் வந்தாலும் சனிப் பிரதோஷம் மட்டுமே மிகவும் சக்தி வாய்ந்தது.
பிரதோஷம் நரஸிம்ஹருக்கும் அதி சக்தி வாய்ந்த விரதமாகும்.
பிரதோஷ வேளையில் தான்
ஸ்ரீநரஸிம்மர் அவதரித்தார்.
இன்றைய வைகாசி மாத மாலையில்
ஸ்ரீலஷ்மி நரஸிம்மர் ஸ்லோகம் மற்றும் வேத பாராயணம் செய்து அபிஷேகம் செய்தால் அஷ்ட லஷ்மியின் ஐஸ்வர்யம் பெருகும் மற்றும் எதிரிகளை அழிக்கும் வல்லமையை தருவார் அதனால் தவறாமல் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள் வைகாசி மாதம் அல்லவா நினைப்பது உடனே நிறைவேறும்.
விஷ்ணு பக்தர்கள் தவறாமல் நரஸிம்மர் அபிஷேகம் மற்றும் ஆராதனை பாருங்கள் எல்ல வளமும் பெற்று செல்லுங்கள்.
சரி பிரதோஷ விரதம் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாமா !!
அதற்கு முன் முதலில் கோவிலுக்கு செல்லும் முன் வீட்டிலேயே பத்தி எண்ணெய் விளக்கு பூ பழம் தேங்காய் ஊதுபத்தி கற்பூரம் என மறக்காமல் எல்லாமே எடுத்துச் செல்லுங்கள்.
கோவிலுக்குள் நுழைந்து விட்டால் அமைதி காக்கவும் சண்டை சச்சரவு தேவை இல்லை.
அப்படி செய்தால் அங்கு இருக்கும் அரூப தேவதைகள் உங்கள் வேண்டுதல்களை மறந்து போகுமாறு சபித்து விடுமாம்
அதனால் முடிந்தவரை பேசாதீர்கள்.
சரி பிரதோஷத்தை பார்க்கலாமா !!
இன்றைய ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் அதாவது ரவி வார பிரதோஷம் மற்றும் எல்லா தடைகளும் நீங்கி சூர்யனைப் போல் பிரகாசிக்க இந்த பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.
தோஷம் என்றால் குற்றம் என்று பொருள்.
பிரதோஷம் என்றால் குற்றமற்ற என்று அர்த்தம்.
அந்த குற்றமற்ற நேரத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவது சிறப்பு.
ஆகவேதான் பிரதோஷ விரத வழிபாட்டுக்கு மகத்துவம் அதிகம்.
பிரதோஷத்தில் ஐந்து வகை உண்டு: நித்தியப் பிரதோஷம்,
பக்ஷப் பிரதோஷம்,
மாதப் பிரதோஷம்,
மஹா பிரதோஷம்,
பிரளயப் பிரதோஷம்
என்பவை
அவையாவன
நித்தியப் பிரதோஷம்:
ஒவ்வொரு நாளும் சூரியன் மறைவதற்கு முன்னால் இருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து (சுமாராக மாலை 4.30 மணியில் இருந்து), நட்சத்திரங்கள் தோன்றக் கூடிய காலம் வரை உள்ள மாலை நேரம், நித்தியப் பிரதோஷம் எனப்படும்.
பக்ஷப் பிரதோஷம்:
வளர்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘பக்ஷப் பிரதோஷம்’ எனப்படும்.
மாதப் பிரதோஷம்:
தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம் ‘மாதப் பிரதோஷம்’ எனப்படும்.
மஹா பிரதோஷம்:
சிவ பெருமான் விஷம் அருந்தி, துயர் தீர்த்த (பிரதோஷம்) காலம் ஒரு சனிக்கிழமையன்று என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மஹா பிரதோஷம்’ எனப்படும்.
பிரளய பிரதோஷம்:
பிரளய காலத்தில் எல்லா ஜீவராசிகளும் சிவபெருமானிடம் ஐக்கியம் ஆகும். உலக முடிவில் உண்டாகும் அந்தக் காலமே பிரளய பிரதோஷம் என அழைக்கப்படுகிறது.
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்தது சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால்,
140 பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்ட புண்ணியம் கிடைக்கும் என்பது சிவனடியார்களின் வாக்காகும்.
சனிப் பிரதோஷம் :
எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷ விரதம் அதி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதுவும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சனிக் கிழமையில் வந்தால் அது ‘மஹா பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது.
சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால், ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலன் கிடைக்கும்.
அதுவே சனிக்கிழமை வரும் மஹா பிரதோஷத்தன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால், 10 வருடம் ஆலய வழிபாடு செய்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.
சிறப்பு தரும் பால் அபிஷேகம் :
சிவபெருமான் ஒரு அபிஷேகப் ப்ரியர்.
அவருக்கு பிரதோஷத்தன்று கறந்த காராம் பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம்.
இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது நல்லது.
இறைவன் இயற்கையை விரும்பக் கூடியவன்.
அன்றைய பிரதோஷ காலத்தில் சிவனின் 11 பெயர்களை உச்சரித்து வழிபட்டால் பாவம் விலகும்
அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்களின் தோஷத்தை நிவர்த்தி செய்து வைக்கும், மிகப் பெரும் தோஷ நிவர்த்தி பூஜையாக கொண் டாடப்படுவது பிரதோஷ பூஜையாகும்.
அன்றைய தினத்தில் சிவபெருமான் குறிப்பிட்ட காலத்தில் மக்களின் ஒருசில செய்கையால் விளைந்த பாவங்களை போக்கி அருளுகிறார்.
அந்த புனித வேளையில் மக்கள் சிவனை வழிபட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளில் ஒன்றுதான் சிவனின் முக்கிய 11 பெயர்களால் அவரை வணங்கும் சிவ நாம அர்ச்சனை வழி பாடாகும்.
1. பவன்,
2. ருத்திரன்,
3. மிருடன்,
4. ஈசானன்,
5. தானு,
6. சம்பு,
7. சருவன்,
8. உக்கிரன்,
9. பர்க்கன்,
10. பரமேஸ்வரன்,
11.மகாதேவன்
ஆகிய திருநாமங்களில் சிவபெருமானை பிரதோஷ தினத்தில் துதித்து வழிபட்டால் மிக அற்புதமான பலன்களை பெறலாம்.
மேற்கண்ட ஒவ்வொரு பெயருக்கும் உள்ள சிறப்பை பார்ப்போம்.
1. பவன்:
பிரதோஷ காலத்தில் சிவனை வேண்டிக் கொள்ளும் போது பவனே என்னைக் காப்பாற்று என்று வேண்டிக் கொள்ளுதல் வேண்டும்.
எல்லாவற்றையும் தன்னிடமிருந்து தோற்றுவிப்பவன் சிவபெருமான்.
இதுவே பவன் என்ற பெயரின் பொருளாகும். ஒரு குருவை சீடன் இதற்கு விளக்கம் கேட்டான்.
தங்கம், வெள்ளி, முத்து, பவளம், வைரம், ரத்தினம், நீலம், புஷ்பராகம், வைடூரியம் இவைகள் எங்கே கிடைக்கின்றன? என்று குரு கேட்டார்.
அதற்கு அந்த சீடன் பூமியில்தான் என்றான். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் எங்கே தோன்றுகிறது?
பிறப்பு, மரணம் எங்கே நடைபெறுகிறது? என்று குரு கேட்டார்.
அதற்கு அந்த சீடன் எல்லாம் பவனே அனைத்தும் அங்கிருந்தே வருகிறது என்றான்.
ஆகவே பிரதோஷ தினத்தில் பவனை வணங்கினால் பாவம் தொலைந்து நல்லது நடக்கும்.
2. ருத்ரன்:
இது சிவபெருமானின் இரண்டாவது பெயராகும்.
ருத்ரர் என்ற பெயர் மிகவும் சிறப்பானதாகும்.
பிரதோஷ காலத்தில் பக்தர்கள் ருத்ரரின் பெயரைச் சொல்லி வணங்க வேண்டும்.
பிறப்பு ஒரு நோய் என்றார் தத்தாத்ரேயர், பிறந்த பின்பும் உடம்புக்கு நோய் வருகிறது. பந்தம், பாசம், இவைகளால் மனிதன் ஆண்டவனை மறக்கிறான். அதனால் பந்த பாசம் ஒரு நோயே என்றார் தத்தாத்ரேயர்.
கோபம், பொறாமை, காமம் அனைவரையும் வாட்டுகின்ற ஒரு பெரிய நோய்.
இதனால் பிறப்பு இறப்பு நோய்களை போக்கும் சக்தி ருத்ரனுக்கு உண்டு. பிரதோஷ காலத்தில் ருத்திரனை வழிபட்டால் குற்றங்கள் எல்லாம் மனித சிந்தனையிலிருந்து மறையும்.
3. மிருடன்:
இது சிவபெருமானின் மூன்றாவது சிறப்பு பெயராகும். எல்லோரையும் சுகம் அடையச் செய்து உரிய இடத்தில் சேரும்படிச் செய்பவர் சிவபெருமானே இதுவே மிருடன் என்ற பெயரின் பொருளாகும். பிரதோஷ காலத் தில் பக்தர்கள் மிருடனே சுகம் கொடு என்று கேட்டால் துன்பத்தைப் போக்கி விடுவான் இதுவே மிருடன் தரும் பலன் ஆகும்.
4. ஈசானன்:
சிவபெருமானின் நான்காவது தோற்றம் ஈசானன். ஆங்கிலத்தில் கார்னர் என்றால் மூலை என்று பெயர். எந்த இடத்தில் அமர்ந்து கொண்டால் நீ புகழ் அடைவாய் என்று யோசி அந்த இடத்தில் சென்று அமர்ந்து கொள் அதுவே ஈசான்ய மூலை ஆகிவிடும் என்கிறார் சிவன். சிவ லிங்கங்கள் இருக்கின்ற இடங்களெல்லாம் ஈசான்ய மூலைகளே. கடவுள் எல்லா இடங்களிலும் வைத்து மனிதன் புகழ் கொடி நாட்ட வேண்டும். இதுவே இதன் கருத்தாகும். சிவனை வழிபட்டு இதை அடையுங்கள் தனக்கு மேற் பட்டோர் ஒருவரும் இல்லாதவன் இதுவே ஈசானன் என்ற சொல்லின் கருத்தாகும்.
5.தானு:
இது சிவபெருமானின் ஐந்தாவது பெயர். சிறிது அசைவின்றி நிலை பெற்றிருப்பவன் தானு என்ற பெயரின் பொருள் இதுவே தானுலிங்கம் என்றும் சிவதானு என்றும் சிவனுக்குப் பெயருண்டு பக்தியுடன் சிவனை ஓரிடத்தில் வைத்தாலும், பக்தியின்றி சிவனை ஓரிடத்தில் வைத்தாலும் கடவுள் அங்கேயே நிலைத்து விடுவார். அவனை அசைக்க முடியாது. பக்தர்களே, பிரதோஷ காலத்தில் நீங்களும் தானுலிங்கத்தை வழிபட்டு வெற்றி பெறுங்கள்.
6. சம்பு:
சம்பு சிவபெருமானின் ஆறாவது திருஉருவமாகும். இப்பெயர் ஞான மூர்த்தியாக விளங்கிய முருகனுக்கு ஒரு தனிச் சிறப்பினைத் தந்தது. சம்பு என்ற கடவுள் உயர்வு அடைவதற்குத் தேவையான பொருளை அனைவருக்கும் உடனே தருவார். அதனால் சிவனுக்கு சம்புப் பிரசாத் என்றும் பெயருண்டு. சம்பு மகாதேவன் என்பது சம்போ மஹாதேவா என்று ஆகியது. சம்போ மகாதேவா என்று ஒரு முறை அழைத்தால் சிவபெருமான் மனிதனுக்கு எல்லாத் துறைகளிலும் உடனே உயர்வினை தருவார்.
7. சருவன்:
சருவன் என்பது சிவபெருமா னின் ஏழாவது பெயராகும். இப்பெயரைச் சொல்லி இத்திருவுருவத்தைப் பிரதோஷ வேளையில் வழிபட வேண்டும். வழிபட்டால் உலகத்திற்கு மிகப் பெரிய நன்மை விளையும். சருவன் என்றால் கொடியவர்களைத் தண்டித்துக் கொள்பவன் என்று பொருள். மிக கொடியவர்களை சிவபெருமான் தண்டித்து மக்களை காக்கிறார்.
8. உக்கிரன்:
இது சிவபெருமானின் பதினொரு திருஉருவங்களில் எட்டாவது உருவத்தின் பெயராகும். எண் தோள் வீசி ஆடும் சிவபெருமானின் பதினொரு திரு உருவங்களுக்கு ஏகாதச ருத்திரங்கன் என்று பெயர். உக்கிரன் என்றால் எதிலும் நின்று ஆட்சி செய்பவன் என்று பெயர் ஆட்சியாளன் என்று பெயருண்டு. இவ்வுக்கிரன் பூஜை செய்தவுடன் உடனே மகிழ்வார். அதேபோல் தவறு செய்தவுடன் உடனே கோபிப்பார்.
9. பர்க்கன்:
பர்க்கன் இது சிவபெருமானின் ஒன்பதாவது அவதாரம் அப்பொழுது ஒரு சிறப்பான உருவம் அவருக்குக் கிடைக்கிறது உலகில் எல்லா துறைகளிலும் தகராறுகள் வரும். தவறுகள் வரும். தவறு இழைப்பதனால் இவைகள் வருவதில்லை. அனைத்துமே அறியாமையினால் நிகழ்கின்றன. அறியாமையைப் போக்கி எல்லா உயிர்களையும், அறிவு உள்ளவர்களாய் ஆக்குவதே பர்க்கன் என்ற கடவுளின் வேலையாகும்.
10. பரமேஸ்வரன்:
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் ஒரே சமயத்தில் செய்கின்ற சிவபெருமானுக்கு பரமேஸ்வரன் என்று பெயர். இது இறைவனுக்குக் கிடைத்த பத்தாவது திருநாமமாகும். இச் சமயத்தில் இறைவன் முழு மகிழ்ச்சி அடைந்து கூத்தாடினான். அப்பொழுதே அவனுக்கு நடராஜர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது.
இவனது திருக்கோயில் சிதம்பரம். பிரதோஷ கால பூஜையில் ஒருநாள் அனைவரும் நடராஜரை வழிபடுதல் வேண்டும். பரமேஸ்வரன் சிந்தனை உள்ளவர்களே நாட்டியம் ஆடுவார்கள்.
பற்பல அபிநயங்களைப் பிடித்துக் காட்டுவார்கள் நடராஜரின் உருவம் இதுவே என்பதை அறியுங்கள். சிவன் கோயிலில் இருக்கின்ற மற்ற உருவங்கள் எல்லாம் பூஜை செய்து வழிபடும் உருவங்கள். அங்கு நடராஜப் பெருமான் ஒருவனே நித்திய தரிசனத்திற்குரிய கடவுள்.
11. மஹாதேவர்:
சிவபெருமானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் திடீரென்று ஏற்பட்டது. இது பக்தர்களுக்காகத் தோன்றிய ஒரு அற்புதத் தோற்றம் ஆகும்.
இது இறைவனின் பதினொன்றாம் பெயராகும்.
எல்லையில்லாத பேரொளியுடன் அமர்ந்து இருந்தார் சிவபெருமான் இதுவே மஹாதேவன் என்ற பெயரின் பொருள்.
ஹர ஹர மஹாதேவா என்றால் எத்திசையிலும் இப்பேரொளி எல்லையில்லாமல் இருக்கும்.
அதற்காகவே மகாதேவன் தோன்றினார். ஒளிக்கு பின் பக்தன் விரும்பினால் தனது உருவத்தையும் காட்டுவார்.
சிவபெருமானிடம் இருட்டைக் காண முடியாது.
பிரதோஷ பூஜையின் போது சிவபெருமான் பதினொரு வடிவங்களை எடுக்கிறார்.
பிரதோஷ பூஜையின்போது மேற்கண்ட பதினொரு வடிவங்களையும் நாம் நினைத்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள் விலகி சிவபெருமானின் அருள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
அதேபோல பிரதோஷம் அன்று சோமசூக்தப் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
முதலில் நந்தியை வணங்கி, பிறகு அதன் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு வழக்கமாக வலம் வருவதற்கு மாறாக, அப்பிரதட்சிணமாக (எதிர் வலமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை போய்த் திரும்ப வேண்டும். அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டக் கூடாது!
இதன்பின் போன வழியே திரும்ப வேண்டும். நந்தியை தரிசித்து, தினந்தோறும் செய்யும் வழக்கப்படி வலம் வர வேண்டும். அப்போதும், அபிஷேகத் தீர்த்தம் வரும் வழியைத் தாண்டாமல் அப்படியே திரும்பி, நந்தி வரை வர வேண்டும். இந்த முறைப்படி மூன்று தடவை செய்ய வேண்டும். இதுவே ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக – அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இட-வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் ‘சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் மேற்குறிப்பிட்ட முறைப்படி தரிசனம் செய்து வழிபட்டால் கடன், வியாதி, அகால மரணம், வறுமை, பாவம், மனத் துயரம் முதலானவை நீங்கும். முக்தி கிடைக்கும்.
பிரதோஷத்தின்போது கோயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ‘சோமசூக்தப் பிரதட்சிணம் செய்கிறேன் பேர்வழி’ என்று நாம் நிலையாக நந்திக்கு முன்னால் நின்று கொள்ளக் கூடாது. கோபமே இல்லாமல், பொறுமையாக, அமைதியாக வலம் வர வேண்டும்.
சிவபெருமானுக்கு இயற்கையான வில்வ இலை அர்ச்சனை அதிக அளவில் மகிழ்ச்சிப்படுத்தும்.
இது தவிர தும்பைப் பூ நாகலிங்கம் பூ சங்கு பூ தாமரை பூ வில்வ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று, சிவனை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான பக்தியுடன் வழிபட்டால் தேவாதி தேவர்களும் போற்றும் மஹா தேவர் சகல தோஷங்களை நீக்கி ஸர்வ மங்களமும் உண்டாக்குவார்.
நாகருடன் இருக்கும் சிவ பெருமானை வழிபட்டால் பலன்கள் இரட்டிப்பாகும்.
