அதிசயங்கள் நிறைந்த கோயில்கள் – பகுதி 1!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்க பெருமான் வழியாகச் செல்லும். அதே போன்று தான் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கு இடையில் கோடு போட்டால், அது சுந்தரேசுவரர் சன்னதியை இரண்டாக பகிர்ந்து செல்லும்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் தோற்றத்துடன் காட்சி தருகிறார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் நந்தி அனுமன் போன்று காட்சி தருவார்.
தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித் திட்டையிலுள்ள வசீஸ்டேஸ்வரர் கோயில் கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இந்தக் கல் சந்திரனிடமிருந்து கிரகணங்களைப் பெற்று நீராக்கி, 24 நிமிடத்திற்கு ஒரு முறை லிங்கத்தின் மீது விழச் செய்து அபிஷேகம் செய்கிறது.
நெல்லியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டை அருகில் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் தேங்காயை விடலை போட்டால் அது, கொட்டாங்குச்சி (சிரட்டை) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். ஆகையால், இங்குள்ள பிள்ளையார் சிரட்டை பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்.
திருவண்ணாமலை அருகில் 16 கிமீ தொலைவில் தேவிகாபுரம் உள்ளது. இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் கனக கிரீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இவருக்கு தினந்தோறும் வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. காலையில் 2 மணி நேரம் மட்டுமே இவருக்கு பூஜை செய்யப்படும். சிவராத்திரி நாளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
பொதுவாக கோயிலுக்கு சென்று வந்தால் கோயில் உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் என்று தான் காணிக்கை போடுவோம். ஆனால், இலங்கையில் உள்ள கதிர்காம முருகன் கோயிலில் காசோலையை காணிக்கையாக போடும் வழக்கம் இருந்து வருகிறது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாத பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோன்று செய்வதில்லை.
கும்பகோணம் நல்லம் நலத்திலுள்ள கோயிலில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.
எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும் தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.
