பக்தர்கள் கேட்ட வரத்தை கொடுத்தருளும் தவசிலிங்கம்!

43

பக்தர்கள் கேட்ட வரத்தை கொடுத்தருளும் தவசிலிங்கம்!

விருதுநகர் மாவட்டம் மூளிப்பட்டியில் அருள்பாளிக்கும் தவசிலிங்கம் கோயில் வரலாற்றை பற்றி இப்பதிவில் பார்ப்போம் காணலாம் பார்ப்போம்…

ஆலயத்தின் சிறப்பு:

இவ்வாலயத்தின் மூலவர் மற்றும் உற்சவர் பெயர் தவசிலிங்கம் ஆகும். இக்கோவிலில் தனிச்சிறப்பு என்னவென்றால், லிங்கம் பின்பு அய்யனார் வீற்றிருப்பது எக்கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

ஆலய வரலாறு:

இங்குள்ள தவசிலிங்கம் கோயில் பகுதி 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் ஆண்ட காலத்தில் புதராக இருந்துள்ளது.இங்கு மேய்ச்சலுக்கு வந்த பசு மாடு ஒன்று பால் தராமல் இருக்க இதை கண்காணிக்க மன்னர் உத்தரவிட்டுள்ளார். புதருக்குள் மாடு சென்று வருவதை அறிந்த வேலையாட்கள் மன்னரிடம் கூறி உள்ளனர். புதரை தோண்டும் போது மண்வெட்டியால் வெட்டியதில் ரத்தம் பீரிட லிங்கம் தென்பட்டது. உடனே அங்கு மண்கோட்டையால் கோயில் எழுப்பி உள்ளனர். இதுவே தவசிலிங்கம் தோன்றிய வரலாறாயிற்று.

லிங்கம் பின்பு அய்யனார் வீற்றிருப்பது எக்கோயிலிலும் இல்லாத சிறப்பு. இதோடு இக்கோயில் வளாகத்தில் பைரவரில் துவங்கி வேட்டை கருப்பசாமி ,சப்தகன்னிமார்கள் ,கண்திருஷ்டி விநாயகர் ,தட்சணாமூர்த்தி , துர்க்கை ,வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி என 32 சன்னதிகளும் உள்ளன. தலையிலிருந்து கங்கை நீர் விழுவது போன்று 12 அடி உயரத்தில் சிவபெருமான் சிலையும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னர்கள், ஜமீன்தார்கள் வழிப்பட்ட பழமை வாய்ந்த இக்கோயில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குலகோயிலாகும் .இவரது சொந்த நிதியில் கோயில் புனரமைக்கப்பட்டு மூன்றாவது முறையாக 2020 ஆகஸ்ட் 28ல் கும்பாபிஷேகமும் நடந்து முடிந்துள்ளது. மூலவர் சன்னதியானது மன்னர்காலத்தை போன்று கல்கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆலய திருவிழாக்கள்:
பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி போன்றவை இங்கு சிறப்பாக நடைபெறும்.

பக்தர்களின் பிரார்த்தனை:

இவ்வாலயத்திற்கு வந்தாலே மனதிலுள்ள கஷ்டங்கள் பஞ்சாக பறந்து விடுகிறது. கேட்ட வரத்தை கொடுப்பதிலும் தவசிலிங்கம் சக்தி உள்ளவராக உள்ளார் என்பதில் ஐயமில்லை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.