விவசாயம் செழிக்க வழிபட வேண்டிய அம்மன்!
தேனி, ஆண்டிபட்டி என்ற ஊரில் உள்ளது காளியம்மன் கோயில். இங்கு காளியம்மன் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமியன்று விழா நடக்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் எந்தச் செயலை செய்தாலும் காளியம்மனிடம் பூக்கட்டி உத்தரவு கேட்ட பின்னரே செயலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சிவப்பு மற்றும் வெள்ளை மலரை தனித்தனியாக கட்டி போட்டி காளியின் திருப்பாதத்தில் இடுகின்றனர். பூஜை முடித்து அர்ச்சகர் தரும் பொட்டலத்தில் வெள்ளை மலர் வந்தால் எண்ணிய செயல் காளியின் அருளால் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால், மற்ற அம்மன் கோயிலில் சிவப்பு மலர் அம்பாள் அனுமதி வழங்கியதாக சொல்வர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று பூக்கட்டி உத்தரவு கேட்க ஏராளமானோர் வருவதாக சொல்லப்படுகிறது.
கருவறையில் நீதியை நிலைநாட்டுபவளாக காளி வீற்றிருக்கிறாள். ஐந்து தலை நாகம் காளிக்கு குடை பிடித்துள்ளது. வலது காலை மடித்து, இடது காலை தரையில் ஊன்றியும் உள்ள இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில் உடுக்கை, பாம்பு, சூலம், கபாலம் ஏந்தியிருக்கிறாள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுபவளாக இருக்கும் இவளை வழிபட்ட பின்னரே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஊர்க்காவல் தெய்வங்களுக்கு திருவிழா நடக்கும். தனக்கு குறை நேர்ந்தாலும் பொறுத்துக் கொள்ளும் இவள், தனது பக்தர்களுக்கு யாரேனும் தீங்கு எண்ணினால் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.
விவசாயம் செழிக்க இங்குள்ள அம்மனை வழிபாடு செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அக்னிசட்டி, மாவிளக்கு, பொங்கல், முளைப்பாரி, பால்குடம் ஆகிய நிவர்த்திக்கடனை செய்கின்றனர். விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக பௌர்ணமி வழிபாடு செய்பவர்கள் பகலில் உண்ணாமல் விரதமிருந்து கோயிலுக்கு வருகின்றனர். அன்று இரவில் பாலபிஷேகம் நடக்கிறது. பிரசாதப்பாலை அருந்தி விரதத்தை நிறைவு செய்கின்றனர். பங்குனியில் நடக்கும் திருவிழாவில் அக்னி சட்டி, மாவிளக்கு, பொங்கல், முளைப்பாரி, பால்குடம் ஆகிய நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.
கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்னர் முட்புதர் சூழ்ந்த பகுதியாக இருந்தது. ஊருக்கு நடுவில் ஒரு திரிசூலத்தை வைத்து பக்தர்கள் காளியம்மனாக வழிபாடு செய்து வந்தனர். இங்கு வசித்த பேரி நாயக்கர் என்ற முதியவரின் கனவில் தோன்றிய காளி, கேரளாவில் சோட்டானிக்கரையிலிருந்து ஆற்றில் அடித்துவரப்பட்ட எனது சிலை வடமலை நாயக்கன் பட்டியில் வைகை ஆற்று மணலில் புதைந்து கிடக்கிறேன். பதினாறு அடி தோண்டினால் எனது சிலை கிடைக்கும். அதை எடுத்து வந்து கோயில் அமைத்து வழிபாடு செய்யுங்கள் என்றாள். மறுநாள் பேரி நாயக்கரின் தலைமையில் ஊர்மக்கள் சென்று அம்பாள் சிலையை எடுத்து வந்து கோயில் எழுப்பினர். அவளுக்கு காளி என்று பெயர் வைத்தனர்.
