பாரத போர்…
உடல் முழுவதும் அஸ்திரங்கள் எய்யப்பட்டு அம்பு படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். அவரை சுற்றி கண்ணன், பாண்டவர்கள், கௌரவர்கள் என அனைவரும் கவலையுடன் நின்றிருக்க,
பீஷ்மரோ அம்பு படுக்ஙையிலும்கம்பீரமாக படுத்து, கணீர் குரலில் நல்ல உபசேங்களை கூறிக் கொண்டிருந்தார்.
அவரின் உபதேசங்களை காது குளிர கேட்டு மகிழ்ந்த பாண்டவர்களில் ஒருவரான தருமர், “பாட்டனாரே! உங்கள் உபதேச கருத்துக்கள் யாவும் மனிதன் போற்றி வாழக்கூடிய ஒன்று.
ஆனால் வாழ்வில் இவையெல்லாம் ஒரு மனிதன்கடைபிடித்து வாழ்வது என்பது கடினமன்றோ! அதனால் எளிமையான உபதேசங்கள் எவையேனும் இருந்தால் அதைப்பற்றி கூறுங்களேன்”, என்று வேண்ட,
தருமர் கூறியதைக் கேட்ட பீஷ்மர், தன் இரு கண்களால் கண்ணனை பார்த்துக்கொண்டே, தன் இரு கரம் கூப்பி கண்ணனை வணங்கிக் கொண்டே,
“ஆயிரம் ஆயிரம் பாவங்களை போக்கவல்ல ஆயிரம் அனந்தனின் நாமத்தை கூறுகிறேன்; கேட்டு உயர்வு பெறுங்கள்.” என்று கூறியதுதான் விஷ்ணு சகஸ்ரநாமம்.
அனந்தனின் ஆயிரம் நாமங்களை கேட்டு பூரிப்படைந்தனர் யாவரும். ஆனால் சகாதேவன் மட்டும் ஏதோ யோசனை செய்து கொண்டிருக்க, அதை கவனித்த கண்ணன், சகாதேவனை தனியே அழைத்து சென்று அவனது யோசனைக்கு காரணம் கேட்க,
சகாதேவன், “அனைத்தும் அறிந்தவன் நீ… என் யோசனை என்னவென்று அறியாதவனா …! சரி, நானே கூறுகிறேன் கண்ணா!
பீஷ்மர் கூறிய உனது ஆயிரம் திருநாமங்களை கேட்டு நாங்கள் மன பாரம் குறைந்தோம். மனம் தெளிவுற்றோம் என்பது எல்லாம் உண்மையே…
ஆனால் நாங்கள் கேட்ட இந்த புண்ணிய விஷ்ணு சகஸ்ரநாமம் ஆயிரத்தையும், இனி வரும் மக்கள் யாவரும் கேட்கும் வண்ணம் அதை நாங்கள் குறிப்பெடுத்து வைக்க முடியாமல் போயிற்றே.. அதை நினைத்துதான் நான் யோசனை செய்தேன்.” என்று வருந்தி கூற,
கண்ணன், “சகாதேவா! வருந்தாதே.. பீஷ்மரின் கழூத்தில் ஒரு ஸ்படிகமாலை உள்ளது. அவர் எரியூட்ட படுவதற்கு முன், அந்த ஸ்படிக மாலையை அணிந்து கொள்.. அவர் கூறிய சகஸ்ரநாமம் ஆயிரமும் உன் சிந்தனையில் தோன்றும்; நீ அதை எழுத்து வடிவமாக உருவாக்கி, வியாசர் மூலம் இந்த உலகுக்கு தந்து விடு.” என்றான் கண்ணன்.
சகாதேவன் சிரித்துக் கொண்டே, ” கண்ணா! பீஷ்மரின் ஸ்படிக மாலைக்கு அவ்வளவு சக்தியா! அப்படி என்ன சக்தி அதில் இருக்கிறது?”, என்று கேட்க,
கண்ணன், “சகாதேவா! முன்பொருமுறை பீஷ்மர் இளைஞராக இருக்கும் போது, கங்கை கரை நோக்கி சென்று.. கங்கை மாதாவை வணங்கி, ‘தாயே! என் தந்தை சாந்தனுவுக்காக, என் வாழ்வில் எந்த பெண்ணையும் திருமணம் செய்ய மாட்டேன்.., என்று சத்தியம் செய்து சபதம் செய்துள்ளேன்..
‘எவருமே சொல்லத்தயங்கும் இந்த வார்த்தையை, நான் என் தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்ததால், தேவர்களும், முனிவர்களும் என்னை வாழ்த்தி பிதாமகன் பீஷ்மர் என எனக்கு பட்டம் அளித்துள்ளனர்.
‘ஆனாலும் இந்த இளமையில் காதலும், காமமும் என்னை ஆட்கொள்ளாமல் இருக்கவும், என் தந்தைக்கு நான் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றவும், தாங்கள்தான் எனக்கு அருள வேண்டும் தாயே!’ என்று வேண்டி அழுதார் பீஷ்மர்.
குழந்தை அழுதால் தாய் பொறுப்பாளா என்ன..! தன் மகன் அழுததை பொறுக்காத கங்கை மாதா, பீஷ்மர் முன் தோன்றி, ‘மகனே தேவ விரதா! இல்லை..இல்லை.. மகனே பீஷ்மா! அப்படித்தானே உன்னை எல்லோரும் அழைக்கிறார்கள்.. உன் இரு கரங்களையும் நீட்டு’ என்றாள் கங்கை மாதா.
பீஷ்மரும் தன் இரு கரங்களையும் நீட்ட.. பீஷ்மரின் இரு உள்ளங் கைகளிலும் கங்கை நீர்.. சில துளிகள்விழுந்து.. பின் அதுவே ஒரு ஸ்படிக மாலையாக மாறியது.
ஸ்படிக மாலையை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்த பீஷ்மரிடம் கங்கை மாதா கூறலானாள், ‘மகனே! திருமாலின் வாமன அவதாரத்தில் அவரது பாத கமலத்தில், பிரம்மதேவரின் கமண்டலத்தில் உள்ள நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, பெருக்கெடுத்து பூலோகம் வரும் வேளையில், சிவபெருமான் தன் சடையில் நீரின் வேகத்தை தாங்கி.. சூடி கொள்ள,
பின் பகீரதன் செய்த தவத்துக்கு இணங்கி, சிவபெருமான் அந்த நீரை சடையில் இருந்து அவிழ்த்து.. பூலோகத்தில பெருக்கெடுத்து ஓட செய்து, அந்த நீரான எனக்கு கங்கை எனவும் பெயர் சூட்டி என்னை அழைத்தார்.
‘இப்படி மும்மூர்த்திகளின் ஸ்பரிசத்தால் பூலோகம் வந்ததால், பாவங்களை போக்கும் புண்ணிய நதி என்ற பெயர் எனக்கு உருவானது. அப்படியே உன் கையில் இருக்கும் ஸ்படிக மாலையும் புனிதமாக இருக்க வைக்கும் உன்னை. நீ நினைக்கும்.. கூறும் நல்ல உபதேசங்கள் யாவும் இந்த ஸ்படிக மாலையில் படிந்து விடும்.
‘அப்படியே.. உனக்கு பின் இந்த ஸ்படிக மாலையை யார் அணிகிறார்களோ, அவர்களுக்கு உன் உபதேச மொழிகள் யாவையும் இந்த ஸ்படிக மாலை அவர்கள் உள்ளத்தில் புகுத்தி, அவர்களையும் புனிதப்படுத்தி விடும்.’ என்று கூறி கங்கை மறைந்தாள். பீஷ்மர் கண்ணீருடன் தன் தாயின் கருணையை எண்ணி ஸ்படிக மாலையை அணிந்து கொண்டார்.” என்று கண்ணன் சகாதேவனிடம் கூறி முடிக்க,
சகாதேவன் கண்ணனிடம், “கண்ணா! எங்கள் எல்லோர் மனதிலும் நீயே கேள்விகளை எழுப்பி, அதற்கு நீயே விடைகளையும் கூறிவிடுகிறாய்.
” உன் ஆயிரம் திருநாமங்களை கொண்ட இந்த விஷ்ணு சகஸ்ரநாமம், யாவர் பாபங்களையும் கங்கையை போலவே நீக்க வல்லது.
“பீஷ்மரின் ஸ்படிக மாலையை அணிந்து, வியாசர் உதவியுடன் சகஸ்ரநாமத்தை எழுதி இந்த உலகுக்கு அளிப்போம். அதை படித்து யாவரும் புனிதமடையட்டும். அதற்கு அருள் புரிவாய் கண்ணா..” என்று சகாதேவன் கண்ணனை வணங்கி நின்றான்.
–ஓம் நமா பகவதே வாசு தேவாய நமஹ.
