துளசி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
துளசி செடியின் அடி பக்கத்தில் இருந்து எடுக்கக்கூடிய மரக்கட்டையில் இருந்து செய்யக் கூடியது தான் துளசி மாலை. துளசிச் செடியின் சின்ன சிறிய மரத்துண்டுகளை வைத்து தயாரிக்கப்படுவதே உண்மையான துளசி மாலை ஆகும்.
துளசி மாலையின் பலன்கள்:
துளசி மாலையை நாம் அணிந்து கொண்டால் வெற்றி நம்மை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதோடு மட்டுமல்லாமல் இயற்கையாகவே இந்த துளசிமாலையானது நம்முடைய உடலின் குளிர்ச்சியையும், சூட்டையும் சம நிலையில் வைத்திருக்கும்.
துளசி மாலையை எவ்வாறு அணிய வேண்டும்?
கடையில் இருந்து புதியதாக வாங்கி வரப்பட்ட துளசி மாலையாக இருந்தால், அதை அப்படியே கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடாது. முதலில் மஞ்சள் தண்ணீரில் அதை நன்றாக ஊறவைக்கவேண்டும். மஞ்சளை தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு துளசி மாலையை, இரண்டு மணிநேரம் அந்த மஞ்சள் தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்பு நல்ல தண்ணீரில் போட்டு கழுவி, அதன் பின்பு உங்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு அல்லது மகாலட்சுமி படத்திற்கு சாத்திவிட்டு பிறகு அணிந்துக்கொள்ளலாம்.
ஜபத்திற்காக எந்த ஒரு மாலையை பயன்படுத்தினாலும், நாம் ஜெபம் செய்யும்போது நம் கையில் அந்த மாலையை உருட்டும் போது, அது அடுத்தவர்களுடைய கண்ணிற்கு கட்டாயம் தெரியக்கூடாது. பெண்களாக இருந்தால், தங்களுடைய முந்தானையில் ஜெபமணி மாலையை மறைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் தங்களுடைய அங்கவஸ்திரத்தை கொண்டு மறைத்துக் கொண்டுதான் ஜெப மாலையை உருட்ட வேண்டும் என்பது சாஸ்திரம். சிலர் இந்த மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளாமல் ஜபம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அல்லது மந்திரத்தை உச்சரிக்க கணக்கு வைத்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்துவார்கள்.
கழுத்தில் அணிந்து கொள்வதற்காக வாங்கினாலும் சரி. ஜெபம் செய்வதற்காக வாங்கினாலும் சரி. மேற்குறிப்பிட்ட முறையை செயல்முறை படுத்திய பின்புதான் துளசி மாலையை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.
உங்கள் கழுத்திலோ அல்லது மணிகட்டிலோ நீங்கள் துளசி மாலையை அணிகிற போது அலாதியான ஒரு பாதுகாப்பு உணர்வு மேலெழும். இதை சற்று நவீன அறிவியலுடன் தொடர்பு படுத்தினால் துளசி மாலையை தொடர்ந்து அணிவதால், இன்றைய காலத்தின் மன அழுத்தங்களிலிருந்து விடுபட முடிகிறது என்கின்றனர்.
ஸ்லோகம்:
துளசி மாலையை ஏந்தியவாறு சொல்லப்படும் மந்திரம்
“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே||
பார்ப்பதற்கு இது மிக எளிதான மந்திரமாக தோன்றினாலும் கலியுக பாபங்களிலிருந்து நமக்கு முக்தி அளிக்க கூடிய முக்கிய மந்திரம் இது என்கின்றனர் பெரியோர்.
இதிலிருக்கும் மற்றொரு முக்கிய அம்சம், இந்த சாதனா எளிமையாக இருக்கும். இந்த மாலையை கையில் வைத்திருக்கும் அல்லது அணிந்திருக்கும் எவரும் இந்த வித்தியாசத்தை உணர கூடும்.
அதாவது, அவர்கள் இந்த மாலையுடன் இருக்கும் போது, அவர்களின் கவனம் சிதறாமல் மிகவும் கவனத்துடன் பிரார்த்தனையில் வழிபாட்டில் இருக்கக்கூடும். அதுமட்டுமின்றி கையில் துளசி மாலையை வைத்தவாறே மந்திர உச்சாடனம் செய்வது நம்மை கிருஷ்ண பெருமானுக்கு மிக அருகில் எடுத்து செல்லும் வல்லமை கொண்டது என நம்புகின்றனர் பக்தர்கள்.
இந்த துளசி மாலையில் 108 மணிகள் இருப்பது வழக்கம். இந்த மணிகளை ஒவ்வொன்றாக நகர்த்தி மந்திரம் அல்லது ஸ்லோகம் சொல்கிற போது ஒலியின் சக்தி மிகுந்த ஆரா நம்மை சுற்றி உருவாகிறது.
