சிறந்ததோர் ஆச்சார்யாப் பெருமான் தன்னுடைய அன்பர்களுக்குச் சொல்லும் வாக்கு பலித்திடுமா?.
நம்பிள்ளை என்னும், அற்புத வைணவ ஆச்சார்ய மஹான். அருளிச்செயலான ப்ரபந்தத்திற்கு 9000 படி என்னும் வியாக்கியானமும், நூற் பாவும் இயற்றியுள்ள, வடக்கு திரு வீதிப் பிள்ளை மற்றும் வியாக்கியான பூஷணம் பெரியவாச்சான் பிள்ளையின் சர்வ சிரேஷ்ட குரு மஹான்.
ஒரு சமயம் கோவில் திருப்பணிகள் நடக்கும் காலத்தில் ஒரு சிறிய அகத்தினில் தம்முடைய முதலிகளோடு (அத்யந்த கைங்கர்ய சீடர்கள்) உடன் தங்கியிருந்தார். இட வசதி குறைவாக இருந்ததால் நெருக்கப் பட்டிருந்தது இல்லம்.
அவர் திருமாளிகைக்கு அருகில், நம்பிள்ளையின் பரம ஆஸ்ரிதராக இருந்த ஒரு வைணவ அம்மையார் தங்கியிருந்தார். அவருக்கு இரண்டு குடில்கள் இருந்தன.
நம்பிள்ளையின் சிஷ்யர்கள், அவ்வம்மையாரிடம், இட நெருக்கடிப் பற்றி தெரிவித்து, ஒரு குடிலை ஒதுக்கித் தந்தால், நம்பிள்ளை சில முதலிகளோடு தங்கிட சௌகரியப்படுமே என்று விண்ணப்பித்தார்கள்.
அம்மையார் திடமாகச் சொன்னார்கள். ‘ஸ்வாமிகள் எனக்கு வைகுந்தத்தில் கண்டிப்பாக இடம் பெற்றுக் கொடுப்பார் என்னில், இரண்டு குடில்களையும் அவருக்குச் சமர்ப்பிக்க ஆக்ஷேபமில்லை’.
இது பற்றி அறிந்த நம்பிள்ளை ‘வைகுண்டத்து அதிகாரி க்ஷிராப்தி நாதன். அம்மையாருக்கு இடம் தர வேண்டி எம்பிரானுக்கு விண்ணப்பம் தருகிறேன்’ என்றார்.
நம்பிள்ளையின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாத அம்மையார், ‘ஓலைக்குறிப்பில் இது பற்றி நீர் எழுதிக் கொடுத்தால் இரண்டு குடில்களையும் ஒப்படைக்க உடன் படுகிறேன்’ என்றாராம்.
நம்பிள்ளையும், எம்பெருமானிடத்தில் விண்ணப்பிப்பதைப் போன்று ‘இந்த இடத்தில இந்த நாளில் இந்த நேரத்தில் இந்த அம்மாளுக்கு வைகுண்டத்தில் இடம் கொடுத்தேன்’ என்று ஒரு ஓலையில் எழுதித் தந்தார்.
என்ன ஆச்சரியம். நம்பிள்ளை எழுதிக் கொடுத்த அதே நாளில், அம்மையாருக்கு பரம பத பிராப்தி கிடைத்தது.
மேற்சொன்னது குரு பரம்பரையில் பேசப்பட்ட கதை. பிரமாணங்கள் கிடைப்பது அறிது.இது போலெல்லாம் இப்போது நடக்குமா?
சிரேஷ்ட மஹாநுபவர்களின் வார்த்தைகளை எக்காலத்திலும் பொய்க்க விடுவதில்லை எம்பிரான் என்பதற்கு மேலும் ஒரு சம்பவம். கிட்டத் திட்ட 70 வருடங்களுக்குள் நடந்தது.
மேற்சொன்ன தம்முடைய மானசீக ஆச்சார்யனான நம்பிள்ளைக்கென்று ஒரு கோவிலை உண்டாக்கி அர்ப்பணம் செய்து வந்த காஞ்சிபுரத்து மஹான் ஒருவரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம்.
குமாரவாடி என்னும் கிராமத்தைச் சேர்ந்த, கிருஷ்ணமாச்சார்யார் ஸ்வாமிகள் என்பவர், வயது 68, திருக்காஞ்சியில் தேவராஜ பெருமாளைச் சென்று சேவிக்காத நாள் ஒன்றும் இருந்ததில்லை.
அன்னாரின் ஒரே பிரார்த்தனை தன்னுடைய வைகுந்தப் பிராப்தி, முக்தி க்ஷேத்ரமான திருக்காஞ்சியில் நிகழ்ந்திட வேண்டும் என்பது.
ஒரு முறை நம்பிள்ளையின் உத்சவத்திற்கு காஞ்சிபுரம் வந்து மனதாரக் கொண்டாடி, மேற்சொன்ன மஹானிடத்தில் விண்ணப்பம் செய்தார் குமரவாடி ஸ்வாமிகள்.
‘தேவரீர் கிருபையினால் அடியேன் எல்லாம் கிடைக்கப் பெற்று உள்ளேன். ஆனாலும் நீர் அடியேனுக்கு திருக்காஞ்சியில் தேஹ வியோகம் (மரணம்) உண்டாகி பரம பத ப்ராப்திக்கு அனுக்ரஹிக்க வேண்டும்’ என்று விண்ணப்பித்தார்.
ச்ரேஷ்டராய் எம்பெருமானை பலருக்கும் திவ்ய அனுபவமாக்கிய மேற்சொன்ன திருக்காஞ்சி பண்டித மஹானும் ‘நீர் அடியேனை விட வயோதிகர். ஆசீர்வதிக்க அருகதை இலேன். தேவப் பெருமாள் தங்கள் அபீஷ்டத்தை (பிரார்த்தனையை) நிறைவேற்றி வைப்பார்’ என்று உரைத்தார்.
அடுத்த நாளே மேற்சொன்ன குமாரவாடி ஸ்வாமிகளுக்கு தேஹ வியோகம் ஏற்பட்டு, திருக்காஞ்சியிலேயே வைகுண்டப் பிராப்தி கிடைத்ததது.
எம்பெருமானுடனும், நம்பிள்ளை போன்ற பூர்வாசிரியர்கள் அனுக்கிரகமும் நிறையப் பெற்ற, அவருடைய அருள்வாக்கு சத்தியம் ஆனது, மேற்சொன்ன காஞ்சி பண்டித மஹான் சர்வ ஸ்ரேஷ்ட சாஃஷாத் ‘மஹான் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகள்’
