வெற்றிகளை குவிக்கும் விஜயா ஏகாதசி!
பொதுவாக விஜயம் என்றாலே வெற்றி என்பார்கள். வாழ்க்கையில் தினந்தோறும் போராடிக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி. இதனை ராமபிரானே கடைபிடித்ததாக ஐதீகம். நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள் துன்பத்தையும், நல் வினைகளோடு பிறந்தவர்கள் வாழ்வில் நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள் துன்பத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதற்கான தீர்வையும் சொல்கின்றன.
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை நீக்கும் விரத நாட்களை ரிஷிகளும், முனிவர்களும் கண்டு அதனை ஒரு முறையாக வகுத்துள்ளனர். யார் எந்த தெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும், அவர்களது இஷ்ட தெய்வத்தை வழிபட ஏற்ற நாட்களை உருவாக்கி வழிபடும் முறைகளையும் வகுத்துள்ளனர்.
விஷ்ணுவை வழிபட உகந்த தினம் ஏகாதசி. வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் ஏற்படும் ஏகாதசி திதி தினத்தில் விஷ்ணுவை வழிபட துன்பங்கள் தீரும். ஒவ்வொரு ஏகாதசி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இன்று விஜயா ஏகாதசி. தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் தீர வாழ்வில் வெற்றி பெற வேண்டிய வழிபாடுகளை செய்து காட்டியவர் ராமச்சந்திர மூர்த்தி.
அவர் மேற்கொண்ட விரதங்களில் ஒன்று தான் விஜயா ஏகாதசி. வக்தால்ப்ய ரிஷியிடம், ராவணனை வதம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று ராமர் கேட்டார். அதற்கு அந்த ரிஷியோ விஜயா ஏகாதசி விரதம் குறித்து விளக்கினார். ரிஷி கூறியதைப் போன்றே அந்த விரதத்தை கடைபிடித்து ராமன் அந்த பலனை அடைந்தார் என்று புராணம் கூறுகிறது.
இந்த நாளில் உபவாசம் விரதம் இருந்து வழிபடுவது என்பது சிறப்பு. உப+வாசம் என்றால் அருகில் வசிப்பது. இரையைத் தவிர்த்து இந்த நாள் முழுவதும் இறை சிந்தனையில் இருந்தால் அந்த இறைவன் நம் அருகில் வாசம் செய்வான் என்பது பொருள். வேண்டுமென்றால் துளசி தீர்த்தம் அருந்தலாம். விஷ்ணு பகவானுக்குரிய சகஸ்ர நாமத்தை இந்த நாளில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி சொல்ல முடியாதவர்கள் சகஸ்ர நாமத்தை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். விஜயா ஏகாதசி நாளான இன்று கோயிலுக்கு சென்று விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவது முழு பலனைத் தரும் என்பது ஐதீகம்.
