குளித்து விட்டு ஈர துணியுடன் வழிபாடு செய்யலாமா?
ஈரம் தோய்ந்த ஆடைகளுடன் வழிபாடு என்பது பெற்றோருக்குச் செய்யும் ஈமச்சடங்கிற்கு மட்டுமே உரித்தானது. இறை வழிபாட்டிற்கு உகந்தது அல்ல. மடி, ஆசாரம் பார்ப்பவர்கள் கூட ஈரத்துணிகளை நன்றாக பிழிந்து சற்று உலர்த்திய பின்னரே அணிந்துகொள்ள வேண்டும். உலர்வதற்கு தாமதம் ஆகும் பட்சத்தில் துணிகளை நன்றாக பிழிந்து ஏழு முறை நன்றாக உதறிய பின்னர் உடுத்திக் கொண்டு வழிபாடு செய்யலாம் என்கிறது தர்மசாஸ்திரம்.
ஆனால், இதிலும் விதிவிலக்கு என்பது உண்டு. அங்கப்பிரதட்சிணம் செய்யும் போதும், அம்பாளுக்கு வேண்டிக்கொண்டு கரகம், பூச்சட்டி ஆகியவற்றை எடுக்கும்போதும் மேலே மஞ்சள்நீர் ஊற்றிக் கொண்டு ஈரம் சொட்ட சொட்ட வழிபாடு செய்வார்கள். மற்றபடி சாதாரண சமயங்களில் ஈரத்துணியுடன் வழிபாடு செய்வது என்பது உகந்ததல்ல.
பூஜையறையில் தனியாக முருகனின் வேலாயுதத்தை மட்டும் பூஜிக்கலாமா?
சுப்ரமணிய ஸ்வாமியை குலதெய்வமாக உடையவர்கள் வேலாயுதத்தை வைத்து பூஜை செய்யலாம். அதுவும் அளவில் சிறியதாக இருக்க வேண்டும். அதிக பட்சம் அரை அடி உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது. அளவில் பெரியதான வேலாயுதத்தை ஆலயத்தில் மட்டுமே வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடுவது உகந்தது அல்ல.
கடைகளில் பலவிதமான ஜபமாலைகள் விற்கின்றன. துர்க்கை பக்தனான நான் எந்த ஜபமாலையைப் பயன்படுத்த வேண்டும்? ரக்த ஸ்படிகம் என்றழைக்கப்படுகின்ற சிவப்பு நிற ஸ்படிக மணிகளால் ஆன ஜபமாலையைப் பயன்படுத்தலாம். துர்க்கையம்மனை பூஜை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இந்த மாலையை அணிவது கூடாது.
கேசரி, பூசரி, மத்திய லட்சணம், ஷண்முகீ, சாம்பவி:
1 – கேசரி – யோகி தனது இரு கண்களின் கருவிழிகளை நடுவில் நிறுத்தி, அசையாமல் மேல் நோக்கி, அருள் வெளியாகிய சிதம்பரத்தை மனதில் நிறுத்தி பார்த்துக் கொண்டிருப்பது.
2- பூசரி – இதில் யோகியானவர் அசைக்காமல் இருகண்களின் கருவிழிகளால் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டிருப்பது.
3 – மத்திய லட்சணம் – இருகண்களையும் அரைப்பார்வையாக மூடிக் கொண்டு, அசையாமல் கருவிழிகளால் மூக்கின் மத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பது.
4 – ஷண்முகீ – இதில் யோகியானவர் தன் மூக்கு, கண்கள், வாய்,காது இவற்றை கைவிரல்களால் மூடிக் கொண்டு. வெளிப் பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பி,இருகருவிழிகளையும் அசையாமல் நடுவில் புருவ மத்தியில் நிறுத்தி பார்க்க வேண்டும்.
5 – சாம்பவி – சிதாகாசம் என்கிற சகஸ்ராரத்தில் மனதை நிறுத்தி இரு கண்களையும் மூடாமல் கருவிழிகளை மேல் நோக்கி பார்த்தபடி அசையாமல் சொக்கியிருப்பது. இதில் எல்லாமே நாம் உள்ளிருந்துதான் தியானம் செய்கிறோம் என்றாலும் மனமானது வெளியில் இருப்பதாக பாவித்துக் கொள்ள வேண்டும். எல்லாமே பழகப்பழக கைகூடும்.இந்த சகஸ்ராரமே பிந்துஸ்தானம்.இதையே தேவலோகம் என்று சித்தர்கள் மறைபொருளாகக் கூறுவார்கள். இங்குதான் சோம்பானம் என்னும் தேவாமிர்தம் சுரக்கின்றது. கோவில்களில் தீர்த்தம் வழங்கப்படுவது இது சுரப்பதை நினைவில் கொள்ளவே. பெரிய கோவில்களில் ஏழு பிரகாரங்கள் வைத்துக் கட்டப்படுவது, மனித உடலில் உள்ள முக்கியமான ஏழு ஆதாரங்களைச் சுட்டிக் காட்டவே. இதெல்லாமே நமக்கு சித்தர்கள் அருளியது.
