அக்னி நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா?
அக்னி நட்சத்திரம் என்பது, மே 4 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு அனுசரிக்கப்படுகிறது. மேலும் இது, கத்திரி வெயில் காலம். ஆனால் அக்னி நட்சத்திரம் என்பது எப்போதுமே கெட்ட காலமில்லை. இந்த நாட்களில் சுப காரியங்களையும் தாராளமாகச் செய்யலாம். தீவிரமான உடலுழைப்பைக் கோரும் வீடு கட்டுதல் போன்ற கடினமான பணிகளுக்கு இது உகந்த காலம் இல்லையே தவிர, கட்டி முடித்த வீட்டிற்கு குடியேற அக்னி நட்சத்திரத்தில் எந்த தடையும் இல்லை.
அதே போல வாடகை வீடு மாறுதல், புதிய வீடு குடியேறுதல் போன்ற விஷயங்களுக்கும் எந்த தடையும் இல்லை என்கிறார்கள். மேலும், உபநயனம் செய்வித்தல், பெண்பார்த்தல், திருமண நிச்சயதார்த்தம், சீமந்தம் ஆகிய சுப காரியங்கள் போன்றவற்றை இந்த காலகட்டத்தில் தாராளமாக நடத்தலாம். அதே போல அக்னி நட்சத்திர காலத்தில் மட்டும் பல முகூர்த்த தினங்கள் வருகின்றன. எனவே திருமண சுபகாரியம் செய்ய எந்த தடையும் இல்லை. அதனால் எந்த தோஷமும் இல்லை. மேலும், தோஷங்கள் தீர்க்கும் ஹோமங்கள் செய்யவும் இந்த நாள்கள் மிகவும் உகந்தவை என்கிறார்கள் ஜோதிடர்கள்.
அக்னி நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை:
வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலத்தில் தான தர்மங்கள் செய்வது நல்லது.. குறிப்பாக பிறரின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு தெருவிலும் இலவச தண்ணீர் தொட்டி வைத்து வழங்குவது நல்லது. வீட்டின் முன் ஒரு குடத்தில் குடிநீர் வைப்பது நல்லது. வறியவர்களுக்கு உணவு, உடை தானம் செய்வதும் புண்ணியத்தைத் தரக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். கிராமப்புறங்களில் அக்னி நட்சத்திர காலத்தில் கோழிகள் தன் முட்டைகளை அடைகாக்க அனுமதிக்கப்படுவதில்லையாம். ஏனெனில் முட்டைகளை அடைகாக்க கோழிகள் அமர்ந்தால், ஏற்கனவே அதிக வெப்பநிலை நிலவும் போது, அடை காப்பதற்காக கோழிகள் முட்டைகளின் மீது அமருகையில், கோழிகள் உருவாக்கும் வெப்பம் என இரண்டு விதமான வெப்பங்கள் சேர்ந்து முட்டைகள் கூமுட்டை ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருப்பதால் கத்திரி வெயில் முடிந்த பின்னரே கோழிகள் முட்டைகளை அடைகாக்கக் கூட கிராமத்தில் அனுமதி தரப்படுகிறதாம்.
