சனீஸ்வரரை வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?
சனீஸ்வரரை வீட்டில் வைத்து பூஜிக்க விரும்புகிறேன். அப்படி வீட்டில் வைத்து சனி பகவானை பூஜ்ஜிக்கலாமா? என்று கேட்டால் உண்மையில் சனீஸ்வரை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. அது நல்லதல்ல. முதலில் சனியை ஈஸ்வரன் என்று சொல்வது தவறு. சனைஸ்சரன் என்ற வார்த்தைதான் மருவி சனீஸ்வரன் என்றாகி விட்டது. சனைஸ்சரன் என்ற சொல்லுக்கு மெதுவாக நகர்பவன் என்று பொருள்.
நவகிரகங்களை கடவுளர்களாக பாவித்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இறைவன் இட்ட பணியை சரிவரச் செய்யும் ஏவலாட்களே நவகிரகங்கள். ஆலயத்தில் கூட அவர்களை பரிவார தேவதைகளாகத்தான் பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள். சனி, இராகு, கேது மட்டுமல்ல குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது.
அது நல்லதல்ல. ஆலயத்தில்கூட முதலில் மூலவரை வணங்கிய பின்புதான் பரிவார தேவதைகளான நவகிரகங்களுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும் பொதுவாகவே நவகிரகங்களை நாம் சுற்றக்கூடாது நவகிரகங்கள் தானாகவே இயங்கி நம்மை சுற்றுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
சனியின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மற்றொரு வழியும் உள்ளது. எவரொருவர் பொய் சொல்லாமல், நேர்மையாக வாழ்கிறாரோ அவர்கள் சனிபகவானின் தாக்கத்திலிருந்து நிச்சயமாக தப்பித்துக் கொள்ளலாம் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள உண்மை. ஏனென்றால் பிரச்சினைகள் ஏற்படும்போது பிரச்சனைக்காக பயந்தவர்கள் பொய் கூறினாலும் அல்லது பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள குறுக்கு வழியில் சென்றாலும் தான் பாதிப்புக்கள் அதிகமாகும்.
நீங்கள் செய்த தவறை ஒத்துக் கொண்டும், பிரச்சினை ஏற்பட்டாலும் நேர்வழியில் தான் செல்வேன் என்று செயல்பட்டு பாருங்கள், உங்களுக்கு பாதிப்பானது தானாகவே குறைந்துவிடும். சனிக்கிழமைகளில் எள் சாதம் வைப்பதோடு விட்டுவிடாமல், தினந்தோறும் நீங்கள் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதற்கு முன்பு, எச்சில் படாமல் அந்த காகத்திற்கு வைப்பது பொதுவாக அனைத்து விதமான தோஷத்திற்கும் நல்லது.
வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து சனி பகவானை மனதார வேண்டி எள் சாதத்தை கொண்டு காகத்திற்கு வைப்பது மிகவும் நல்லது. இப்படி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவறாமல் செய்து வர வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் குறைவதை உங்களாலேயே உணர முடியும்.
