மகா சிவராத்திரி – நான்கு கால பூஜையின் மகத்துவம் என்ன தெரியுமா?
மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவன் கோயில் அல்லது குல தெய்வ கோயிலில் பின்வரும் மந்திரங்களை சொல்ல வேண்டும்; சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
முதல் கால பூஜை: (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)
சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பசும்பால் தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்.
சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால், வேத நாயகனின் ஆசி கிட்டும். பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும். இதனால், பெரும் புண்ணியம் கிட்டும். இதனால், அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள். எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்.
பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள், சிவராத்திரி பூஜைக்கு உங்களால் முடிந்த உதவிகளை அருகில் உள்ள சிவாலயங்களுக்கு கொடுக்கலாம். இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும். ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால், ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம். அதுவும் இயலாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்த்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; இதனால், ருத்ரம், ரிக் வேதம், சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்.
இரண்டாம் கால பூஜை: (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)
இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால், நம்முடைய பிறவி முடிந்து, மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது. பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும். ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகத்திற்கு, பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள்; சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்; காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு.
சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது. தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல, செல்வம் பெருகும். சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்; இதனால், லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்; நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;
இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில் (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை) யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண யஜீர்,சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன; இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்; ஒருவேளை, யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை;
சிவாய நம என்ற சூக்சும பஞ்சாட்சரத்தை இந்த இரண்டாம் காலம் முழுவதும் சொல்ல வேண்டும்.
மூன்றாம் கால பூஜை: (நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)
இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும். சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும். வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும். சாம வேதம் பாடவேண்டும்; சாமவேதம் தெரியாவிட்டால், சிவயசிவ காரண பஞ்சாட்சரத்தை நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்.
போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும். இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர். இந்த நேரத்தில் யார் சிவயசிவ; சிவயசிவ என்று ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்.
நான்காம் கால பூஜை: (பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)
கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும். மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும். வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும். பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும். இதுவே சுத்த அன்னம்.
அதர்வண வேதம் பாடவேண்டும். அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும். குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால், உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும். அதர்வண வேதம் தெரியாவிட்டால், பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது.
சிவசிவ என் கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே!
இதையும் பாட இயலாதவர்கள் சிவசிவ என்ற அதி சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை இப்படி சொல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.